காஜாங் இடைத்தேர்தல் ஒரு கண்ணோட்டம் – கி . சீலதாஸ்

Kajang byelectionகாஜாங் இடைத்தேர்தல்  தேவைதானா என்ற கேள்வி எழுந்தது மட்டுமல்ல நடப்பு சட்டமன்ற உறுப்பினர் எக்காரணத்தையும் காட்டாமல் டத்தோஸ்ரீ அன்வர் அந்தத் தொகுதியில் வேட்பாளராக நின்று வெற்றி பெறவேண்டுமென்ற  ஒரே நோக்கத்தோடு ராஜிநாமா செய்தது நியாயமா  என்ற கேள்வியும் எழுந்தது. அன்வரும் அவர் ஆலோசகர்களும் நினைத்தது ஒன்று, நடந்தது ஒன்று.

அரசியல் சாணக்கியம் 

அன்வர் மீதான ஓரினப் புணர்ச்சி  குற்றச் சாட்டிலிருந்து விடுபட்டது, அரசு மேல் முறையீடு செய்தது, விசாரணை உடனடியாக நடத்தப்பட்டது, குற்றவாளியெனத்  தீர்ப்பளிக்கப்பட்டது,  ஐந்தாண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது யாவும்  திடீர் திருப்பங்கள். அன்வர் தேர்தலில் நிற்கமுடியாது என்பதல்ல இன்றைய சூழல், மேலும் ஒரு சட்ட கேள்வியை கூட்டரசு நீதிமன்றத்தில் எழுப்பி  வழக்கை வாதிடலாம். யாருக்கு வெற்றி  என்பதை சொல்ல முடியாது. மேலும் குழப்பத்துக்கு காரணியாக இருக்கக்  கூடாது என்ற எண்ணத்தோடு அன்வர்  காஜாங்  சட்ட மன்றத் துணைத்  தேர்தலில் பங்கு பெறாமல்  ஒதுங்கிக்  கொண்டு தமது துணைவியார் கெஅடிலானின் தலைவர் டத்தோஸ்ரீ வன் அஸிஸாவை வேட்பாளராக நிறுத்தத் தீர்மானித்திருப்பது ஒரு பெரும் அரசியல் சாணக்கியம்  என்றுகூட சொல்லலாம்.

காஜாங் மக்கள் மட்டுமல்ல, பொதுவாகவே நாட்டு  மக்கள், வெளிநாட்டவர்கள் கூட இந்த காஜாங் துணைத் தேர்தல் வருவதற்கான காரணத்தைச் சிந்திக்காமல் இல்லை.  சிலாங்கூரில் மக்கள் கூட்டணி ஆட்சி நடந்த  போதிலும் நடப்பு மந்திரி புசார் டத்தோ காலிட்டுக்கும் மக்கள் கூட்டணி துணைத்தலைவர்  அஸ்மின் அலிக்கும் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு கட்சியில் பிளவை  ஏற்படுத்தும் தன்மையைக் கொண்டிருப்பதை  உணர்ந்துதான் இருவரையும் பகைத்துக் கொள்ள முடியாது, இருவரையும் இழக்கமுடியாது. ஒரே குடையின் கீழ் இருவரையும் அரவணைத்து  செல்ல வேண்டுமென்கின்ற யூகம் தான் அன்வர் துணைத் தேர்தலில் போட்டியிட  முடிவு  செய்தார்.  இதன்வழி சிலாங்கூரில் ஏற்பட்டிருக்கும்  அரசியல் சிக்கலுக்கு முடிவு காண முடியும் என்பதே அன்வரின் கருத்தும், நம்பிக்கையும்.

உட்கட்சி  பூசலைத் தீர்க்க இப்படி ஒரு அணுகுமுறை சரியா என்பதே தேசிய முன்னனியின்  போர்முழக்கம். இதே கருத்தை பல நடுநிலமை வகிப்போரின் கருத்துமாகும். அதே சமயத்தில்  ஒரு சின்ன எறும்பை கொல்லுவதற்கு  பெரிய  சுத்தியல்  தேவையா என்ற கேள்வியும் எழுந்தது. அதாவது, அன்வரின் செல்வாக்கைத் தவிடுபொடியாக்கிவிட வேண்டுமென்ற ஆவலோடு தேசிய முன்னனி அரசு மேற்கொண்ட நடவடிக்கை  நியாயமானதா  என்றகேள்வியே  அது.

குறிப்பாக, அரசு சட்டத்துறையில் எத்தனையோ திறமைவாய்ந்த வழக்கறிஞர்கள்  இருக்கும்போது அம்னோவின் உறுப்பினரான டான்ஸ்ரீ முகம்மது ஷஃபியை பிரத்தியேகமாக அரசு தரப்பு விவாதத்தை மேற்கொள்ளச் செய்தது விசித்திரமானப் போக்காகும். வெளியிலிருந்து ஒரு வக்கீலைக் கொண்டு வரவேண்டுமென்ற  முடிவு, அரசு சட்டத்துறையில் ஓரின புணர்ச்சிக்கு குறித்த வழக்கை நடத்த திறமையானவர்கள்,  அனுபவமுள்ளவர்கள் இல்லையா? ஓரின புணர்ச்சிக்கு வழக்கு புதியது அல்லவே  குறிப்பாக  அரசு சட்டத்துறைக்கு பழக்கப்பட்டுப்போன வழக்கு என்பதை யார் மறுப்பார்கள்?

அடுத்து, இந்த தனியார் வக்கீலுக்குக் கொடுக்கப்பட்ட ஊதியம்தான் எவ்வளவு? இது தேவைதானா என்ற கேள்வியும் எழுந்துள்ளதை அரசு புறந்தள்ளமுடியுமா?

இப்படிப்பட்ட சூழலில் அன்வர் காஜாங் துணைத் தேர்தலிலிருந்து ஒதுங்கி தமது மனைவி வன் அஸிஸா வேட்பாளராக  போட்டியிடச்  செய்தது சாதுர்யமானப்போக்கு  என்றும் கருதப்படுகிறது.

விசப்பரிட்சை

k anwar sodomyவன் அஸிஸா மீது யாதொரு குற்றச்சாட்டும் கிடையாது, குளுவாங்  நாடாளுமன்ற லியூ சின் தொங் சொன்னதுபோல் அஸிஸா மீது யாரும் குறை சொல்ல வழியில்லை அவர் மிகவும் அடக்க ஒடுக்கத்துடன் நடந்து  கொள்வதும், கணவரின் சோதனைக் காலத்தில் அவரோடு நின்றவர். குடும்ப பெண்மணியாகத் திகழ்ந்து,  தம்  பிள்ளைகளுக்குப் பாதுகாவலராக இருப்பவர், இப்படிப்பட்ட பின்னணியைக் கொண்ட வன் அஸிஸா மகளிர் கவனத்தையும் மதிப்பையும் பெற்றவர்.  எனவே அவரை வேட்பாளராக நியமித்தது அதி விவேகமான அரசியல் என்றும் வர்ணிக்கப்படுகிறது. வன் அஸிஸாவைக் காஜாங்துணைத்  தேர்தல்  களத்தில் இறக்கியிருப்பது தேசிய முன்னணிக்குத் தலைவலி கொடுத்திருக்கிறது என்றும் கூறப்படுகிறது. வன் அஸிஸா மாபெரும் வெற்றிபெறுவார் என சிலாங்கூர் மாநில முன்னாள் மந்திரி புசார் முகம்மது கிர் தோயோ குறிப்பிட்டிருப்பதும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

முகம்மது கிர் தோயோவின் கருத்தின்படி காஜாங் வாக்காளர்களின் ஆதரவும் தேசிய முன்னணிக்கு  சாதகமான நிலையில் இல்லையாம். இதெல்லாம் ஒரு  புறமிருக்க, இந்தத் துணைத்தேர்தல்  தேசிய முன்னணி அரசுக்கு விஷப்பரிட்சையாக  அமையலாம் என்றும்  கருதப்படுகிறது.

