அடுத்த தலைமுறையை செதுக்கும் ஆசிரியர்கள், அரசியல் அடிமைகள் அல்ல!

Teachers day1சாந்தலட்சுமி பெருமாள். ‘ஆசிரியர் பணி அறப்பணி, அதற்கு உன்னை அர்ப்பணி’ என்ற சொல்லை வேதவாக்காக கருதி, பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களுக்கும் எனது ஆசிரியர் தின வாழ்த்துகள். கல்லூரிகளிலும் பல்கலைக் கழகங்களிலும் கற்றல் கற்பித்தல் திறன்களைத் திறம்படக் கற்று, அவற்றை மாணவர்களுக்குப் போதித்து வரும் நம்மை கல்வியாளர்களாக இந்தச் சமூகம் பார்க்கிறது. எதிர்கால தலைவர்களை உருவாக்கும் பணியிலிருக்கும் கல்வியாளர்களான நாம் சுயமாக சிந்திந்து, சுதந்திரமாக செயல்படுகிறோமா என்றால்… இக்கேள்விக்கு நம்மில் பலரிடம் பதில் கிடையாது.

Teacher day 2மே 1-ல், நடந்த பொருள் சேவை வரி எதிர்ப்புப் பேரணியில் கலந்துகொண்ட அரசு பணியாளர்களைத் ‘தேசத்துரோகிகள்’ என வர்ணித்துள்ளார் கியூபெக்ஸ் தலைவர் ஆஷி முடா. அரசாங்கத்தின் கொள்கையை எதிர்க்கும் இவர்கள் அரசு பணியாளர்களாக இருக்கத் தகுதியற்றவர்கள், மேலும், அவர்கள் கலந்துகொண்டது நிரூபிக்கப்பட்டால் , அவர்களைப் பொது சேவை ஒழுக்க சுற்றறிக்கையின் படி பணிநீக்கம் செய்யவும் வாய்ப்புள்ளதாக மிரட்டி இருந்தார்.

அரசு பணியாளர்கள் அரசாங்கத்தின் சிந்தனைகள் மற்றும் கொள்கைகளுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டுமேயன்றி, அவற்றை எதிர்க்கக் கூடாது என வலியுறுத்தி இருந்தார். அவரின் கூற்றை, நாட்டின் தலைமை செயலாளர் தான்ஸ்ரீ டாக்டர் அலி அம்சா ஆமோதித்து பேட்டியளித்தார்;.

அர்சியல்வாதிகள் அடுத்த தேர்தல் பற்றிதான் கவலை கொள்வார்கள், ஆனால் ஆசிரியர்கள் அடுத்த தலைமுறைக்காக அறம் செய்பவர்கள், அவர்கள் அரசியல் அடிமைகள் அல்ல.

GST - poll1உலகிலேயே அதிகமான அரசு பணியாளர்களைக் கொண்ட அரசு நமது மலேசியா என்று லிம் கிட் சியாங் கூறியுள்ளார். 1.4 மில்லியன், அதாவது, நாட்டின் மொத்த தொழிலாளர் சக்தியில் 10மூ அரசு பணியாளர்கள். லிம் கிட் சியாங் அதிகமான அரசு பணியாளர்கள் தேவையில்லை, இதனால் பண விரயமாகிறது எனக் கூறக்கேட்ட நமது பிரதமர், ‘அரசாங்கம் அரசு ஊழியர்களின் நலனில் அக்கரைக் கொண்டது. திடீர் ஆட்குறைப்பினால் பலர் பாதிக்கப்படலாம். அதனால், அவர்களைக் குறைக்கும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை,’ எனக் கூறியிருந்தார். ஆனால், அவர் ஊழியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு பேசினாரா அல்லது தனது அரசாங்கத்தின் நலனைக் கருத்தில் கொண்டு பேசினாரா என்பது தெரியவில்லை.

காரணம், தற்போதைய பாரிசான் அரசாங்கம் தனது கொள்கைகளைப் பரப்பவும், தேர்தல் காலத்தின் போது தனக்கு வாக்களிக்குமாறு பிரச்சாரம் செய்யவுமே அரசு இயந்திரங்களை அதிகம் பயன்படுத்துகிறது. அரசு இயந்திரமென்றால், இதில் உயர்திணை மற்றும் அஃறிணை என இரண்டும் அடங்கும்.

அரசாங்க ஊழியர்கள் ஆளுங்கச்சிக்கு அடிபணிய வேண்டுமா? 

அரசு பணியாளர்களில் 421,393 பேர் ஆரம்ப மற்றும் இடைநிலைப் பள்ளி ஆசிரியர்கள். ஆசிரியர்கள் அரசியல் பேசக்கூடாது எனக் கூறும் அரசாங்கம், அவர்களை ஆளுங்கட்சி பிரச்சாரத்திற்கும் பணிகளுக்கும் மட்டும் அனுமதிப்பது ஏன்? பாரிசானில் அங்கத்துவம் பெற அனுமதியுள்ள போது, மக்கள் கூட்டணியில் இணைய மட்டும் ஏன் தடை.

ஒரு குழந்தை கருவாகி, அது மண்ணுக்குள் மறையும் வரை இங்கு எல்லாமே அரசியல்தான். இதில், ஜனநாயக முறைப்படி வாக்களிக்கும் உரிமை பெற்ற ஆசிரியர்களுக்கு அரசியல் பேச உரிமையில்லை என்பது எந்த வகையில் நியாயம்?

அரசு பணியாளர்கள் ஆளும் அரசாங்கத்தின் அடிமைகள் அல்ல. பல ஆசிரியர்கள், ‘என்ன செய்வது? கையெழுத்து போட்டுவிட்டோம். விருப்பமோ இல்லையோ, பேசாமல் இருக்க வேண்டியதுதான். இல்லையென்றால், வேலையிலிருந்து தூக்கிவிடுவார்கள்,’ எனப் புலம்ப கேட்டுள்ளேன். ஓர் அரசாங்க ஊழியரான நான், அரசாங்கத்திற்குப் பாதகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபடமாட்டேன் என வாக்குறுதி அளித்திருந்தேன்.

அதன் பொருள் , பாரிசான் தனது ஆட்சி அதிகாரத்தைத் தற்காத்துக் கொள்ள, நான் ஒரு பொருளாக பயன்படுவேன் என்பதல்ல. ஆளும் அரசாங்கத்தின் திட்டங்கள் என்னைப் பாதிப்புக்குள்ளாக்கும் போது, கைகட்டி வேடிக்கைப் பார்க்க என்னால் முடியாது. இந்த ஜனநாயக நாட்டின் குடிமகளான எனக்கு, சுயமாக சிந்தித்து முடிவெடுக்க, குரலெழுப்ப உரிமை இல்லையா? இதனை நான், என் மீது திணிக்கப்படும் ஓர் ஒடுக்குமுறையாகவே பார்க்கிறேன். விருப்பமிருந்தால் வேலை செய், இல்லையென்றால் அரசாங்க வேலையை இராஜினாமா செய் என சில தலைவர்கள் (ஏன் தலைமையாசிரியர்கள் கூட) கூறுகின்றனர். இது நான் எடுக்க வேண்டிய முடிவல்லவா?

இன்று பாரிசானுக்கு ‘சரி’யெனப்பட்டது, நாளையோ அல்லது 5 வருடங்களுக்குப் பிறகோ மக்கள் கூட்டணி ஆட்சி அமைத்தால் தவறாகக் கருதப்படலாம். அப்போது, அரசு ஊழியரான நான் எனது நிலைபாட்டை மீண்டும் மாற்றிக்கொள்ள வேண்டுமா? இது, சுயமாக சிந்திக்கும் எனது திறனை முடக்குவது எனப் பொருள்படும்.

இது போன்ற செயல்களாலேயே, அரசு பணியாளர்களை மற்றவர்கள் கேலியாக பார்க்கிறார்;கள். அரசு பணியாளர்கள் நிபுணத்துவம் அற்றவர்கள் , அரசாங்கத்தின் தலையாட்டி பொம்மைகள் என சிலர் கூறுவது இந்த அரசுக்கு அவமானம் இல்லையா?

tamil_election_songகடந்த தேர்தலில், ஆட்சி கவிழ்ந்துவிடும் என்ற பயத்தில், வடக்கு தொடங்கி தெற்கு வரை , ஆளும் அரசியல்வாதிகள் அரசாங்க ஊழியர்களை நன்கு பயன்படுத்திக்கொண்டனர். இதில் ஆசிரியர்களும் விதிவிலக்கல்ல. பல கூட்டங்கள், பல விருந்துகள். இதில் ஆசிரியர்கள் கட்டாயம் கலந்துகொள்ள வேண்டும் என மேலிடத்திலிருந்து கடிதங்கள்.

எத்தனை ஆயிரம் ஆசிரியர்கள் கட்டாயப்படுத்தியதால், இதில் விருப்பமின்றி கலந்துகொண்டனர். அக்கூட்டங்களில் அம்னோ, மஇகா, மசீச, பிபிபி போன்ற கட்சிகளின் பிரதிநிதிகள்; (தேர்தல் பிரச்சார தேதிக்கு முன்பே) பாரிசானுக்காக பிரச்சாரம் செய்தனர். சிறிதும் வெட்கமின்றி, பல பொய்களை அள்ளி தெளித்து, உண்மை நிலவரங்களை மறைத்து தங்களுக்காக ஓட்டு கேட்டனர். சிலருக்குப் பரிசுகள் கொடுத்தனர். இதில் கற்றல் கற்பித்தல் நேரம் பாதிக்கப்பட்டதைக் கல்வி அமைச்சுகூட கண்டுகொள்ளவே இல்லை.

இப்படியாக, பல தருணங்;களில் பாதிப்புக்குள்ளாகும் ஆசிரியர்கள், இந்தப் பொருள் சேவை வரியினாலும் (ஜி.எஸ்.தி.) அதிகம் பாதிக்கப்படுவர் என்பது உறுதி. தனக்கு பாதிப்பு வருங்கால் , விலங்குகள்கூட எதிர்த்து போராடும், ஆனால், இந்த பாரிசான் ஆட்சியில், அரசு பணியாளர் எனும் முத்திரைக் குத்தப்பட்ட எனக்கு அந்த உரிமைகூட இல்லையென்பது வேதனை.

நாட்டின் பொருளாதாரத்தைச் சீரமைக்க மக்களிடமிருந்து பணம் பறிக்கும் திட்டங்களை அறிவிக்கும் முன் , ஓர் அரசாங்கம் அதன் செலவுகளையும் பணவிரயத்தையும் குறைக்க வேண்டும். ஊழலை அழிக்க வேண்டும். காரணம், ஜி.எஸ்.தி. அமல்படுத்தாத எத்தனையோ நாடுகள் உலகில் சிறப்பாக இருக்கின்றன.

அதே சமயம், மக்களிடமிருந்து  ஜி.எஸ்.தி.-யைப் பறித்த கிரீஸ் நாடு இன்று திவாலாகிவிட்டது. ஆக, ஒரு நாடு திவாலாவதும் ஆகாததும் தலைமைத்துவதின் நிர்வாகத் திறமையிலேயே உள்ளது என்பது என் திண்மையான கருத்து. அதனைவிடுத்து, நாடு திவாலாவதிலிருந்து தடுக்கவே ஜி.எஸ்.தி.-யை அமல்படுத்துகிறோம் என்று நம் பிரதமர் கூறுவது வேடிக்கை.

வசூல் மன்னர்கள் – ஆனால் இலவச உயர்கல்வி கிடையாது   

அண்மையில் நடந்த ஒரு கருத்துக் கணிப்பில், 62% மக்கள் ஜி.எஸ்.தி.-யை எதிர்ப்பதாகக் கூறப்பட்டது. மக்களுக்கு முன்னுரிமை என்று கூக்குரலிடும் அரசாங்கம், ஏன் மக்களின் இந்தக் கருத்துக்கு முன்னுரிமை கொடுக்கவில்லை? ஆட்சியில் அமர்ந்ததும், பல உதவித் தொகைகள் பரிசீலிக்கப்பட்டு நிறுத்தப்பட்டன, பொருள்கள் மற்றும் நீர் மின்சாரம் போன்றவற்றின் விலை ஏற்றப்பட்டது, அடுத்து ஜி.எஸ்.தி. என மக்களுக்குப் பல அதிரடியான பாதிப்புகள். இவற்றையெல்லாம் நான் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க வேண்டுமென்றால், நான் ஜடமாகத்தான் இருக்க வேண்டும்.

உணர்வுள்ள எனக்கு அதில் உடன்பாடில்லை. அதே சமயம், இந்த வேலையை இராஜினாமா செய்யும் எண்ணமும் எனக்கில்லை. காரணம், நான் தவறேதும் செய்யவில்லை, நாட்டை அந்நியனுக்குக் காட்டியும் கொடுக்கவில்லை. ஆஷ முடா மற்றும் டாக்டர் அலி அம்சா கூறியதைப் போல நான் தேசத் துரோகியும் அல்ல. தாய் நாட்டின் மீதும், மக்கள் மீதும் கொண்ட பற்றினாலேயே நான் இவ்வாறு செயல்படுவதாகக் கருதுகிறேன்.

கருத்து சுதந்திரம் என்பது ஒரு மனிதனின் அடிப்படை ஜனநாயக உரிமை. அது முடக்கப்படுமானால், சுதந்திர நாட்டின் அடிமைகளாகத்தான் நாம் வாழ வேண்டியிருக்கும். எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அரசியல் முதிர்ச்சி இருக்க வேண்டும், மக்களின் கருத்துகளைப் பரிசீலிக்க வேண்டும். மக்கள்தான் அரசியல், மக்களுக்காகத்தான் அரசாங்கம் என்பதை அரசியல் தலைவர்கள் உணர வேண்டும். என்னால் மே-1, தொழிலாளர் தினப் பேரணியில் கலந்துகொள்ள முடியாமல் போனதை எண்ணி நான் வருத்தப்படுகிறேன்.

இறுதியாக, ஆசிரியர்களின் பணி அறிவார்ந்த எதிர்கால சமூகத்தை உருவாக்குவதேயன்றி, அரசாங்க இயந்திரங்களாக செயல்படுவதல்ல! இதனைக் கருத்தில் கொண்டு பயணிப்போம். என் சக ஆசிரியர்களுக்கு மீண்டும் ஆசிரியர் தின வாழ்த்துகள்.