நீண்ட கால போர்நிறுத்தம்: இஸ்ரேல், ஹமாஸ் ஒப்புதல்

isrel_palastinஎகிப்து தலைநகர் கெய்ரோவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தையில் நீண்ட கால போர்நிறுத்தத்துக்கு இஸ்ரேல் அரசும், ஹமாஸ் அமைப்பும் ஒப்புக்கொண்டன.

இஸ்ரேல் ராணுவம்- ஹமாஸ் தீவிரவாதிகள் இடையே தொடர்ந்து 50 நாள்களாக நடைபெற்ற போரில் 2,137 பாலஸ்தீனர்களும், இஸ்ரேலைச் சேர்ந்த 68 பேரும் பலியானார்கள்.

இரு தரப்புக்கும் இடையே சமரசம் ஏற்படுத்தும் முயற்சியில் எகிப்து நாடு களத்தில் இறங்கியது. அந்நாட்டின் இடைவிடாத முயற்சியின் காரணமாக அடுத்தடுத்து 48 மணி நேரம், 72 மணி நேர போர் நிறுத்தம் அமல்படுத்தப்பட்டன.

இந்நிலையில் கெய்ரோவில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் நீண்ட கால போர்நிறுத்தத்துக்கு இஸ்ரேல்-ஹமாஸ் ஆகியவை ஒப்புக் கொண்டன.

இந்த அறிவிப்பு வெளியானதும் காஸா நகர வீதிகளில் பொதுமக்கள் தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

இது குறித்து ஹமாஸ் இயக்க செய்தித் தொடர்பாளர் சமி அபு ஜுகரி கூறும்போது, இரு தரப்பும் நீண்ட கால போர்நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டுள்ளன என்று தெரிவித்தார்.

இஸ்ரேல் அரசு மூத்த அதிகாரி கூறுகையில், மீண்டும் ஒருமுறை எகிப்தின் போர்நிறுத்த ஒப்பந்தத்தை நாங்கள் ஏற்றுக் கொண்டுள்ளோம் என்றார்.

பாலஸ்தீன அதிபர் மாமூத் அப்பாஸ் கூறுகையில், “”நீண்ட கால போர்நிறுத்தத்துக்கு உதவிய எகிப்து உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நாட்டு மக்கள் அனைவரும் இணைந்து நாட்டைச் சீரமைக்க வேண்டும்” என்றார்.