13ஆம்  பொதுத்தேர்தல் முடிந்து ஓராண்டு  நெருங்கிக்  கொண்டிருக்கும்  வேளையில்  இன,மத, நாட்டின் பொருளாதாரம், நீதி பரிபாலனம், காவல்துறை  நடவடிக்கைகள், சட்ட அமலாக்கம், போன்ற பிரச்சினைகளில் நடுவர் அரசும்  தேசிய  முன்னணி  மாநில  அரசுகளும்  எப்படி நடந்து கொண்டன, அவற்றின் அணுகுமுறை எப்படி இருந்தது  என்பதைப் பற்றி  காஜாங் மக்கள் தங்களின்  தீர்ப்பை வாக்களிப்பின் மூலம் வழங்குவார்கள் என்றும் கருதப்படுகிறது.

இதற்கிடையில்  மலேசிய விமானம் எம்எச்(MH 730) விமானத்தில் பயணித்த பயணிகளோடும், பணியாளர்களோடும்  மறைந்துவிட்ட  நிலையில் மக்களிடையே எழுந்துள்ள பீதியும் ஆதங்கமும் தேசிய முன்னணிக்குச் சாதகமாக அமையவில்லை என்ற குறைபாடும்  வலம்  வருகிறது.  இதற்குக்  காரணம், அரசு சரியான  விளக்கங்களைக் கொடுக்க  முடியாதது  ஒரு  பக்கம்  இருக்க, முன்னுக்கு முரணாக  செய்திகளை  வழங்குவதால் அனைத்துலக  ஊடகங்கள்  கூட  எரிச்சலடைந்துள்ளதைஉதாசீனம்  செய்ய முடியவில்லை.

ஒரு 31 வயது  பயணியின்  தந்தை  அழுதவாறு, “ஒரே மகன். இருக்கிறானா, இல்லையா என்று தெரியவில்லை. விமானம்  எப்படி  காணாமல்  போயிற்று? அதை  கண்டுபிடிக்க  முடியவில்லை  என்றால் வேதனையாக இருக்கிறது” என்றார்.

MH 730  காணமற்போனது ஒரு துரதிஷ்டம். பல  நாட்களுக்குப்  பிறகும் கண்டுபிடிக்க  முடியவில்லை  என்றால்  பயணிகளின்  உறவினர்கள்  படும் அவஸ்தை  எண்ணிப்பார்க்க  முடியாது.  இந்த வட்டாரத்தில் இதுபோன்ற  சம்பவம் – அதிர்ச்சி தரும் அதிசயம்  இதுவரை நிகழ்ந்ததில்லை. இந்த நேரத்தில் காஜாங் துணைத்தேர்தல்  தேசிய முன்னணிக்கு நல்ல  சகுனம்  என்றும்  சொல்ல முடியாது என்ற கருத்தும் பரவிவருகிறது.

பெர்காசாவோடு முன்னாள்  மலேசிய  தலைமை நீதிபதி

ka ex-cjs-perkasa-இதற்கிடையில்  பெர்காசாவோடு இணைந்த மற்ற அமைப்புகள் தேசிய ஒருமைபாடு  முன்னணி  என்ற  புதிய  அமைப்பை  ஏற்படுத்தியிருக்கிறது.  அதற்கு  முன்னாள்  மலேசிய  தலைமை  நீதிபதி துன் அப்துல் ஹமீது  தலைமைப் பொறுப்பை  ஏற்றுக்கொண்டுள்ளார்.  இது  அரசினால்  உருவாக்கப்பட்ட  தேசிய  ஒருமைப்பாடு ஆலோசனை  மன்றத்துக்கு  எதிராக   அமைக்கப்பட்டிருக்கிறது.

