மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற தலைமைக் காவலர் கொலை

  • தலைமைக் காவலர் கனகராஜ்
    தலைமைக் காவலர் கனகராஜ்
  • கொலை நடந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்ட போலீஸார்.
    கொலை நடந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்ட போலீஸார்.

அரக்கோணம் அருகே ஆற்றில் அனுமதியின்றி மணல் அள்ளிய கும்பலைப் பிடிக்க முயன்றபோது தலைமைக் காவலர் கனகராஜ் டிராக்டர் ஏற்றி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக டிராக்டர் ஓட்டுநரான பேரூராட்சி தேமுதிக உறுப்பினரின் மகனை போலீஸார் தேடி வருகின்றனர்.

அரக்கோணத்தை அடுத்த தக்கோலம் அருகே குசஸ்தலை ஆறு ஓடுகிறது. இந்த ஆற்றில் புரிசை கிராமம் அருகே சிலர் அனுமதியின்றி மணல் அள்ளுவதாக தக்கோலம் போலீஸாருக்கு சனிக்கிழமை காலை 6.30 மணி அளவில் தொலைபேசி மூலம் தகவல் வந்தது.

இதையடுத்து சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜன், தலைமைக் காவலர் கனகராஜ் ஆகிய இருவரும் இரு சக்கர வாகனத்தில் அங்கு சென்றனர். அப்போது 6-க்கும் மேற்பட்டோர், ஒரு டிராக்டரில் மணல் அள்ளிக் கொண்டிருந்தனர். போலீஸாரை பார்த்ததும் அவர்கள் மணல் அள்ளும் உபகரணங்களை போட்டுவிட்டு ஓடிவிட்டனராம்.

டிராக்டரை கிளப்ப ஓடிய ஓட்டுநரை, கனகராஜ் ஓடிச்சென்று பிடித்தாராம். அப்போது, டிராக்டரை ஓட்டுநர் கிளப்பியதால், அதன் சக்கரத்தில் கனகராஜ் சிக்கினார். இதைக் கண்ட ஓட்டுநர், வேகமாக டிராக்டரை ஓட்டிச் சென்று விட்டாராம்.

கனகராஜ் அலறித் துடித்ததைக் கண்ட சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜன், சப்தம் போட்டு அருகில் இருந்தவர்களை அழைத்து கனகராஜை கரைக்குத் தூக்கி வந்துள்ளார். ஆனால், அதற்குள் கனகராஜ் இறந்தார். காஞ்சிபுரத்தில் இருந்து வந்த ஆம்புலன்ஸ் பணியாளர்கள் அவர் இறந்து விட்டதை உறுதிசெய்துள்ளனர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த அரக்கோணம் தாலுகா காவல் ஆய்வாளர் நந்தகுமார், உதவி ஆய்வாளர் அன்புக்கரசி ஆகியோர் விசாரணை நடத்தினர். பின்னர், அரக்கோணம் அரசினர் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட கனகராஜின் சடலத்தை வேலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விஜயகுமார் பார்வையிட்டார். மேலும், டிராக்டர் ஓட்டுநரை கைது செய்ய தனி போலீஸ் படை அமைத்தும் உத்தரவிட்டார்.

காவேரிப்பாக்கம் அடுத்த மங்கலம் கிராமத்தைச் சேர்ந்த கனகராஜுக்கு, மனைவி முத்துகுமாரி (40) மட்டுமே உள்ளார். குழந்தை இல்லாததால் மேனகா (16) என்ற பெண்ணை தத்தெடுத்து வளர்த்து வருகிறாராம். அவர், தற்போது பிளஸ் 2 படித்து வருகிறாராம்.

கனகராஜை, டிராக்டர் ஏற்றி கொலை செய்த வழக்கில் தேடப்படுபவர் சுரேஷ் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இவரது தாய் செண்பகவள்ளி தக்கோலம் பேரூராட்சியின் 6-ஆவது வார்டு உறுப்பினராக உள்ளார். தந்தை தேவராஜ் தக்கோலம் நகர தேமுதிக பொருளாளராக உள்ளார்.

தகவலறிந்த அரக்கோணம் எம்.எல்.ஏ சு.ரவி அரசினர் மருத்துவமனைக்கு சென்று கனகராஜின் உடலை பார்வையிட்டு அவரது மனைவி முத்துகுமாரிக்கு ஆறுதல் கூறினார். மேலும் ஏடிஜிபி (சட்டம், ஒழுங்கு) டி.கே. ராஜேந்திரன், வடக்கு மண்டல ஐ.ஜி. மஞ்சுநாதா, வேலூர் சரக டிஐஜி தமிழ்ச்சந்திரன், மங்கலம் கிராமத்துக்குச் சென்று கனகராஜின் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

 நடந்தது என்ன?

சம்பவம் குறித்து தலைமைக் காவலர் கனகராஜுடன் சென்ற சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜன் கூறியது:

காவல் நிலையத்துக்கு தொலைபேசியில் தகவல் கிடைத்ததும் சீருடையில் சென்றால் கடத்தல் கும்பல் ஓடி விடும் என்று கனகராஜ் காக்கிச் சட்டையை மட்டும் கழற்றி வெள்ளை டிசைன் போட்ட சட்டையை போட்டுக் கொண்டார். நான் லுங்கியும், வெள்ளை நிற டிசர்ட்டும் அணிந்து சென்றேன்.

தூரத்தில் நாங்கள் வருவதை மணல் அள்ளும் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் கண்டாலும் நாங்கள் அருகே சென்றபோது தான் போலீஸ் என உணர்ந்து ஓடினர். இதில் டிராக்டர் ஓட்டுநர் மட்டும் கனகராஜியிடம் சிக்கினார். அவர் விரைந்து டிராக்டரை கிளப்பியதால், அதன் டயரின் அடியில் கனகராஜ் சிக்கிக் கொண்டார்.

அங்கிருந்த மற்றவர்களை பிடிக்கும் முயற்சியில் சுமார் 50 அடி தள்ளி நான் இருந்த நிலையில் இச்சம்பவம் நடந்து விட்டது. ஓட்டுநர் டிராக்டரை எடுத்துக் கொண்டு போகும்போது நான் விரட்டிச் சென்றும் பிடிக்க முடியவில்லை என்றார் ராஜன்.

 ரூ.10 லட்சம் நிவாரணம்: முதல்வர் அறிவிப்பு

மணல் கடத்தலைத் தடுக்க முயன்றபோது உயிரிழந்த தலைமைக் காவலரின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.

இது தொடர்பாக அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தக்கோலம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்த கனகராஜ், மணல் கடத்தலைத் தடுக்க முயன்றபோது, டிராக்டரில் சிக்கி உயிரிழந்தார். இந்தச் செய்தியை அறிந்து நான் மிகுந்த துயரமும், மன வேதனையும் அடைந்தேன்.

அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரின் குடும்பத்துக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.10 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளேன். இந்தச் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கும்படியும் உத்தரவிடப்பட்டுள்ளது என்றார் அவர்.

TAGS: