நாம் வணிக சமூகமாக மாறவேண்டும்! -கோடிசுவரன்

indians copyவணிக சமூகமாக நாம் இந்த மண்ணில் காலெடுத்து வைத்தோம். வெற்றி மேல் வெற்றி பெற்றோம். இது நமது வரலாறு.

இந்த வரலாறு மீட்டு எடுக்கப்பட வேண்டும். இடைக்காலத்தில் நாம் வீழ்ச்சி அடைந்திருக்கலாம். காரணங்கள் பல. ஆனால் அதனையே சொல்லிக் கொண்டிருக்க முடியாது. நாம் மீண்டும் பழைய நிலைக்கு, அந்தப் பொற்காலத்திற்குச் செல்ல வேண்டும்.

அரசாங்க உதவி இல்லாமல் நம்மால் எதையும் சாதிக்க முடியாது என்று சொல்லுபவர்கள் நம்மிடையே உண்டு. அரசாங்க உதவி என்பது நாம் சாதித்த பிறகு தான் கிடைக்கும்! இதைத்தான் நடைமுறையில் நாம் பார்க்கிறோம்!

எந்தத் தொழிலாக இருந்தாலும் ஆரம்பிக்கும் போது ஒரு சில தடங்கல்கள் இருக்கத்தான் செய்யும். இந்தத் தடங்கல்கள் பெரும்பாலும் நமது சுற்றுப்புறத்திலிருந்து தான் வரும். சிலரது வார்த்தைகள் நம்மைக் கலங்கடிக்கும். இப்படி எதிர்மறையான கருத்துக்களை உதிர்ப்பவர்கள் பெரும்பாலும் தோல்வியாளர்களைத் தான் சுட்டிக்காட்டிப் பேசுவார்கள்.

இந்த இடத்தில் மிகப்பெரிய உண்மையை நாம் உணர வேண்டும். நமது சமூகம் தோல்வியாளர்களுக்குத் தான் முக்கியத்துவம் கொடுக்கிறது. நம்மோடு உறவாடுபவர்கள், நமக்கு நெருக்கமானவர்கள் யார் என்று பார்த்தோமானால் அனைவரும் ஏதோ ஒரு வகையில் தோல்வியாளர்களாகத் தான் இருப்பார்கள்.

நாம் பேசுகின்ற பேச்சுக்கள் அனைத்தும் தோல்வியாளர்களைப் பற்றியதாகத்தான் இருக்கும். இருபத்து நான்கு மணி நேரமும் தோல்வியைப் பற்றியை பேசிக்கொண்டிருந்துவிட்டு வாழ்க்கையில் வெற்றிபெற வேண்டுமானால் எப்படி வெற்றிபெற முடியும்?

நமது சிந்தனைகளை நாம் மாற்ற வேண்டும். நமது எண்ண ஓட்டங்களை நாம் மாற்ற வேண்டும். தோல்வியைப்பற்றிப் பேசுவதும், தோல்வியாளர்களோடு கைகோப்பதும் ஒரு வெற்றியாளனுக்கு தடங்கலாகவே இருக்கும். நாம் தோல்வியைத் தழுவது இது போன்ற தோல்வி மனப்பான்மை உள்ளவர்களால் தான்!

வெற்றி பெற்றவர்களே நமது இனத்தில் இல்லையா? நிறையவே இருக்கின்றனர். வணிகத்தில் சிறந்து விளங்குபவர்கள் குஜாராத்தியரும், முஸ்லிம்களும்.  கல்வியில் சாதனைப் புரிந்தவர்கள் பஞ்சாபியர்களும், மலையாளிகளும். தமிழர்கள் இவர்களை விட இன்னும் அதிகமாகவே சாதனைகள் புரிந்திருக்கின்றனர். வியாபாரத்துறையில் நாம் அதிகமாகவே சாதனைகள் புரிந்திருக்கிறோம். கல்வித்துறையில் நாம் யாருக்கும் குறைந்தவர்கள் அல்ல. ஆனால் நமது சாதனைகள் இன்னும் அதிகரிக்கப்பட வேண்டும் என்பது தான் இன்றைய நிலை.

நாம் எவ்வளவு தான் பல துறைகளில் சிறந்து விளங்கினாலும் பொருளாதாரம் என்று வரும் போது வியாபாரத்துறை மட்டுமே நம்மை உயர்த்திக் காட்டும். மற்றத் துறைகளை விட வியாபாரம் மட்டுமே மிகவும் சவாலான ஒரு துறை. ஐந்தாண்டு படித்தோம், பத்தாண்டு படித்தோம் பின்னர் படிப்பைச் சார்ந்த ஒரு தொழில் வல்லுனர் ஆனோம் என்பதெல்லாம் வியாபாரத்துறையில் சரிபட்டு வராது. மற்றத் துறைகளை விட வியாபாரத்துறையில் மட்டும்தான் கற்பனா சக்தி அதிகம் வேண்டும். வியாபாரத்துறையில் சவால்கள் அதிகம். அதே போல சங்கடங்களும் அதிகம்.

எனக்குத் தெரிந்த தொழிலதிபர் ஒருவர் போக்குவரத்து தொழிலில் உள்ளவர். சட்டம் படித்தவர். பல லோரிகளுக்கு உரிமையாளர். ஒரு நாள் லோரி ஓட்டுனர் தீடீரென வேலைக்கு வரவில்லை. வேறு வழியில்லை. அவரே லோரி ஓட்டுனராக மாறினார்! அதைப் பற்றியெல்லாம் அவர் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. தொழிலில் இதெல்லாம் “சகஜமப்பா” என்பார்.

ஒவ்வொரு வணிகருக்கும் ஆரம்பகாலம் என்பது மலர் மெத்தை அல்ல. இன்று வணிகத்தில் ஒருவர் கொடிகட்டிப் பறக்கின்றார் என்றால் ஆரம்பகாலத்தில் அவர் பட்ட துன்பங்கள், துயரங்கள் துரோகங்கள் அனேகம். அதனைக் கடந்து தான் இன்றைய நிலைக்கு அவர் வந்திருக்கிறார். நம்மில் சிலர் மந்திரத்தால் மாங்காய் பறிக்க நினைக்கின்றனர். வணிகத்தில் உழைப்பும், திட்டமிடுதலுமே முக்கியம்.

புயலுக்குப் பின் அமைதி என்பது போல ஆரம்பகாலம் சவால் மிக்கதாக இருந்தாலும் பிற்காலத்தில் அமைதி உண்டு.  ஒரு தொழிலைத் தொடங்கி அந்தத்தொழில் வளர்ச்சி பெற்றப் பிறகு அந்தத் தொழிலை உங்களின் வாரிசுகளிடம் ஒப்படைக்கும் போது வாழ்க்கையில் நாமும் சாதித்தோம் என்னும் பூரண திருப்தி ஏற்படுகிறது. மற்ற தொழில்களில் ஏற்படும் சாதனைகள் பள்ளிகளில் நாம் படித்தவைகளின் தொடர்ச்சி. ஆனால் வியாபாரத்தில் ஏற்படும் சாதனைகள் நம்மால் – நாமே ஏற்படுத்திய சாதனை. நாமே அதற்குப் பொறுப்பு. காரணம் வியாபாரத்தில் மட்டும் தான் அடிபட்டு, உதைப்பட்டு பல அனுபவங்களைப் பெற்று சாதனைகள் புரியமுடியும்.

இன்று நாம் என்ன செய்கிறோமோ அதனைத் தான் நாளை நமது பிள்ளைகளும் செய்வார்கள். இளம் வயதிலேயே வியாபாரம் செய்ய வேண்டும் என்னும் ஆர்வத்தை அவர்களுக்கு நாம் ஊட்ட வேண்டும்.

நமது நிறுவனத்தில் பத்து பேர் வேலை செய்தாலும் ஒரு பத்து பேர்களுடைய வாழ்வாதாரதிற்கு நாம் துணையாக இருக்கிறோமே என்னும் திருப்தி நமக்கு ஏற்படும்.

அது மட்டும் அல்ல. பணம் இருந்தால் தான் சீரழிகின்ற ஒரு சமூகத்தை நாம் தூக்கி நிறுத்த முடியும். நமது சமூகத்தில் “இல்லை, இல்லை” என்கிற கூப்பாடு ஓய்ந்த பாடில்லை. பொருளாதார வளம் இல்லாத ஒரு சமுதாயத்தை யார் வேண்டுமானாலும் சீண்டி பார்க்கலாம். அது தான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது.

இதற்கெல்லாம் ஓரே தீர்வு நமது சமுதாயம் வணிக சமுதாயமாக மாற வேண்டும். வர்த்தக சமுதாயமாக மாற வேண்டும். பணமுள்ள சமுதாயமாக மாற வேண்டும்.

வேலை செய்கின்ற சமுதாயம், கூலி வேலை செய்கின்ற சமுதாயம் என்று பெயர் எடுத்து விட்டோம். இரண்டு பேர் வேலை செய்தால் அங்கே ஒரு “யூனியன்” அமைக்கும் ஒரு சமுதாயம் என்று பெயர் எடுத்து விட்டோம்.

இனி நாம் அடுத்தக் கட்ட நகர்வுக்கு தயார் செய்யவேண்டும். இனி நாம் மற்றவர்களுக்கு வேலை கொடுக்கும் சமுதாயமாக மாற வேண்டும். ஒரு முதாலாளியாக மாற வேண்டும். தொழிலாளி என்கின்ற ‘நிரந்திர’ த்திலிருந்து விடுபட வேண்டும்.

நம்மில் பலர் சிறுரக லாரிகளை வைத்துக்கொண்டு பழைய சாமான்கள் வாங்கும் தொழிலில் ஈடுபட்டிருக்கின்றனர். துணைக்கு ஒரு உதவியாளரையும் வேலைக்கு வைத்திருக்கின்றனர். அந்த உதவியாளருக்கு நாம் ஒரு முதாலாளி என்னும் கம்பீரம் நம்மிடம் இருக்க வேண்டும். இந்தத் தொழிலேயே நாம் இன்னும் கவனம் செலுத்தினால் அதிகமான லாரிகளையும் அதிகமான உதவியாளர்களையும் வேலைக்கு வைத்துக்கொள்ள முடியும். அந்த வளர்ச்சி தடைபடாமல் தொடர வேண்டும். அது தான் வெற்றி.

நாம் முற்றிலுமாக வணிக சமூகமாக மாற வேண்டும். இங்கு முதன் முதலில் காலடி எடுத்த வைத்த தமிழன் எப்படி வணிகத்துக்காக காலடி எடுத்து வைத்தானோ அதே போன்று இன்று நாம் வணிகக் காலடித் தடங்களை இன்னும் அழுத்தமாகப் பதிக்க வேண்டும். வளர்வோம்! வெற்றிபெறுவோம்! வணிக சமூகமாக மாறுவோம்!

(கோடிசுவரன்)