வறணி படைத்தளத்திலிருந்த பாரிய மனித புதைகுழிகளது எச்சங்கள் இரவோடிரவாக அகற்றப்பட்டனவா?

mulli_genocideஇலங்கை இராணுவத்தின் தென்மராட்சியின் முக்கிய படைத்தளமாகவும், முன்னைய முன்னரங்க நிலையான முகமாலைக்கான விநியோக தளமாகவும் இருந்த வறணி படைத்தளத்திலிருந்த பாரிய மனித புதைகுழிகளது எச்சங்கள் இரவோடிரவாக அகற்றப்பட்டமை தொடர்பான முக்கிய தகவல் கிடைத்துள்ளது.

குறிப்பாக 1996ம் ஆண்டு யாழ்.குடாநாடு படையினரால் கைப்பற்றப்பட்ட வேளையில் பருத்தித்துறை – கொடிகாமம் வீதியில் வறணியில் பெருமளவு நிலப்பரப்பினை ஆக்கிரமித்து 522 வது படைத்தளம் அமைக்கப்பட்டிருந்தது. அதற்காக பிரதான வீதியும் துண்டிக்கப்பட்டதுடன் அங்கிருந்த பெருமளவு பொதுமக்களது வீடுகளும் சுவீகரிக்கப்பட்டிருந்தன.

யாழ்.குடாநாடு கைப்பற்றப்பட்டது முதல் தென்மராட்சிப்பகுதியில் இடம்பெற்ற கைதுகள் மற்றும் காணமல் போதல்களது மையமாக இப்படைத்தளமே இருந்தது. குறிப்பாக ஆலயமொன்றில் தங்கியிருந்த எட்டு இளைஞர்கள் காணாமல் போயிருந்தமை தொடர்பிலும் இப்படை தளமே குற்றச்சாட்டுக்களி;ற்கு உள்ளாகியிருந்தது.

இந்நிலையில் சுமார் 18 வருடங்களின் பின்னர் குறித்த படைமுகாம் மூடப்பட்டு காணிகள் மற்றும் வீடுகள் பொதுமக்களிடம் ஒப்படைக்கப்படப போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அத்துடன் அருகாகவுள்ள மிருசுவில் பகுதிக்கு இப்படைத்தளம் நகர்த்தப்பட்டு மிருந்ததுடன் ஏ-9 வீதியோரம் நகர்த்தப்பட்டு அமைக்கப்பட்டிருந்த குறித்த படைத்தளத்தை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபாய ராஜபக்சவே திறந்தும் வைத்திருந்தார்.

எனினும் விடுவிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த வறணி படைத்தளம் சுமார் இரண்டு மாதங்களின் பின்னதாக நேற்றே முற்றாக விடுவிக்கப்பட்டிருந்தது. கடந்த சில வாரங்களாக இரவு வேளைகளில் கனரக வாகனங்கள் சகிதம் அப்பகுதியில் பாரிய குழிகள் அகழப்பட்டதுடன் அங்கிருந்து அவசர அவசரமாக அடையாளம் தெரியாத பொருட்கள் அகற்றப்பட்டதாக அங்கிருந்து குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது அப்பகுதி மக்களிடையே பெரும்பரபரப்பினை  தோற்றுவித்திருந்ததுடன் இரவோடிரவாக எடுத்து செல்லப்பட்டவை தொடர்பில் பலத்த சந்தேககங்கள் மக்களிடையே எழுந்துள்ளன.

குறிப்பாக விடுவிக்கப்பட்ட படைத்தளப்பகுதியில் காணப்படும் சர்ச்சைக்குரிய பகுதிகளை பார்வையிட்ட மனித நேய செயற்பாட்டு அணி ஒன்று அங்கு காணப்படும் பாரிய குழிகள் அகழப்பட்டு வேறிடங்களிலிருந்து மண் எடுத்துவரப்பட்டதை உறுதிப்படுத்தியுமுள்ளது.

ஏற்கனவே வடமராட்சியில் கைவிடப்பட்ட பல்லப்பை படைத்தளத்தில் மனித புதை குழி பற்றி தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில் இம்முகாமிலும் புதைகுழிகள் அகற்றப்பட்டு இருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

TAGS: