நாகேஷ் பேரன் நாயகனாக அறிமுகமாகும் “கல்கண்டு“..!

மறைந்த பழம்பெரும் நடிகர் நாகேஷின் பேரனும், நடிகர் ஆனந்த் பாபுவின் மகனுமான கஜேஷ் நாயகனாக அறிமுகமாகிறார்.

‘ராட்டினம்’ படத்தை தயாரித்த ராஜரத்தினம் பிலிம்ஸ் நிறுவனம் அடுத்ததாக தயாரிக்கும் படம் ‘கல்கண்டு’. இந்த படத்தில் தான் கஜேஷ் நாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக டிம்பிள் சோப்டே அறிமுகமாகிறார். இவர் மஹாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர். இவர் வீர சிவாஜியின் படைத் தளபதிகளாக பணியாற்றிய பரம்பரையை சேர்ந்தவராம்.

மற்றும் மனோபாலா, மயில்சாமி, சாமிநாதன், “ டாடி ஒரு டவுட் “ செந்தில், முத்துராமன், டி.பி.கஜேந்திரன், ஸ்ரீரஞ்சனி, ஜெனிபர் ஆகியோர் நடிக்கிறார்கள். கே.வி.சுரேஷ் ஒளிப்பதிவு செய்ய, கண்ணன் இசையமைக்கிறார்.

இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஏ.எம்.நந்தகுமார் இயக்குகிறார். இவர் விஜயகாந்த் நடித்த ‘தென்னவன்’, பிரஷாந்த் நடித்த ‘ஜாம்பவான்’ போன்ற படங்களை இயக்கியவர். அத்துடன் ஜப்பான் மொழியில் அங்குள்ள சூப்பர் ஸ்டாரான நம்ரா, நேகாதுபியா, சைனா கதாநாயகியாக கெட்டி ஆகியோர் நடித்து அமோக வெற்றிபெற்ற ‘டான்சிங் வித் நிஞ்ஜா’ என்ற படத்தையும் இயக்கி உள்ளார்.

கல்கண்டு படம் குறித்து பேசிய நந்தகுமார், “கல்கண்டு எந்த வடிவத்தில் இருந்தாலும் சுவையில் ஒரு சதவீதம் கூட மாற்றம் இருக்காது. அது மாதிரி திரைக்கதை வடிவத்தில் கல்கண்டு படமும் சுவையானதாக இருக்கும்.   படப்பிடிப்பு முடிவடையும் நிலையில் உள்ளது . சென்னை, நாகை, காரைக்குடி போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றிருக்கிறது. எல்லாதரப்பு மக்களும் கல்கண்டை ரசிப்பார்கள்.” என்று கூறினார்.