டிஎபி: கேடிஎம்பி தொழிலாளர் வேலை நீக்கம், லியோவ் தலையிட வேண்டும்

 

ktmb intervene dapகெரித்தாப்பி தானா மெலாயு பெஹாட் (கேடிஎம்பி) அதன் தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சங்க தலைவர்களுக்கு எதிராக எடுத்து வரும் நடவடிக்கைகள் விவகாரத்தில் போக்குவரத்து அமைச்சர் லியோவ் தியோங் லாய் தலையிட வேண்டும் என்று டிஎபி குளுவாங் நாடாளுமன்ற உறுப்பினர் கேட்டுக் கொண்டார்.

கேடிஎம்பியின் தலைவர் எலியாஸ் காடிர் பதவி விலகக் கோரி மறியலில் ஈடுபட்டதற்காக அந்நிறுவனம் ஆர்யுஎம் தொழிற்சங்கத்தின் உறுப்பினர்களில் குறைந்தபட்சம் 10 பேரை வேலையிலிருந்து நீக்கியுள்ளது என்று கூறிய குளுவாங் எம்பி லியுவ் சின் தோங், தொழிலாளர்கள் மற்றும் கேடிஎம்பி ஆகியவற்றின் நலன் கருதி அமைச்சரின் தலையீடு அவசியமாகிறது என்றார்.

கேடிஎம்பி அதன் நியமிக்கப்பட்டுள்ள தலைவர் எலியாஸ் காடிருக்கு சொந்தமானதல்ல என்று சுட்டிக் காட்டிய அவர், கேடிஎம்பியின் தலைவரும் லங்காவி நாடாளுமன்ற உறுப்பினருமான நவாவி அஹமட் இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

செப்டெம்பர் 9 இல் எட்டுக்கும் கூடுதலான தொழிற்சங்க உறுப்பினர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் மற்றும் 110 தொழிலாளர்களுக்கு அவர்கள் ஏன் கடந்த மே மாதம் மறியலில் ஈடுபட்டனர் என்பதற்கு காரணம் கோரும் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன என்று மலேசியாகினி செய்தி வெளியிட்டது.

தொழிற்சங்கம் ஆர்யுஎம்மின் தலைவர் அப்துல் ரசாக் முகமட் ஹசான் மற்றும் துணைத் தலைவர் ஆர். சுப்ரமணியம் ஆகியோர் அம்மறியல் போராட்டம் காரணமாக வேலையிலிருந்து நீக்கப்பட்டனர்.