பாக்., மருமகள் சானியாவுக்கு தூதர் பதவியா ? கடும் எதிர்ப்பு கிளம்பியது

93985ஐதராபாத்: தெலுங்கானா மாநிலத்தின் தூதராக டென்னிஸ் வீராங்கனை சானியா நியமனத்திற்கு பல்வேறு தரப்பிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. இந்த முடிவை திரும்ப பெற வேண்டும் என மாநில அரசை பா.ஜ., உள்ளிட்ட எதிர்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. இந்தியாவின் பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா பல்வேறு பதக்கங்களை வாங்கி குவித்துள்ளார். இவருக்கென இந்திய ரசிகர்கள் ஏராளம். இவர் ‘ பீக் ‘ கில் ( 2010 ) இருந்த போது பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்கை திருமணம் செய்தார். இந்த திருமணத்திற்கு இந்திய தரப்பில் கடும் எதிர்ப்புகள் கிளம்பியது. இருந்தாலும் இவர் காதலித்த சோயப்பை கைப்பிடித்தார். தற்போது சானியா ஐதராபாத்தில் வசித்து வருகிறார். இவரது சொந்த மாநிலம் மகாராஷ்ட்டிரா.

இந்நிலையில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், சானியாவை அரசின் தூதராக நியமித்துள்ளார். இவரது நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள இம்மாநிலத்தின் பா.ஜ., மூத்த நிர்வாகியான லஷ்மணன், பாகிஸ்தான் நாட்டிற்கு மருமகளாக சென்ற சானியாவுக்கு இந்த அந்தஸ்து வழங்க கூடாது. வழங்கவும் முடியாது. சானியா ஒன்றும் தெலுங்கானா போராட்டத்தில் பங்கேற்ற தியாகி அல்ல, இவருக்கு இந்த பதவியை முதல்வர் ஏன் வழங்கினார் என விளக்க வேண்டும். இந்த நியமனத்தை திரும்ப பெற வேண்டும் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தெலுங்கானா கட்சி விளக்கம்: இதற்கு விளக்கம் அளித்துள் தெலுங்கானா ராஷ்ட்டிரிய சமிதி கட்சியை சேர்ந்த எம்.பி கேசவரராவ் கூறுகையில், பா.ஜ., தேவையில்லாத பிரச்னைகளை கிளப்பி அரசியல் நடத்த முற்படுகிறது. அப்படியானால் பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் ஆகியோர் கூட பாகிஸ்தானில் பிறந்தவர்கள் தான் என கூறியுள்ளார். இந்த சர்ச்சை குறித்து சானியா மிர்சாவிடம் கேட்டபோது, கருத்து எதுவும் கூற விரும்பவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

சானியாவுக்கு கிரண்பேடி ஆதரவு : முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரியான கிரண்பேடி ஆதரவு அளித்துள்ளார். சானியா இந்தியாவின் மகள், இவர் இந்தியாவுக்கு அளவிட முடியாத வெற்றி பெருமைகளை பெற்று தந்துள்ளார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

TAGS: