எங்கள் நிலம் எங்களுக்கே உரித்தானது! வேறு ஆட்களுக்கு வழங்கினால் நீதி மன்றம் செல்வோம்! வடக்கு முதலமைச்சர்

vikneswaran_4வடபகுதிக் காணிகள் அந்த மக்களுக்கே உரித்துடையன: வேறுஆள்களுக்கு வழங்கப்பட்டால் நீதிமன்றை நாடுவோம் என வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் கூறியுள்ளார். நேற்று செய்வாய்கிழமை முதலமைச்சர் தலைமையில் வடமாகாண அமைச்சர்கள் குழு மன்னார் ஈச்சளவக்கை கிராமத்தில் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக நேரில் சென்று அவதானித்த பின்னர் கிராம மக்கள் முன்னிலையில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார் அவர் தனது உரையில் மேலும் தெரிவிக்கையில்:

எங்கள் நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்துவதற்கு அரசாங்கம் எல்லா விதமான நடவடிக்கைகளையும் எடுத்து கொண்டு இருக்கிறது. ஆனாலும் கட்டாயமாக உங்கள் குறைகளை நாங்கள் தீர்த்துவைப்போம். இத்தனை காலமாக நீங்கள் ஆக்கப் பொறுத்துவிட்டீர்கள் எனவே இனி நீங்கள் ஆறப்பொறுக்கவேண்டும்.

காரணம் பல விதமான கஷ்டங்களை நாங்களும் அனுபவித்து கொண்டுதான் இருக்கின்றோம். முக்கியமாக நிதி சம்பந்தமான பிரச்சினைகள் எங்களுக்கு இருக்கின்றன. அத்துடன் அரசாங்கத்துக்கு வட மாகாணத்தில் எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்திலே ஓர் அரசாங்கம் மக்களால் நிறுவப்பட்டுள்ள காரணத்தால் நாங்கள் அரசாங்கத்தினுடைய விமர்சனத்திற்கும் அவர்களுடைய தாகத்திற்கும் முகம் கொடுக்கவேண்டிய நிலையில் இருக்கிறோம்.

வடமாகாணத்தில் உள்ள வீதிகளின் அபிவிருத்தி தொடர்பாக நாம் கவனம் செலுத்தியுள்ளோம். அடுத்த வருடத்தில் பல மில்லியன் ரூபாக்களை இந்த அபிவிருத்திக்காகத் தரும்படி அரசைக் கேட்டிருக்கின்றோம். அவர்கள் எவ்வளவு தரப்போகிறார்கள் என்பது தெரியாது. ஆனால் கிடைப்பதை வைத்து செய்யவேண்டியதை செய்வதுதான் எமது திட்டம்.

2 ஆயிரம் ஏக்கருக்கு மேலான காணிகளை வைத்துக்கொண்டு இராணுவம் இங்கு தொடர்ந்து இருக்கவேண்டுமா? என்ற கேள்வி எழுகின்றது. இதனால்தான் இராணுவத்தை இங்கிருந்து விலக்கவேண்டும் என்ற குரலை நான் தொடக்கத்திலிருந்தே கொடுத்து வருகிறேன். இராணுவம் என்னிடம் வந்து பேசுவார்கள். அப்போது நான் ” உங்களுடன் எங்களுக்கு எந்த பிரச்சினையம் இல்லை, நீங்களும் எங்களுடைய சகோதரர்கள்தான், ஆனால் நீங்கள் மக்களது காணிகளில் இருந்தால் ஏற்படும் பிரச்சினைகளை சிந்திக்கவேண்டும்” என்று அவர்களிடம் குறிப்பிடுவேன்.

நேற்றுதான் எனக்கு தெரியவந்தது 20 ஆயிரம் விண்ணப்பங்களைக் கொண்டு 12 ஆம் திகதி அல்லது 13ஆம் திகதி ஜனாதிபதி வடக்குக்கு வருகிறார் என்றும், அவர் மக்களுக்கு காணிகள் வழங்கப்போகிறார் என்றும். அதாவது ஒரு நாட்டினுடைய ஜனாதிபதி தான்தோன்றித்தனமாக எல்லா இடங்களிலும் உள்ள காணிகளை எடுத்து மக்களுக்கு கொடுக்க முடியும் என்றால் இங்கு இருக்கும் சகல காணிகளையும் தெற்கில் இருக்கும் யாராவது ஒருவருக்கு கூட வழங்கினாலும் கூட நாங்கள் எதுவுமே கேட்க முடியாத நிலை ஏற்படும்.

சட்டத்தின்படி பார்த்தால் அந்தந்த இடங்களில் இருக்கும் மக்களுக்குத்தான் அந்தந்த காணிகள் உரித்துடையன. அரச காணிகள் என்றால் கூட அரசாங்கம் நம்பிக்கை பொறுப்பான அந்தக் காணிகளை அந்த ஊரிலுள்ள மக்களுக்காக வைத்திருக்க முடியுமே தவிர வெளியிலிருந்து வரும் மக்களுக்குக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க முடியாது.  ஆகவே இது சம்பந்தமாக நாங்கள் அலசி ஆராய வேண்டியுள்ளது. ஒருவேளை நீதிமன்றங்களை தேடிச்செல்லும நிலையும் ஏற்படும் என அவர் தனது உரையில் மேலும் குறிப்பிட்டார்.

TAGS: