லைகா நிறுவனத்தின் பெயர் நீக்கம்: “கத்தி’ திரைப்படம் இன்று வெளியாகிறது

லைகா நிறுவனத்தின் பெயரை விளம்பரங்களில் நீக்க தயாரிப்பாளர்கள் ஒப்புக்கொண்டதால் “கத்தி’ திரைப்படம் புதன்கிழமை (அக்.22) வெளியாகிறது.

“கத்தி’ படத்தைத் தயாரித்துள்ள லைகா நிறுவனத்துக்கும், இலங்கை அதிபர் ராஜபட்சவுக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறி, அந்தப் படத்துக்கும் லைகா நிறுவனத்துக்கும் தமிழ் அமைப்புகள், மாணவர் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன.

இதனால் தீபாவளிப் பண்டிகைக்கு வெளியிடத் திட்டமிடப்பட்டிருந்த “கத்தி’ திரைப்படம் வெளியாகுமா என்ற சந்தேகம் எழுந்தது. இந்நிலையில் படத்தின் நாயகனான நடிகர் விஜய் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:

சில நாள்களாக தமிழ் அமைப்புகள் “கத்தி’ திரைப்படத்தைத் தயாரித்த லைகா நிறுவனத்தின் பெயரை விளம்பரங்களில் இருந்து நீக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தன. அவற்றின் வேண்டுகோளை ஏற்று படத்தின் விளம்பரங்களில் லைகா பெயரை நீக்க தயாரிப்பாளர்கள் ஒப்புக்கொண்டனர்.

எனவே, இந்தப் பிரச்னை சுமுகமாக முடிந்துவிட்டது. “கத்தி’ திரைப்படம் சுமுகமாக வெளிவர எங்களுக்கு ஆதரவளித்த அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா, காவல்துறையினர், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், தமிழ் அமைப்புகளின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து லைகா பெயரை நீக்கிய தயாரிப்பாளர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன் என அதில் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய்யின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்கம், திரைப்பட விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பின் சிறப்புக் கூட்டம் சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் “கத்தி’ திரைப்படத்தை தமிழகம் முழுவதும் புதன்கிழமை வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளியானது கத்தி: ரசிகர்கள் உற்சாகம்

பெரும் பரபரப்புக்கும் சர்ச்சைகளுக்கும் இடையே இன்று  விஜய் நடித்துள்ள கத்தி திரைப்படம் தமிழகத்தில் 450க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. பெரும்பாலான திரையரங்குகளில் போலீஸார் பாதுகாப்புப் பணியில் உள்ளனர்.

கிட்டத்தட்ட அதே அளவு எண்ணிக்கையில் பூஜை திரைப்படமும் இந்த தீபாவளிக்கு ரசிகர்களுக்கு விருந்தாகியுள்ளது. பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் ஹாபி நியூ இயர்

படம் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு 150க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்தமுறை தீபாவளிக்கு முக்கியமான 2 படங்களே போட்டியில் உள்ளதால் மற்ற ஸ்டார் நடிகர்களின் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இருந்தபோதும், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள கத்தி திரைப்படம் விஜய் ரசிகர்களை உற்சாகப் படுத்தியுள்ளது.