அடுத்த செவ்வாய்க்கிழமை புதிய மந்திரி புசார் பதவிப் பிரமாணம் செய்யப்பட விருக்கிறார்

 

MB- Swearinginசிலாங்கூர் மாநில புதிய மந்திரி புசார் அடுத்த செவ்வாய்க்கிழமை பதவிப் பிரமாணம் செய்யப்பட விருக்கிறார். ஆனால் வேட்பாளர் பற்றிய விபரம் எதுவும் தெரியவில்லை.

மலேசியாகினி தொடர்பு கொண்ட போது சுல்தானின் தனிப்பட்ட செயளாளர் முகம்மட் முனிர் பாணி இதனை உறுதிப்படுத்தினார்.

இந்நிகழ்ச்சிக்கான அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டு விட்டன என்று அவர் தெரிவித்தார்.

ஆனால், புதிய மந்திரி புசார் யார் அல்லது எந்தக் கட்சியைச் சேர்ந்தவர் என்ற தகவல் எதனையும் தர அவர் மறுத்து விட்டார்.

மலேசியாகினி பார்த்துள்ள அழைப்பிதழின்படி பதவிப் பிரமாணம் கிள்ளான் அலாம் ஷா அரண்மனையில் காலை மணி 10.00 க்கு நடைபெறும்.

ஷா அலாம், மெஸ்திகா அரண்மனை அதிகாரிகள் வெளியிடப்பட்டுள்ள அழைப்பிதழ் மற்றும் அதில் காணப்படும் விபரங்கள் உண்மையானவை என்றனர்.

டிஎபி டோனி புவா தாம் அது பற்றி படித்ததாகவும் ஆனால் எதுவும் தெரியாது என்று மலேசியாகினியிடம் கூறினார்.

பிகேஆர் சட்டமன்ற உறுப்பினர்களும் தங்களுக்கு எதுவும் தெரியாது என்றனர்.

தங்களுக்கு அழைப்பிதழ்கள் இன்னும் கிடைக்கவில்லை பிகேஆர் வேட்பாளர்கள் வான் அஸிசாவும் அஸ்மின் அலியும் தொடர்பு கொண்ட போது கூறினர்.

தங்களுக்கு விபரங்கள் எதுவும் தெரியாது என்றும் அவர்கள் கூறிக்கொண்டனர்.