தண்ணீர் சீரமைப்பு ஒப்பந்தம் இரகசியமானதா? விளக்கம் தேவை

azmசிலாங்கூர்  நீர்  சீரமைப்பு  ஒப்பந்தம்  எதற்காக  இரகசியமாக  வைக்கப்பட  வேண்டும்  என்பதற்கு  புத்ரா  ஜெயா-விடமிருந்து  விளக்கம்  தேவை  என  சிலாங்கூர்  மந்திரி  புசார்  கேட்கிறார்.

இன்று  செய்தியாளர்களிடையே  பேசிய  எம்பி,  முகம்மட்  அஸ்மின்  அலி, அந்த ஒப்பந்தத்தைப்  படித்துப்  பார்த்ததாகவும்  அதை  தேசிய  இரகசியப் பாதுகாப்புச்  சட்டத்தின்கீழ்  வைக்க  வேண்டிய  அவசியம் ஏன்  வந்தது  என்பதைத்  தம்மால்  புரிந்துகொள்ள  முடியவில்லை  என்றும்  சொன்னார்.

“அதில்  தேசிய  பாதுகாப்பு  விவகாரங்கள்  எதுவும்  சம்பந்தப்படவில்லை.

“அது  இரு  தரப்பினர்  செய்துகொண்ட  ஒரு  வணிக ஒப்பந்தம்.  அதை  ஏன்  கமுக்கமாக  வைத்துக்கொள்ள  வேண்டும்?

“பொதுமக்களின்  நலன் காப்பதுதான்  அதன்  நோக்கம்  என்கிறபோது,   அதைப்  பொதுமக்களின்  பார்வைக்குக்  கொண்டுசெல்லாமல்  தடுப்பதற்குக்  காரணம்  இல்லையே”, என்றவர்  கூறினார்.

சட்டத்துறைத்  தலைவரின்(ஏஜி)  ஆலோசனையின்பேரில்தான்  அந்த  ஒப்பந்தத்தைப்  பொதுமக்களின்  பார்வைக்குக்  கொண்டு  செல்ல  அனுமதி  மறுக்கப்பட்டதாக  எரிபொருள்  அமைச்சர்  மெக்சிமஸ்  ஒங்கில்லி  கூறியிருப்பதை  மந்திரி  புசார்  சுட்டிக்காட்டினார்.

“அவர் (ஏஜி) என்ன  சொன்னார்?  ஒப்பந்தம் பகிரங்கப்படுத்தப்படுவதைத்  தடுப்பதற்கு  நியாயமான  காரணம்  இருக்கும்,  அது  எனக்குத்  தெரிய  வேண்டும்”, என்று  அஸ்மின் கூறினார்.