‘சுதந்திரம் : யாரிடமிருந்து……..யாருக்கு?’ கருத்துகளம்

Merdeka_57-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்.)  நாடு தழுவிய அளவில் சிறப்பு கருத்துகளம் ஒன்றினை ஏற்பாடு செய்து, நடத்தி வருகிறது. ஆகஸ்ட் 15-ல் ஈப்போவில் தொடங்கிய இக்கருத்துகளம் , பத்து ஆராங் சிலாங்கூர், மலாக்கா, கோத்தா பாரு கிளாந்தான் ஆகிய இடங்களில் சிறப்பாக நடந்தேரியது. 

அதன் தொடர்ச்சியாக, ஜொகூரில் பி.எஸ்.எம். நூசாஜாயா கிளை ஏற்பாட்டில், வருகின்ற வியாழன்,  04.09.2014 – இல் இரவு மணி 8 க்கு பிகேஆர் அலுவலகம், எண் 14 ஜலான் பாடி 1, பண்டார் பாரு உடா, (Pejabat PKR Cabang Johor Bahru, No.14, Jalan Padi 1, Bandar Baru Uda)  ஜொகூர் பாருவில் நடை பெறவுள்ளது.

இதில் நாட்டின் மேன்மைக்கு எழுச்சிகரமாகவும் புரட்சிகரமாகவும் விவாதங்களை முன்வைக்க     அருள்செல்வன் (தேசியப் பொதுச் செயலாளர், பி.எஸ்.எம்.) , மாட் சாபு  (தேசியத் துணைத் தலைவர், பாஸ்),  சேகு பாட்  (சோலிடேரிட்டி அனாக் முடா மலேசியா), வழக்கறிஞர் ஹசான் கரீம் (உ. தலைவர், ஜொகூர் பி.கே.ஆர்.) மற்றும் நாசீர்   (அங்காத்தான் பெம்பேபாசான் பங்சா மலேசியா) ஆகியோர் உரையாற்றுவார்கள்.

முற்றிலும் இலவசமான இந்நிகழ்வில், வருகையாளர்கள் தங்கள் சந்தேகங்களைக் கேட்டு தெளிவுபெறும் வகையில் கேள்வி பதில் அங்கமும் இடம்பெறும்.

சுதந்திர தினத்தைக் கொண்டாடி கொண்டிருக்கும் நாம், மலேசிய வரலாற்று புத்தகங்களில் இடம்பெற தவறிய போராட்டவாதிகளை நினைவில் கொள்ள வேண்டியதன் அவசியத்தை அறியவேண்டும். காரணம், இப்போராட்டவாதிகளின் பங்களிப்பும் நம் நாட்டின் சுதந்திரத்திற்கு வித்திட்டிருப்பதை வரலாறு இன்று மெய்ப்பித்து வருகிறது.

arulஒவ்வொரு சுதந்திர தினத்தன்றும், காலனித்துவ ஆட்சியிலிருந்து நாட்டை விடுவிப்பதற்காகப் போராடியவர்கள் என, அரசாங்க சார்புடைய, சில பிரமுகர்கள் மற்றும் சில இயக்கங்களை மட்டுமே நினைவில் நிறுத்தி, பேசி வருகிறோம். ஆனால், இவர்களைத் தவிர்த்து, ‘மெர்டேக்கா’ என்ற முழக்கத்துடன், அந்நியர்களைத் தீவிரமாக எதிர்த்துப் போராடிய இடது சாரி முற்போக்கு அரசியல் கட்சிகள், இயக்கங்கள் மற்றும் தொழிலாளர் அமைப்புகளைக் குறிப்பிடாத மலேசிய வரலாறு முழுமை பெற்ற வரலாறாகாது.

காடுகளில் சுற்றித்திரிந்து, உண்ண உணவின்றி, உடுத்த உடையின்றி, அந்நியனை எதிர்த்து போரிட்டு மாண்ட பலரை, இன்னும் உயிருடன் இருக்கும் சிலரை, அரசாங்கத்திற்கு  எதிர்ப்பானவர்கள் என முத்திரை குத்தி; நம் வரலாற்று நூல்கள் அடையாளம் காட்ட தயங்குகின்றன. வரலாறு என்றும் வெற்றி பெற்றவர்களாலேயே எழுதப்படுகிறது. ஆக, இவ்வாறு திரை மறைவில் இருக்கும் இவர்களை , வெளிச்சத்திற்குக் கொண்டுவருவதே இந்நிகழ்வின் முக்கிய நோக்கமாகும்.

அடுத்ததாக, செப்டம்பர் 13-ல் தெமர்லோ பஹாங்கிலும்; இறுதியாக, செப்டம்பர் 14-ல் பினாங்கு செபராங் பிறையிலும் இக்கருத்துகளம் நடைபெறவுள்ளது. அன்பர்கள் இதில் கலந்துகொண்டு, மறைக்கப்பட்ட; மறக்கப்பட்ட; மறுக்கப்பட்ட நம் மலேசிய வரலாற்றினை அறிய வேண்டுமாறு ஏற்பாட்டாளர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றனர்.

மேலதிகத் தொடர்புக்கு :- ஜொகூர் 017 754 0597 (மோகன்) , தெமர்லோ 019 931 0099 (நாயிம்) , செபராங் பிறை 019 566 9518 (ச்சுன் காய்).