தமிழில் நகைச்சுவை நடிகர்கள் பஞ்சம்!

vadi_sanதமிழ்த் திரையுலகில் வார வாரம் புதுப்புது ஹீரோக்கள் கூட அறிமுகமாகிவிடுவார்கள். ஆனால், நகைச்சுவை நடிகர்கள் மட்டும் அறிமுக மாட்டேன் என்கிறார்கள். கடந்த சில வருடங்களாக காணாமல் போயிருந்த வடிவேலு நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘தெனாலிராமன்’ படத்தில் நாயகனாக நடித்தார்.

படம் வெளிவந்து திக்கித் திணறி ஓடியே விட்டது. வடிவேலு இல்லாத நேரத்தில் சரியான சமயத்தில் பலருக்கும் கை கொடுத்த சந்தானத்திற்கும் நாயகன் ஆசை வந்து அவரும் ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ என்று அவர் பங்கிற்கு நாயகனாக நடித்த படத்தை வெளியிட்டார்.

அந்தப் படம் வல்லவனும் இல்லாமல் ஆயுதமாகவும் இல்லாமல் வெறும் புல்லாகப் போய்விட்டது. இருந்தாலும் வடிவேலுவை பலரும் அழைக்கத் தயங்குகிறார்கள், சந்தானம் நாயகன் கனவில் இருந்து இறங்கி வரமாட்டேன் என்கிறார்.

அதனால் தற்போது சூரி, ‘எதிர் நீச்சல்’ சதீஷ் இருவர் மட்டுமே நகைச்சுவை நடிகர்களாக இன்றைய இளம் ஹீரோக்களைக் காப்பாற்றி வருகிறார்கள். அவர்கள் ஹீரோக்களை வேண்டுமானால் காப்பாற்றிக் கொள்ளலாம், ஆனால் ரசிகர்களை காப்பாற்றிக் கொள்வார்களா என்பதுதான் சந்தேகமே. ‘ஜீவா’ படத்தில் இடைவேளையின் போதுதான் சூரி வருகிறார். புதிதாக எதுவுமில்லாமல் ஏதோ கொஞ்சமாக சிரிக்க வைக்கிறார் என்கிறார்கள்.

‘சிகரம் தொடு’ படத்தில் விக்ரம் பிரபுவின் நண்பனாக நடித்த சதீஷ் சிரிக்க வைத்தாரா என்றும் கேள்வி கேட்கிறார்கள். ஆனாலும், வேறு வழியில்லாமல் இவர்களிருவர் காட்டில்தான் தற்போது மழை பெய்து வருகிறதாம்.

சதீஷ் கொஞ்சம் அதிர்ஷ்டசாலி, விஜய்யுடன் ‘கத்தி’, விஷாலுடன் ‘ஆம்பள’ என அசத்தலாக வாய்ப்புகளை அள்ளிவிட்டார். சூரிக்குப் பல படங்கள் கைவசம் இருந்தாலும் நகைச்சுவையில் திரையில் வந்தாலே சிரிக்க வைக்க வேண்டும் என்ற சூத்திரத்தை கற்றுக் கொள்ளாமலே இருக்கிறார்.

ஆயிரம் பேர் பக்கத்தில் அமர்ந்து கொண்டோ, அல்லது மண்டபத்தில் யாரோ எழுதிக் கொடுத்தாலோ கூட தாமாகவே மாயம் செய்து ரசிகர்களை சிரிக்க வைக்கும் நகைச்சுவை நடிகர்கள் பஞ்சம் தமிழ்த் திரையுலகில் தற்போது ஆரம்பமாகிவிட்டது.

உங்களில் யார் அடுத்த வடிவேலு, சந்தானம் என்பதுதான் ரசிகர்களின் கேள்வி…அதற்கு புதிதாக யாராவது வருவார்களா, அல்லது இருப்பவர்களே சாதிப்பார்களா…என்பது போகப் போகத்தான் தெரியும்.