சினிமாவாகிறது தர்மபுரி நரபலி சம்பவம்!

vachikavaகடந்த சில வருடங்களுக்கு முன்பு ஒரு சாமியாரின் பேச்சை கேட்டு சிலர் தங்கள் குழந்தைகளை நரபலி கொடுத்த சம்பவம் பரபரப்பாக வெளிவந்தது. இந்த சம்பவங்களை மையமாக வைத்து தற்போது வச்சிக்கவா என்ற படம் தயாராகி வருகிறது.

ஏ.ஆர்.ரபி என்பவர் ஒளிப்பதிவு செய்து இயக்குவதோடு நடிக்கவும் செய்கிறார். படத்தின் தயாரிப்பாளர் ராஜா அம்மையப்பன் நரபலி சாமியாராக நடிக்கிறார். மாணிக்கவேல், அச்சுதா என்ற புதுமுகங்கள் ஹீரோ ஹீரோயினாக நடித்துள்ளனர்.

“வறுமையும், வறட்சியும் நிறைந்த தர்மபுரி மாவட்டத்தில் மக்கள் எதையாவது செய்து வாழ மாட்டோமா என்று தவிக்கிறார்கள். அதனால்தான் நான்கு குழந்தைகள் உள்ள குடும்பத்தில் ஒரு குழந்தையை நரபலி கொடுத்தாவது மிச்சமுள்ள குழந்தைகளை காப்பாற்ற நினைக்கிறார்கள்.

அவர்களின் இந்த பலவீனத்தை பயன்படுத்தி சில சாமியார்கள் இப்போதும் ரத்தவெறி பிடித்து அலைகிறார்கள். அந்த உண்மையை மையமாக வைத்தும் சில நிஜ சம்பவங்களை இணைத்தும் இந்தப் படத்தை எடுத்து வருகிறேன். இது அந்த பகுதி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில் அந்த பகுதியிலேயே எடுத்திருக்கிறேன்” என்கிறார் இயக்குனர் ரபி.