ஜெயலலிதா தேசியவாதி! மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க மாட்டார்: சுப்பிரமணியன் சுவாமி நம்பிக்கை

jaya_subramaniyam_001இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் வருடம் முதல் பகுதியில் இலங்கைக்கு வரலாம் என்று ஜனதாக் கட்சியின் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெறும் பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்றுள்ள சுப்பிரமணியன் சுவாமி, தெரிவு செய்யப்பட்ட செய்தியாளர்களிடம் இந்த தகவலை நேற்று வெளியிட்டார்.

இலங்கை தொடர்பான இந்தியாவின் கொள்கையை வகுப்பது இந்திய அரசாங்கமே தவிர மாநில அரசாங்கங்கள் அல்ல என்று சுவாமி குறிப்பிட்டார்.

இலங்கையின் பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்கக்கூடாது என்று தமிழகத்தில் எதிர்ப்புகள் வெளியிட்டப்பட்டபோதும் பிரதமர் மோடியும் பாரதீய ஜனதாக்கட்சியின் சிரேஸ்ட தலைவர் அமிட் ஷாவும் தமக்கு அனுமதி வழங்கியதாக சுவாமி தெரிவித்தார்.

இந்த நவம்பர் மாதத்தில் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் இலங்கைக்கு வரவுள்ளார்.

இதனையடுத்து பிரதமர் மோடி எதிர்வரும் வருட ஆரம்பத்தில் இலங்கைக்கு வரலாம் என்று சுவாமி கூறினார்.

இந்திய நாடாளுமன்றத்தில் பாரதீய ஜனதாக் கட்சிக்கு பெரும்பான்மை இருப்பதால் அது மாநில கட்சிகளிடம் சரணடைய தேவையில்லை.

கச்சதீவு விடயம் குறித்த கருத்துரைத்த சுவாமி அந்த விடயம் ஏற்கனவே தீர்க்கப்பட்ட ஒன்று என்று குறிப்பிட்டார்.

கச்சதீவு உடன்படிக்கை செய்து கொள்ளப்பட்டபோது தமிழகத்துடன் கலந்துரையாடவில்லை என்று சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை மறுத்த அவர், அப்போதைய முதலமைச்சர் கருணாநிதியுடன் அது குறித்து பிரதமர் இந்திரா காந்தி கலந்தாய்வு செய்தார் என்று குறிப்பிட்டார்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா, தேசியவாதி என்ற வகையில் நாட்டு நலனில் அக்கறை கொண்டுள்ளார் எனவே அவர் மத்திய அரசாங்கத்துக்கு அழுத்தங்களை பிரயோகிக்கமாட்டார்.

கோயம்புத்தூரிலும் மதுரையிலும் தாம் நடத்திய கூட்டங்களுக்கு தமிழக அரசாங்கம் முழுமையான பாதுகாப்பை வழங்கியமையையும் சுவாமி சுட்டிக்காட்டினார்.

தமிழக மீனவர்கள் இலங்கையின் கடல் எல்லைப் பகுதிகளில் மீன்பிடிக்க அனுமதிக்கப்படுவார்களானால் இந்திய- இலங்கை மீனவப்பிரச்சினையை தீர்க்க முடியும் என்று சுப்பிரமணியன் சுவாமி குறிப்பிட்டார்.

சீனாவுடன் இலங்கை கொண்டுள்ள உறவுக்குறித்து கருத்துரைத்த சுவாமி, இந்தியா இந்த விடயத்தை உன்னிப்பாக கவனிக்கிறது என்று தெரிவித்தார்.

மகிந்த அரசு அனுமதி அளித்தால் மட்டுமே தமிழ்த் தேசியக் கூட்டமைபை மோடி சந்திப்பாராம் – சுப்பிரமணியன் சுவாமி

swamy_mahindaசிறிலங்கா அரசாங்கம் அனுமதி அளித்தால் மட்டுமே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பாராம்.

இவ்வாறு கூறியிருக்கிறார், பாஜகவின் பிரமுகர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி.

கொழும்பில் நேற்று ஆரம்பமாகிய, சிறிலங்கா இராணுவம் நடத்தும் பாதுகாப்புக் கருத்தரங்கில் பங்கேற்கும் அவர், கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றிடம் கருத்து வெளியிடுகையில்,

“வழக்கமாக, எந்தவொரு நாட்டு அரசாங்கத்துடனும் மோதல் போக்கைக் கடைப்பிடிக்கும் தரப்புகளுடனான சந்திப்புகளை நாம் ஊக்குவிப்பதில்லை.

தற்போதைய பிரதமர், சந்திப்புக்கான நியமனங்களை இலகுவாக வழங்குவதில்லை .

சிறிலங்காவுடனான உறவுகளை மேலும் வலுப்படுத்திக் கொள்ளும் செயல்முறைகளை இந்தியா மேற்கொண்டுள்ளது.

அந்த செயல்முறைகளைப் பலவீனப்படுத்தும், எந்த நடவடிக்கையையும் இந்தியா மேற்கொள்ளாது.

இருநாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்துவதற்காக, அடுத்த மாதம், இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, எந்த நேரத்திலும் வந்து, பிரதமரைச் சந்திப்பதற்கு, கடந்தமுறை போல இப்போது இருக்காது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

TAGS: