எங்களுடைய பொதுக்கூட்டத்தில் தலையிடாதீர், அம்னோ கெராக்கானுக்கு சொல்கிறது

 

umno-gaஎதிர்வரும் அம்னோ பொதுக்கூட்டத்தில் இதர கட்சிகள் தலையிடக்கூடாது என்று அம்னோ இளைஞர் பிரிவு செயற்குழு உறுப்பினர் அர்மான் அஸ்ஹா ஹனிபா கூறுகிறார்.

கெராக்கானை பின்பற்றி அம்னோவும் அதன் பொதுக்கூட்டத்தில் உணர்ச்சிகரமானக் கருத்துகளைத் தெரிவிக்கும் பேராளர்களை இடைநீக்கம் செய்ய வேண்டும் என்று கெராக்கான் தலைமைச் செயலாளர் லியாங் டெக் மெங் தெரிவித்திருந்த கருத்துக்கு எதிர்வினையாற்றிய அர்மான் அவ்வாறு கூறினார்.

“கெராக்கான் மாநாட்டில் நடந்தவை அக்கட்சியின் உரிமை. அது அவர்களின் நிலைப்பாடு. அக்கட்சி செய்த முடிவை நாங்கள் மதிக்கிறோம்.

“ஆனால், அம்னோ கூட்டத்தில் குழப்பம் உண்டாக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம். அம்னோ கூட்டத்தில் தலையிடுவதைவிட கெராக்கான் அக்கட்சியை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்துவது நல்லது”, என்று அவர் மலேசியாகினியிடம் கூறினார்.

கெராக்கான் பாரிசான் பங்காளி என்றாலும், அம்னோவின் விவகாரங்களில் அக்கட்சி குறுக்கிடுவது முறையல்ல என்று அவர் மேலும் கூறினார்.