சர்வதேச விசாரணைக் குழுவில் விக்னேஸ்வரன் சாட்சியமளிப்பது தேச துரோகம்: வசந்த பண்டார

vikneshwaran_002ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நாயகம் நவநீதம்பிள்ளை நியமித்த சர்வதேச விசாரணைக் குழுவில் வடக்கு முதல்வர் விக்னேஸ்வரன் சாட்சியமளிப்பது தேசத்துரோகமாகும் என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் பொது செயலாளர் டொக்டர் வசந்த பண்டார தெரிவிக்கையில்,

சர்வதேச விசாரணைக் குழுவினர் இலங்கையில் விசாரணைகளை மேற்கொள்வதை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை. அக்குழுவினர் இலங்கை வருவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பாராளுமன்றத்திலும் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து வடமாகாண சபையின் முதலமைச்சராக பதவியேற்றுள்ள விக்னேஸ்ரன் எவ்வாறு சர்வதேச விசாரணை குழுவின் முன்னிலையில் சாட்சியமளிக்க முடியும்.

அவர் அவ்வாறு சாட்சியமளிப்பது என்பது தேசத்துரோக செயலாகும். சர்வதேச விசாரணை குழுவில் முதலமைச்சர் சாட்சியமளிப்பதற்கு எதிராக அரசாங்கம் கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

போர்க்குற்றம் தொடர்பாக விசாரணை செய்வதற்கு ஜனாதிபதி நியமித்துள்ள ஆணைக்குழுவினரிடம் சாட்சியங்களை வழங்க தயான் ஜயதிலக்க, விக்டர் ஐவன், விக்னேஸ்வரன் மட்டுமல்ல, எரிக் சொல்ஹெய்மும் முன் நிற்கிறார். இதற்கு அரசாங்கமே காரணம்.

ஏனெனில், ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு ஆலோசனை வழங்க வெளிநாட்டு நிபுணர்களை நியமித்தமை அரசாங்கம் செய்த மாபெரும் தவறு என குறிப்பிட்டார்.

 

TAGS: