தேச நிந்தனை விசாரனை பட்டியலில் வழக்குரைஞர் போன்

Edmund Bonநீண்டு கொண்டே போகும் தேச நிந்தனைக் குற்றச்சாட்டின் பேரில் விசாரிக்க அழைக்கப்பட்டவர்களின் பட்டியலில் வழக்குரைஞர் எட்மெண்ட் போனும் சேர்க்கப்பட்டுள்ளார்.

தற்போது வெளிநாட்டில் இருக்கும் போன் தாம் செப்டெம்பர் 16 இல் நாடு திரும்பியதும் வாக்குமூலம் அளிக்க போலீசாரை சந்திப்பேன் என்று கூறினார்.

ஜனவரி 20 இல், த மலேசியன் இன்சைடரில் முஸ்லிம் அல்லாதவர்கள் பாட்வா அல்லது அரச உத்தரவுக்கு பணிய வேண்டுமா என்று போன் எழுதியிருந்த கட்டுரை வெளியிடப்பட்டிருந்தது சம்பந்தமாக அவர் விசாரிக்கப்பட விருக்கிறார்.

போனுக்கு எதிராக பினாங்கில் போலீஸ் புகார் செய்யப்பட்டுள்ளதாக போன் அட்வகேட்ஸ் நிறுவனத்தின் நியு சின் இயு கூறினார்.

போன் எழுதியுள்ள அக்கட்டுரையில் முஸ்லிம் அல்லாதவர்கள் பாட்வா அல்லது அரச உத்தரவுகளுக்கு கட்டுப்பட வேண்டியதில்லை ஏனென்றால் அது அவர்களின் சமய சுந்தந்திரத்திற்கு எதிரானது என்று கூறியுள்ளார்.

ஜனவரி 19 இல், கெடா சுல்தான் தேசிய பாட்வா மன்றம் 1986 இல் எடுத்திருந்த முடிவை சுட்டிக் காட்டி முஸ்லிம் அல்லாதவர்கல் “அல்லா” என்ற சொல்லை பயன்படுத்தக் கூடாது என்று விடுத்திருந்த உத்தரவு குறித்து போன் மேற்கண்டவாறு கூறியிருந்தார்.

போனின் கருத்துப்படி பாட்வா மன்றத்தின் முடிவு முஸ்லிம் அல்லாதவர்களை கட்டுப்படுத்தாது.

பெடரல் நீதிமன்றம் 2009 ஆம் ஆண்டில் இது சம்பந்தமாக எடுத்திருந்த முடிவை போன் தமது கருத்துக்கு ஆதாரமாக காட்டுகிறார்.

வழக்குரைஞர் மன்றத்தின் சிறப்பு பொதுக்கூட்டம்

அதே கருத்தை லாயர்ஸ் போர் லிபெர்ட்டி அமைப்பின் நிருவனர் எரிக் பால்சன் மற்றும் அசமைப்புச் சட்ட நிபுணர் அப்துல் அசிஸ் பாரி ஆகியோரும் அவர்களுடைய கட்டுரைகளில் வலியுறுத்தியுள்ளனர்.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை, செப்டெம்பர் 19, 2014, வழக்குரைஞர் மன்றம் தேசிய நிந்தனைச் சட்டத்தின் கீழ் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க ஒரு சிறப்பு பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது.

வழக்குரைஞர் மன்றத்தின் தேசிய இள வழக்குரைஞர்கள் குழு “வழக்குரைஞர்களே, போதும் நாம் இனிமேல் பொறுக்க முடியாது என்று கூறுவதற்கு முன் நம்மவர்களில் இன்னும் எத்தனை பேர் தேச நிந்தனைச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட வேண்டும்? இஜிஎம்மிற்கு வாருங்கள், பின்னர் எதிர்ப்பு தெரிவிப்போம்” என்று டிவிட்டர் செய்தி அனுப்பியுள்ளது.