இந்தப்  புது அமைப்பின்  கருத்துப்படி  தேசிய  ஒருமைப்பாடு  ஆலோசனை  மன்றம்  மலாய்க்காரர்களின்  நலனுக்கு  எதிராகச் செயல்படுகிறதாம்.  எனவே, மலாய்க்காரர்களின்  நலனின்  ஆதிக்கத்தை  அமைக்க  முற்படுமாம்  இந்தப்  புது  இயக்கம்.  மலாய்க்கார  முஸ்லிம்களின்  நலனைக்  கருத்தில் கொண்டு  இந்த  அமைப்பு  செயல்படுமாம். அப்படியானால்  இந்திய, சீன முஸ்லிம்களின்  கதி  என்ன?

தேசிய  ஒருமைப்பாடு  ஆலோசனை  மன்றத்தை  மாமன்னர்  அங்கீகரித்ததைச்  சுட்டிக்காட்டும்  முன்னாள்  தலைமை  நீதிபதி  அந்த  அங்கீகாரத்தைப்  பற்றி  கவலை  இல்லையாம்.  தம்கருத்தை  வெளியிட  உரிமை  உண்டாம். மக்கள்  கூட்டணி  ஆட்சியை  நீக்குவதற்கான  கட்டளையைப் பிறப்பித்த  பேராக்  சுல்தானின்  நடவடிக்கை ஒரு  சட்டப் பிரச்சினை. அதை  நீதிமன்றத்தில்  கொண்டு  செல்லலாம்  என்ற  ஆலோசனையைச்  சொன்ன கர்பால்  சிங்கை  குற்றவாளி  எனத்  தீர்ப்பளிக்கப்பட்டு  நான்காயிரம்  வெள்ளி  அபராதம்  விதிக்கப்பட்டார்.அப்துல்  ஹமீது  சொன்ன  கருத்து  எந்த  ரகத்தைச் சேரும்?

மலாயாவின்  சுதந்திரத்தைப்  பற்றி  குறிப்பிட்டிருக்கும்  அப்துல் ஹமீது  அப்போது  நாட்டை மலாய்க்காரர்களிடம்  திரும்பக் கொடுத்திருக்க  வேண்டுமாம்.  மலாய்க்காரர்கள்  காலனித்துவத்தையும்,  மலாயன்  யூனியனையும், கம்யூனிஸத்தையும்  எதித்தவர்களாம். எனவே  சுதந்திரம் அவர்களுக்கு  உரியது.  மலாய்க்காரர்  அல்லாதவர்  சுதந்திர  இயக்கத்தில்  பங்கு  பெறுவதற்குக்  காரணம். அவர்களுக்கு  நன்மை  கிடைக்கும் என்ற நோக்கோடுதான்  என்கிறார்  அந்த  முன்னாள்  தலைமை  நீதிபதி. இது வரலாற்றுப் பூர்வமான கருத்தா  என்பதை  சிந்திக்க வேண்டும். சுதந்திரத்துக்கு முன்னும்  பின்னும்  சீன,  இந்திய  சமூகங்கள்  நாட்டு  சுதந்திரத்துக்கானப் பங்களிப்பை  சிறுமைப்படுத்துவது போல்  இருக்கிறது  என்ற  கருதுவோரும்  உண்டு.

சிறுபான்மையினர்  குறை சொல்லக்  கூடாதாம்  காரணம் பிற நாடுகள்  சிறுபான்மையினருக்கு உரிமை வழங்குவது  அரிதாம். நமது அண்டை  நாடுகளில்  சிறுபான்மையினர் பெயர்  மாற்றம்  செய்து  கொள்ள  வேண்டிய  நிர்பந்தம்  ஏற்பட்டிருக்கிறதாம். சிறுபான்மையினர்  வழிபாடு  தலங்களைக்  கட்டிக்கொள்ள  எந்த  தடையும்  இல்லையாம். அமெரிக்காவில்  முஸ்லிம்கள்  பள்ளிவாசல்  கட்டுவதற்கு  இருக்கும்  சிரமங்களையும்  சுட்டிக்காட்டுகிறார்.

