ஜெயலலிதாவுக்கு இப்போதைக்கு ஜாமீன் இல்லை

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் இருக்கும் ஜெயலலிதாவுக்கு தற்போதைக்கு ஜாமீன் மறுத்து கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

aiadmk
ஜாமீன் வழங்கப்பட்டதாக முதலில் தவறுதலாக செய்திகள் வெளியாக சென்னையிலுள்ள கட்சி அலுவலகத்தின் முன்பு பட்டாசு வெடித்து கொண்டாடப்பட்டது.

 

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டு பெங்களூர் பரப்பன அக்ரஹாரச் சிறையில் இருக்கும் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரின் ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணையில் இந்த உத்தரவு அளிக்கப்பட்டுள்ளது.

18 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கில் செப்டம்பர் 27ஆம் தேதியன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் நான்கு பேருக்கும் தலா நான்காண்டு சிறை தண்டனையும் ஜெயலலிதா தவிர மற்றவர்களுக்கு தலா பத்து கோடி ரூபாய் அபராதமும் ஜெயலலிதாவுக்கு 100 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

சிறப்பு நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட இவர்கள், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரியும் தண்டனையை நிறுத்திவைக்கக் கோரியும் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

கர்நாடக நீதிமன்றங்கள் தசரா விடுமுறையில் இருந்ததால், இவர்களது மனுக்கள் கடந்த வாரம் விடுமுறைக் கால நீதிபதி ரத்னகலா முன்பாக விசாரணைக்கு வந்தபோது, அவர் இதனை வழக்கமாக விசாரிக்கும் அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டார். இதையடுத்து, தசரா விடுமுறை முடிந்து நீதிமன்றம் மீண்டும் இயங்க ஆரம்பித்ததும் செவ்வாய்க்கிழமையன்று, 73வது வழக்காக நீதிபதி சந்திரசேகர ராவ் முன்பாக விசாரணைக்கு வந்தது.

அரசு தரப்பு வாதம்

அரசுத் தரப்பின் சார்பில் சிறப்பு நீதிமன்றத்தில் வாதாடிய பவானி சிங்கே மீண்டும் ஆஜரானார். ஜெயலலிதா சார்பாக ராம் ஜெத்மலானி ஆஜராகி வாதிட்டார்.

ஜெயலலிதா தரப்பில் ஆஜரான ஜெத்மலானி, “ஜெயலலிதா சட்டத்திற்குக் கட்டுப்பட்டு நடக்கக்கூடியவர். நீதிமன்றம் அழைக்கும்போது அவர் ஆஜராகத் தவறியதில்லை. இந்த வழக்கில் மேல் முறையீட்டு விசாரணை நடந்து முடிய பெரும் கால தாமதம் ஏற்படும். ஆகவே, அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டுமென” வாதிட்டார்.

சுமார் ஒரு மணி நேரம் ஜெத்மலானி வாதிட்டார். அதற்குப் பிறகு சசிகலா சார்பில் வழக்கறிஞர் அமித் தேசாய் வாதிட்டார். ஜெயலலிதாவின் பினாமியாக சசிகலா செயல்பட்டார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று அவர் வாதிட்டார். அதற்குப் பிறகு மதிய உணவிற்காக நீதிமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.

உணவு இடைவேளைக்குப் பிறகு நீதிமன்றம் மீண்டும் கூடியதும், ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி சில விளக்கங்களை அளித்தார். அதற்குப் பிறகு இளவரசி தரப்பு வழக்கறிஞர் அஷ்மத் பாஷா வாதாடினார்.

இதற்குப் பிறகு வாதாடிய அரசுத் தரப்பு வழக்கறிஞர் ஜெயல்லிதாவுக்கு நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் வழங்கலாம் எனத் தெரிவித்தார்.

ஜாமீன் வழங்கப்பட்டதாக முதலில் தவறான செய்திகள்

இதையடுத்து நீதிபதி ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட நான்கு பேருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கி கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதாக எமது இணையதளம் உட்பட பல்வேறு ஊடகங்களிலும் செய்திகள் முதலில் வெளியிடப்பட்டிருந்தது.

ஆனால் நீதிபதியின் உத்தரவானது, ஜெயலலிதாவுக்கு தற்போதைக்கு ஜாமீன் மறுக்கப்படுவதாகவும், அவரது மனு சம்பந்தமான அடுத்த விசாரணை 21ஆம் தேதி எடுத்துக்கொள்ளப்படும் என்றும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

மேல் முறையீடு

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சந்திரசேகரா ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை அவ்வளவு எளிதில் வெளியில் விடமுடியாது என்று கூறினார். உடனடியாக சொத்துக் குவிப்பு வழக்கில் வழங்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது எனவும் நீதிபதி தெரிவித்தார்.

ஊழல் என்பது மனித உரிமைகளுக்கு எதிரானது என்றும் நீதிபதி கூறினார். வேண்டுமானால், ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தை அணுகலாம் என்றும் நீதிபதி கூறினார்.

இதற்குப் பிறகு, இந்த மேல் முறையீட்டு மனுக்கள் மீது அக்டோபர் 27ஆம் தேதி விசாரணை நடக்கும் எனவும் நீதிபதி அறிவித்தார்.

தீர்ப்பின் நகல் கிடைத்ததும் உச்ச நீதிமன்றத்தை அணுகவிருப்பதாக ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் குமார் தெரிவித்தார்.

வன்முறை

ஜெயலலிதாவுக்கு ஜாமீன் மறுக்கப்பட்ட செய்தி பரவியதும், தமிழகத்தில் ஆங்காங்கே பஸ்கள் மறிக்கப்பட்டன. சில பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.

இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் இன்று வெளியிட்டிருக்கும் அறிக்கையில், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் எந்த ஒரு நடவடிக்கையையும் ஜெயலலிதா விரும்ப மாட்டார் என்றும் ஆகவே, கடையடைப்பு, வேலை நிறுத்தம் போன்ற எந்த நடவடிக்கையிலும் ஈடுபட வேண்டாமென வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதற்கிடையில், விருதுநகர் மாவட்டம் காளையார் கோவிலில் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைத்ததாக வெளியான செய்தியையடுத்து, சிலர் பட்டாசு வெடித்ததில் ஏற்பட்ட தீப்பொறி, அங்கு உள்ள சொர்ண காளீஸ்வரர் கோவில் கோபுரத்தின் மீது பட்டது. இதில் கோவிலின் இரண்டு கோபுரங்களையும் புதுப்பிப்பதற்காக கட்டப்பட்டிருந்த சாரம், தீயில் எரிந்து நாசமானது. -BBC

TAGS: