மக்களோடு மக்களாக மோடி அரசு ; ஏழை மக்களை முன்னேற்ற துடிக்கிறார்

modi100புதுடில்லி : மத்தியில் புதிதாக பொறுப்பேற்ற பிரதமர் மோடி 100 வது நாளை நிறைவு செய்யும் தினத்தில் தமது அரசின் புதிய சாதனையாக ஒரே நாளில் 1. 5 கோடி பேருக்கு வங்கிக்கணக்கு துவக்கி கொடுத்தார். இன்னும் படிப்படியாக நாடு முழுவதும் ஏழரை கோடி பேருக்கு வங்கிக்கணக்கு துவக்கி வைப்பதுடன், இவர்களுக்கு வங்கிக்கடன் எளிமையாக பெற வழி செய்வது, மற்றும் வட்டியால் சிரமப்படும் ஏழைகளை காப்பது, இன்ஸ்சூரன்ஸ் உறுதி என பல்வேறு முனைப்பு திட்டங்களை முன்வைத்து நாட்டின் நிதி தீண்டாமை இல்லாமல் ஆக்குவதே எனது நோக்கம் என நாட்டு மக்களுக்கு பிரதமர் உறுதி அளித்துள்ளார்.

பிரதமர் பேச்சின் முக்கிய அம்சம்: “பிரதமரின் மக்கள் நிதி (ஜன் தன்)’ திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி, துவக்கி வைத்துள்ளார். இத்திட்ட விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது: ஜன் தன் திட்டம் மூலம் அடுத்த ஆண்டு (2015) ஜனவரி 26ஆம் தேதிக்குள் 7.5 கோடி பேருக்கு வங்கிக் கணக்குகள் தொடங்கப்படும்.

அவர்கள் அத்தனை பேருக்கும் வங்கிக் கணக்கு தொடங்கித் தரப்படுவதோடு “ரூபே’ என்ற வங்கிப்பண அட்டை (டெபிட் கார்டு) வழங்கப்படும். ரூ.30 ஆயிரத்துக்கான காப்பீட்டு வசதி, ரூ.1 லட்சத்துக்கான விபத்துக் காப்பீடு வசதியும் அளிக்கப்படும். மேலும், வங்கிக் கணக்குதாரர்களுக்கு ரூ.5 ஆயிரத்துக்கான கடனுதவியும் வழங்கப்படும் .

சமூகத் தீண்டாமை அகற்ற: ஊழலைத் தடுப்பதற்காகவே ஏழை மக்களுக்கு வங்கிக் கணக்குகளை இலவசமாக துவக்கி தரப்பட்டுள்ளது. இத்திட்டப் பயனாளிகளுக்கு அவர்களின் வங்கிக் கணக்குகளில் அரசின் மானிய உதவித்தொகைகள் நேரடியாகச் செலுத்தப்படும். இது ஊழலைத் தடுப்பதற்கான முக்கிய கருவியாகும்.சமூகத் தீண்டாமையை அகற்ற மகாத்மா காந்தி பாடுபட்டார் என்றால், ஏழ்மையை ஒழிக்க வேண்டும் என்று நாம் விரும்பினால், நாம் முதலில் நிதித் தீண்டாமையை அகற்ற வேண்டும்.

நாடு சுதந்திரம் பெற்று 68 ஆண்டுகளான பிறகும், 68 சதவீத மக்கள்கூட வங்கி அமைப்பில் இணையவில்லை என்பது வருத்தமளிக்கிறது.பணக்காரர்கள் குறைந்த வட்டியில் வங்கிகளில் கடன் பெறுவது சுலபமானது. ஆனால், பணக்காரர்கள் செலுத்தும் வட்டியை விட 5 மடங்கு அதிகமான வட்டியை ஏழைகள் வட்டிக்காரர்களிடம் செலுத்தும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். வங்கி வசதியை ஏழைகளுக்கு ஏற்படுத்தித் தர வேண்டியது வங்கித் துறையின் பொறுப்பாகும் என்றார் மோடி.

நேரிடையாக தொடர்பு வைக்கும் பிரதமர்: பொதுவாக பிரதமர் மோடி எந்தவொரு விஷயமானாலும் மக்களிடையே நேரடி தொடர்பு வைத்து கொள்ளவே விரும்புகிறார். கடந்த சுதந்திர தினத்தில் நாடு முன்னேற அனைவரும் உழைத்திட வேண்டும் என்று ஒவ்வொரு குடிமகனுக்கும் மொபைல் போனில் எஸ்.எம்.எஸ்., அனுப்பி வைத்தார். இது போல் அதிகாரிகளுக்கு புதிய திட்டம் தொடர்பாக பிரதமர் மெயில் அனுப்பியுள்ளார். திட்டம் துவக்கிய முதல் நாளில் 1.5 கோடிப் பேருக்கு வங்கிக் கணக்குகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது பெரும் பாரட்டுதலுக்குரியது. இப்படி ஒரே நாளில் செயல்பாடு வங்கி அதிகாரிகளே பிரமிப்பு அடைந்தனர்.

ஏழரை கோடி பேருக்கு வங்கி கணக்கு: வரும் 2015 ஜனவரி 25 க்குள் 7. 5 கோடி பேருக்கு வங்கி கணக்கு துவக்கும் பணி முடித்து வைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் 7 லட்சத்து 25 ஆயிரம் வங்க அதிகாரிகளுக்கு மெயில் அனுப்பியுள்ளார் பிரதமர். இதில் ஏழைகளின் நலனில் அக்கறை கொண்டு அனைவருக்கும் வங்கி கணக்கு துவக்கி வைத்திட அதிகாரிகள் முழு ஒத்துழைப்புடன் நடக்க வேண்டும். அனைவருக்கும் வங்கி கணக்கு ஏற்பட அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் கேட்டுள்ளார்.

மாணவர்களை சந்திக்கிறார்: வரும் செப். 5 ல் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் பிரதமர் மோடி 10 லட்சம் மாணவர்களை நேரில் சந்திக்க முடிவு செய்துள்ளார். இதன்படி மாணவர்களிடம் நேரடி தொடர்பு கொள்வதுடன் நாட்டு பற்று மற்றும் முன்னேற்றம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிட்டுள்ளார். பிரதமர் மோடி மக்களோடு, மக்களாக, ஆட்சி இருக்க வேண்டும் என நினைப்பதை செயல்படுத்தி வருகிறார். ஆட்சியாளர்கள் மட்டும் அரசில் பங்கேற்க கூடாது, மக்களும், மக்கள் பங்கேற்புடன் ஆட்சி கொண்டு செல்வதே உண்மையான ஜனநாயகம் என்றாார் பிரதமர் அதன்படி அவர் செயல்படுத்தி வருகிறார் என்றால் இது பாராட்டுவதில் மிகையாக இருக்க முடியாது.

அடுத்து டிஜிட்டல் இந்தியா: மோடியின் அடுத்த கனவு திட்டம் டிஜிட்டல் இந்தியா. நாடு முழுவதும் இ கவர்ன்ஸ் நடைமுறைக்கு வர வேண்டும் என விரும்புகிறார். அனைத்தும் கம்ப்யூட்டர் மயம். அரசின் அனைத்து செயல்பாடுகளும் ஒரே சர்வரில் இணைக்கப்படுவது. மேலும் நாட்டு மக்கள் அரசிடம் எதுவும் கேட்டு சமர்ப்பித்தால் அவர்கள் பெறும் வழி வகை எளிமைப்படுத்தப்படும். குறிப்பாக ஒவ்வொரு குடிமகனின் தகவல்களும் அரசின் கம்ப்யூட்டர் வட்டத்திற்குள் கொண்டு வரப்படும். ஒரு மாணவன் வேறு கல்லூரியில் சேர முற்படும் போது அவனுடைய பிறப்பு சான்று, முந்தைய கல்வித்தகுதி உள்ளிட்ட விவரங்கள் அனைத்து அரசு கல்லூரிகளும் அக்ஸஸ் பெறும் வகையில் இருக்கப்படும். இது போல் காகிதம் இல்லாத அரசு கொண்டு வரவேண்டும் என நினைக்கிறார். கிராமம் தோறும் இன்டர்நெட் வசதி. அனைருவக்கும் கம்ப்யூட்டர் அறிவு என பல திட்டங்களை முன்வைத்து பிரதமர் நாட்டை முன்னோக்கி எடுத்து செல்ல நினைக்கும் அவரது செயல்பாட்டுக்கு அதிகாரிகளும், மக்களும் துணை நிற்போமே !

TAGS: