அரசமைப்புச் சட்ட வல்லுனர் அப்துல் அசிஸ் பாரிக்கு எதிராக போலீஸ் புகார்

 

Abdul Aziz Bari police reportமலாக்கா, அலோர்காஜா மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் அரசமைப்புச் சட்ட வல்லுனர் அப்துல் அசிஸ் பாரி சமீபத்தில் எழுதியிருந்த “கட்டற்ற அதிகாரம் ஆண்டவனுக்கு மட்டுமே சுல்தானுக்கு அல்ல” என்ற கட்டுரை ஓர் ஓன்லைன் தளத்தில் வெளியிடப்பட்டிருந்ததற்கு எதிராக அவர் மீது போலீஸ் புகார் செய்யப்பட்டுள்ளது.

மலாக்கா மற்றும் நெகிரி செம்பிலான் ஆகியவற்றை சேர்ந்த நானிங் இனத்தவரால் அப்புகார்கள் செய்யப்பட்டதாக த ஸ்டார் ஓன்லைன் செய்தி கூறுகிறது.

அசிஸ் பாரிக்கு எதிராக மொத்தம் ஐந்து புகார்கள் செய்யப்பட்டுள்ளன. அசிஸ் பாரி பிகேஆரின் தலைவர் வான் அஸிசா சிலாங்கூர் மந்திரி புசாராக நியமிக்கப்பட வேண்டும் என்று எழுதியிருந்தது ஒரு கட்டுரையில் மேற்கோள் காட்டி எழுதப்பட்டிருந்தது. சிலாங்கூர் சுல்தான் 1992 ஆம் ஆண்டு பிரகடனத்திற்கு கட்டுப்பட்டவர் என்று அவர் கூறியதாகவும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

“இந்த கட்டுரைகள் அரச அமைவுமுயை அவமதிப்பதாக நாங்கள் கருதுகிறோம். மந்திரி புசார் பதவிக்கான வேட்பாளர் சுல்தானின் ஒப்புதலுடன் மட்டுமே நியமிக்கப்பட வேண்டும் என்று சிலாங்கூர் அரசமைப்புச் சட்டம் தெளிவாக கூறும் போது அந்த கட்டுரைகள் மந்திரி புசாரை தேர்வு செய்வதில் சுல்தானுக்கு உரிய அதிகாரம் மீது அப்பட்டமான கேள்வி எழுப்புகிறது”, என்று அக்கூட்டத்தினரின் பிரதிநிதி ஜாமி சிடி கூறினார்.

இன்னொரு நானிங் தலைவர் அப்துல் லத்திப் ஹசிம் அந்த அறிக்கை தேசநிந்தனையானது என்று கூறிக் கொண்டார்.