அண்டை  நாடுகளில்  பெயர்  மாற்றம் செய்து  கொள்ள வேண்டும்  என்ற கட்டாய  நிலை  தனிமனிதனின்  உரிமையை  மறுப்பதாகும் . மனித நேயத்துக்குப்  புறம்பானச்  செயல்  எனவே  இதை  உதாரணம்  காட்டி  நம்  நாட்டில்  அப்போது  நிலவிய  முதிர்ச்சியான, பரஸ்பர, பரந்த  மனப்பான்மையோடு  ஒப்பிடுவது  கவலைக்குறியதாகும்.  அண்டை  நாட்டு  அரசியல்  கோட்பாடு  இந்நாட்டுக்கு  ஏற்புடையது  அல்ல  என்பதை  உணர்ந்து  எத்தனையோ  காலமாகிவிட்டது, இதை  புரிந்து  கொள்ளாமல், அல்லது  புரிந்துகொள்ள  மறுப்பது  பெருந்தகவைக் குறிக்கவில்லை.

அம்னோவுக்கு  ஆதரவு  கரம்  நீட்டும்  இயக்கம்  பெர்காஸா; பெர்காசாவோ  உயர்வு  தாழ்வு  மனப்பான்மையே  அரசியல்  நோக்கமாக்  கொண்டுள்ளது.  அதன்  தலைவர்கள்  இனத்துவேஷப்  பேச்சுக்களை  கைவிடுவதாக  இல்லை.  அரசு  என்ன  செய்யும்  என்ற  கேள்வி  ஒருபுறமிருக்க, அம்னோ  இப்படிப்பட்ட  இனமதவாத  இயக்கங்களுடனான  உறவை  துறக்குமா அல்லது  அந்த  உறவு  தேவைதான் என்ற  நோக்கோடு  செயல்படுமா?  உறவு  தேவை என்றால்  அது  எதைக் குறிக்கிறது? பிரகாஸாவின்  கொள்கையை  அம்னோவும்  ஆதரிக்கிறது  என்பதுதானே  அர்த்தம். இதுவும்  மக்களை  துளைத்தெடுக்கும்  கேள்வியென்பது  மட்டுமல்ல  கவலைதரும்  அம்சமாகும்.

அதோடு  அமெரிக்காவில்  பள்ளிவாசல்  கட்ட  சிரமம்  என்கின்ற  அப்துல் ஹமீது  இந்தியாவில்  முஸ்லிம்கள்  சிறுபான்மையினர்  என்ற  போதிலும் அங்கே பள்ளிவாசல்கள்  பல  நூற்றாண்டுகளாக  இயங்குவதைப்  பற்றி  ஏன்  குறிப்பிடவில்லை?அவற்றிற்கு  எந்தத்  தடையும்  பெரும்பான்மையினர்  விதிக்காததை  ஏன்  ஏற்க  மறுக்கிறார்?

ஓர்  அமைப்பு, அதிலும்  அம்னோவின்  ஆதரவை  கொண்ட  பெர்காசா  இப்படிப்பட்ட  விஷமத்தனமான  பேச்சுக்களை  அள்ளி  வீசுவதை  காவல்துறை  என்ன செய்யும்: எப்படிப்பட்ட  நடவடிக்கை  எடுக்கும்  என்பன  போன்ற  கேள்விகள்  எழுந்துள்ளதையும்  இந்த  காஜாங்  துணைத்தேர்தலில்  எழும். மக்கள் தீர்ப்பு  எப்படி  இருக்குமென்பதை  பொறுத்திருந்து பார்ப்போம்.