விக்னேஸ்வரனுக்கு நம்பிக்கை தரும் செய்தியை மேல்மாகாணசபை அனுப்ப வேண்டும்!- மனோ கணேசன்

manoGaneshan13ம் திருத்தச் சட்டத்தின் மீதே இந்த சபை நடைபெறுகிறது. தேசிய இனப்பிரச்சினை தீர்வின் முதற்புள்ளியாக, மாகாணசபை முறைமையின் மீது நம்பிக்கை தரும் செய்தியை மேல்மாகாணசபை, வடமாகாணசபை முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு அனுப்ப வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

பத்தரமுல்லை மேல்மாகாணசபை மண்டபத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆறாவது மேல்மாகாணசபையின் கன்னியமர்வில் மனோ கணேசன் உரையாற்றிய போது இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு மனோ கணேசன் மேலும் கூறியதாவது,

இங்கே என்னுடன் எங்கள் மாகாணசபை உறுப்பினர் குகவரதன் நமது கட்சியை பிரதிநிதித்துவம் செய்கிறார். நமது கட்சி மேல்மாகாணத்தில் வாழும் நான்கு இலட்சம் தமிழர்களை பிரதிநிதித்துவம் செய்கின்றது. நாங்கள் எத்தனை பேர் இந்த சபையில் இருக்கின்றோம் என்பது முக்கியம் இல்லை. நாங்கள் இங்கே என்ன செய்ய விளைகிறோம் என்பதுதான் முக்கியமானது.

பெரிய கட்சிகளின் அதிகாரப் பல, பண பல வரப்பிரசாதங்கள் எம்மிடம் கிடையாது. நமக்கு இவற்றை எவரும் தருவதும் கிடையாது. நாம் நமது இந்த 51,000 ஆயிரம் வாக்குகளை பெரும் சவால்களின் மத்தியிலேயே பெற்றோம். 1999ல் வெறும் 3,200 விருப்பு வாக்குகளை மாத்திரம் இந்த மேல்மாகாண சபைக்கு, கொழும்பு மாவட்ட பிரதிநிதியாக வந்த நான், இந்த 2014ம் வருடத்தில் 51,000 மேல்மாகாண தமிழர்களின் பெருவாரியான வாக்குகளுடன் இந்த மேல்மாகாணசபைக்கு அதே கொழும்பு மாவட்ட பிரதிநிதியாக, குகவரதனையும் கூட்டிக்கொண்டு வந்துள்ளேன். எமது வளர்ச்சி பிரமிக்கத்தக்கது. கண்ணை திறந்து பார்ப்பவர்களுக்குத்தான் எங்கள் தனித்துவ வளர்ச்சி புரியும்.

மேல்மாகாணத்தில் வாழும் தமிழர்களின் அபிலாஷை, தேவை, எதிர்பார்ப்பு, துன்பம், கோபம் ஆகிய அனைத்தையும் நாம் இந்த சபையில் உரத்த குரலில் முன்வைப்போம். ஆனால், அது ஒரு நாளும் தமிழ் இனவாத குரலாக இருக்காது. நான் இனவாதி இல்லை. தமிழர்களின் துன்பங்களை பற்றி சளைக்காமல் பேசி குரலெழுப்பும் அதேவேளையில், நாம் சிங்கள சகோதர மக்களுடன் ஐக்கியமாக வாழ ஒவ்வொரு நிமிடமும் முயற்சி செய்து, ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் பயன்படுத்தி வருகிறோம்.

அதன் அடையாளமாகத்தான் நான் இங்கே இன்று சிங்கள மொழியிலும் உரையாற்றுகின்றேன். எங்கள் இன உரிமைகளை நான் ஒருபோதும் விட்டுக்கொடுக்கவும் மாட்டேன். அதேவேளை சகோதர இனத்து, மதத்து மக்களுடன் உறவு கொள்ளவும் தயங்கமாட்டேன். இது நமது கட்சியின் கொள்கை.

இந்த நாட்டில் யார் என்ன சொன்னாலும், மூடி மறைக்க பார்த்தாலும், முதலாவது பிரச்சினை, தேசிய இன பிரச்சினையாகும். அதிலிருந்துதான் மற்ற எல்லா பிரச்சினைகளும் ஆரம்பமாகின்றன. ஆகவே அந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் இந்த சபை முன்மாதிரியாக நடந்து கொள்ள வேண்டும்.

இந்த மேல்மாகாணசபையில் நாங்கள் 13 ப்ளஸ் என்ற நிலைபாட்டில் இருக்கிறோம். இங்கு சிலர் 13 மைனஸ் என்ற நிலைப்பாட்டிலும், இன்னும் சிலர் 13ஐ அப்படியே வைத்து கொள்வோம் என்ற நிலைப்பாட்டிலும் இருக்கிறார்கள்.

இந்த பட்டியலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஐக்கிய தேசிய கட்சி என்பவை உள்ளடங்கும். இது தொடர்பில் நான் மகிழ்ச்சியடைகிறேன். ஏனென்றால் நாம் ப்ளஸ், மைனஸ் என்பவைகளை பற்றி பேசலாம். நிர்வாக அதிகாரங்களை பரவலாக்குவோம் என்று சொல்லும் ஜே.வி.பி.யுடனும் பேசலாம். ஆனால், 13ம் திருத்தமே வேண்டாம், மாகாணசபையே வேண்டாம் என்று சொல்லிக்கொண்டு இந்த மாகாணசபையில் இருப்பவர்களுடன் பேச முடியாது. அவர்கள் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும்.

நேற்று முதன்முறையாக வட மாகாணசபை முதல்வர் சீ.வி.. விக்னேஸ்வரன், யாழ், கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டங்களில் பங்கு பற்றியுள்ளார். இது தேசிய நல்லிணக்கத்துக்கான நல்ல சமிக்ஞை. அந்த சமிக்ஞைக்கு பதிலாக இந்த சபையிலிருந்தும், வடமாகாணசபைக்கு நம்பிக்கை தரும் நல்ல செய்தி போக வேண்டும். இந்த நோக்கத்துக்கு ஒத்துழைக்கும்படி அனைத்து கட்சிகளையும் நான் வேண்டுகிறேன்.

இறுதியாக நமது நாட்டின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, ஐ.நா சபை செயலாளர் நாயகத்துடன் இணைந்து 2009ம் வருடம் மே மாதம் வெளியிட்ட கூட்டறிக்கையை நான் இங்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். 13ம் திருத்தத்தை அமுல் செய்து அதை மேன்மேலும் அபிவிருத்தி செய்வதாக, அதாவது 13 ப்ளஸ் என்ற இலக்கை நோக்கி நகர போவதாக நமது ஜனாதிபதி ஐ.நா சபை செயலாளர் நாயகம் பான் கீ மூனுடன் உடன்பாடு செய்துள்ளார். இந்த உறுதிமொழி செயல் வடிவம் பெற நாம் உறுதியுடன் உழைப்போம் என அவர் தெரிவித்தார்.

TAGS: