தமிழ் கூட்டமைப்பின் உயர்மட்டக் குழு இந்தியாவுக்கு விஜயம்!- ஐநா விசாரணைக்குழு முன் சாட்சியமளிக்கவும் தயார்!

tna_candidats_001தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஐந்து உறுப்பினர்கள் கொண்ட உயர்மட்டக் குழு ஒன்று வரும் ஆகஸ்ட்  மாத முற்பகுதியில் அதன் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் புதுடில்லிக்கு விஜயம் செய்யவிருப்பதாக சில ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான இரா.சம்பந்தன், வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா., சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரே விரைவில் இந்தியா புறப்படுவர் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்தியாவில் நரேந்திர மோடி தலைமையிலான புதிய மத்திய அரசு பதவியேற்றமையைத் தொடர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்டக் குழு ஒன்று முதற்தடவையாக புதுடில்லிக்கு விஜயம் செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஐநா விசாரணைக்குழு முன் சாட்சியமளிக்கவும் தயார்

இலங்கையில் இடம்பெற்றவை எனக் கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சாட்சியமளிக்குமாறு ஐ.நா. மனித உரிமைகள் அலுவலகத்தால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அழைப்பு விடுத்தால் சாட்சியமளிக்கத் தயார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தெரிவித்த தகவல்கள் வருமாறு:-

தமிழ் மக்கள் மீது இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஒரு தொகுதி ஆவணங்களை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையிடம் ஏற்கனவே கூட்டமைப்பு சமர்ப்பித்துள்ளது.

தற்போதும் இது தொடர்பான மேலும் ஆவணங்களை நாம் சேகரித்து வருகின்றோம். இந்த ஆவணங்கள் ஐ.நா.விசாரணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்படும்.

இலங்கையில் நல்லிணக்கம் ஏற்பட வேண்டுமெனில் இங்கு இடம்பெற்ற கறைபடிந்த சம்பவங்கள் தொடர்பில் உண்மைகள் கண்டறியப்பட வேண்டும். இந்தக் கடமையை இலங்கை அரசு செய்யவில்லை.

இந்நிலையில், ஐ.நா. குழுவின் விசாரணையை இலங்கை அரசு எதிர்கொண்டுள்ளது.

நாம் நடந்த உண்மைகளை, தமிழ் மக்கள் அனுபவித்த இன்னல்களை, நீதியின் பிரகாரம் ஐ.நா. குழுவிடம் வாய்மொழி மூலம் தெரிவிக்கத் தயாராகவுள்ளோம் என்று சுரேஷ் எம்.பி. கூறியுள்ளார்.

TAGS: