தாக்குதல் நடத்தினால், அதற்கான பலனை அனுபவிக்க நேரிடும்: பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் எச்சரிக்கை

Tamil_News_large_1096969புதுடில்லி: எல்லையில் தொடர்ந்து அத்துமீறினால், அதற்கான பலனை அனுபவிக்க வேண்டியிருக்கும் என பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரித்துள்ளது. மேலும் இரு நாடுகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தை துவங்குவதற்கான சூழ்நிலையை ஏற்படுத்துவது பாகிஸ்தானின் பொறுப்பு எனவும் கூறியுள்ளது.

அணு சக்தி மிகுந்த இரண்டு நாடுகளுக்கு இடையில் உள்ள 200 கி.மீ., எல்லையில், கடந்த சில நாட்களாக பாகிஸ்தான் ராணுவம், இந்திய நிலைகள் மீதும், பொது மக்கள் குடியிருப்புகள் மீதும் தாக்கி வருகிறது. கடந்த 2003க்கு பிறகு பாகிஸ்தானின் இந்த மோசமான நடவடிக்கை காரணமாக 20 பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளனர். கடந்த மாதத்தில் மட்டும் இரு தரப்பினருக்கு இடையே 1000க்கு மேல் துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது.

இது தொடர்பாக, தனியார் டிவிக்கு பேட்டியளித்த பாதுகாப்புத்துறை அமைச்சர் அருண் ஜெட்லி, பாகிஸ்தானை விட நாம் வலிமை மிக்கவர்கள். தொடர்ந்து பாகிஸ்தான் தாக்குதலை நடத்தினார், அதற்கான பலனை அனுபவிக்க வேண்டியிருக்கும். கடந்த காலங்களில் பாகிஸ்தான் துப்பாக்கிச்சூடு நடத்திய போது, நமது கையில் பாதுகாப்பு கவசம் இருந்தது. தற்போது வாள்(கத்தி) உள்ளது என கூறினார். மேலும் அவர், பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தையை துவக்குவதற்கு இந்தியா தயாராக உள்ளது. இதற்கான சூழ்நிலையை பாகிஸ்தான் தான் ஏற்படுத்த வேண்டும். பேச்சுவார்த்தை துவக்குவதற்கு தடையாக உள்ள பிரச்னைகளை பாகிஸ்தான் தடுத்து நிறுத்த வேண்டும் என கூறினார்.

இந்திய அரசு எல்லையில் ராணுவத்தினரை குவித்ததால் தான் பிரச்னை ஏற்பட்டதாக, பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் கூறியுள்ளனர்.

கடந்த தேர்தல் பிரசாரத்தின் போது,காஷ்மீரில் வன்முறையை தூண்டும் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கப்படும் எனவும், பயங்கரவாதிகளை இந்தியாவிற்குள் பாகிஸ்தான் அனுப்பி வருவதாகவும் பிரதமர் மோடி கூறியிருந்தார். இதன் பின்னர் பதவியேற்பு விழாவின் போது, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பிற்கு மோடி அழைப்பு விடுத்தார். இதனை தொடர்ந்து நவாசும், டில்லி வந்து மோடியை சந்தித்து பேசினார்.

பின்னர் கடந்த ஆகஸ்ட் மாதம் இருநாட்டு வெளியுறவுத்துறை செயலாளர்கள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடைபெற இருந்தது. ஆனால் இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர், காஷ்மீர் பிரிவினைவாதிகளை சந்தித்து பேசியதை தொடர்ந்து பேச்சுவார்த்தையை ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.

TAGS: