மீனவர் பிரச்சினை: அதிமுக அரசு மீது சோனியா குற்றச்சாட்டு

Soniaஇலங்கை – இந்திய மீனவர்கள் இடையிலான பேச்சு வார்த்தைக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்த போதிலும் அதற்கு அனுமதி அளிப்பதற்கு அ.திமு.க. அரசு கால தாமதம் செய்தது என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழகத்தில் உள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கலந்துகொண்டு பேசிய சோனியா காந்தி, இலங்கை விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு குறித்து விளக்கினார்.

இலங்கை விவகாரத்தில் தமிழகக் கட்சிகள் தங்களைக் குற்றம்சாட்டுவதாவும், ஆனால், தங்கள் அளவுக்கு இலங்கைத் தமிழர்களுக்குச் செய்தவர்கள் யாரும் இல்லை என்றும் ராஜீவ் காந்தி தன் உயிரையே தியாகம் செய்ததாகவும் சோனியா காந்தி தெரிவித்தார். 2009ஆம் ஆண்டிற்குப் பிறகு இலங்கை தமிழர்களுக்கு எல்லாவிதமான ஆதரவையும் காங்கிரஸ் அரசு செய்துவருவதாக சோனியா காந்தி தெரிவித்தார்.

தமிழக மீனவர்கள் இலங்கைக் கற்படையினரால் கைதுசெய்யப்படும்போதெல்லாம் தங்களுடைய முயற்சியால்தான் விடுவிக்கப்படுவதாகவும் இரு நாட்டு மீனவர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்தபோதும், அ.தி.மு.க. அரசு அதனைத் தாமதப்படுத்தியதாகவும் குற்றம் சாட்டினார் சோனியா காந்தி.

தற்போது நாடு மிகப் பெரிய அபாயத்தைச் சந்தித்து வருவதாகவும் சோனியா காந்தி தெரிவித்தார்.

‘மதவாதம், நாட்டைத் துண்டாட முயல்கிறது’

மதவாதம், பணம், அதிகாரம் ஆகியவை ஒன்று சேர்ந்து வருவதாகவும் மதத்தின் அடிப்படையில் நாட்டைத் துண்டாட முயல்வதாகவும் சோனியா தெரிவித்தார். தற்போது பா.ஜ.க. ஒரு தனி நபரின் கையில் சிக்கியிருப்பதாகவும் எல்லாப் பிரச்சனைகளுக்கும் தன்னிடம் தீர்வு இருப்பதாக அந்த நபர் சொல்லிவருவதாகவும் சோனியா குறிப்பிட்டார்.

சோனியா காந்தி தமிழகத்தில் கலந்துகொள்ளும் முதல் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக தில்லியில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்த சோனியா காந்தி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வந்தார்.

நண்பகல் சுமார் 12.30 மணியளவில் பேசத் துவங்கிய சோனியா காந்தி முதலில் கடந்த பத்தாண்டு கால காங்கிரஸ் அரசின் சாதனைகளைப் பட்டியலிட்டார்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் இந்தியாவின் பொருளாதாரம் மிக சிறப்பாக நிலையில் இருந்ததாகக் குறிப்பிட்ட சோனியா காந்தி, கடந்த 10 ஆண்டுகளில் இந்த அரசு 14 கோடி மக்களை வறுமையில் இருந்து மீட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார். கல்வி, மருத்துவம், தொழில்துறை ஆகிய துறைகளில் கடந்த பத்தாண்டுகளில் காங்கிரஸ் அரசு பெரும் முதலீடுகளைச் செய்திருப்பதாகவும் சோனியா காந்தி தெரிவித்தார்.

தகவல் அறியும் உரிமைச் சட்டம், நிலம் கையகப்படுத்தும் சட்டம் ஆகிய சட்டங்கள் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் கொண்டுவரப்பட்டிருப்பதாக சோனியா காந்தி சுட்டிக்காட்டினார். இந்தியாவின் சரித்திரத்தில் செய்யப்படாத சாதனைகளையெல்லாம் கடந்த பத்தாண்டுகளில் செய்திருப்பதாக பெருமிதத்துடன் குறிப்பிட்டார் அவர்.

சுமார் 25 நிமிடங்கள் பேசிய சோனியா காந்தி, காங்கிரஸ் வேட்பாளர்கள் யார் பெயரையும் கூறி வாக்கு சேகரிக்காமல், தமிழகத்தில் போட்டியிடும் 39 காங்கிரஸ் வேட்பாளர்களுக்கும் வாக்களிக்கும்படி கேட்டுக்கொண்டார். -BBC

TAGS: