இலங்கையில் இந்திய மீனவர்களுக்கு தூக்குத் தண்டனை எதிரொலி: போர்க்களமானது இராமேஸ்வரம்

rameswaram_001இலங்கையில் இந்திய மீனவர்கள் ஐந்து பேர் உட்பட எட்டுப் பேருக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து, இராமேஸ்வரத்தில் மீனவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

இராமேஸ்வரம் மாவட்டம், தங்கச்சிமடத்தைச் சேர்ந்த 5 மீனவர்கள் போதை பொருள் கடத்தியதாக கடந்த 2011ம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில் அவர்களுக்கு மரண தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து, இராமேஸ்வரம் மற்றும் தங்கச்சிமடம் பகுதி மீனவர்கள் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், தங்கச்சிமடம் அருகேயிருந்த ரயில் தண்டவாளம் உடைத்து தகர்க்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, இராமேஸ்வரத்திலிருந்து சென்னை மற்றும் மதுரை செல்லும், சென்னை மற்றும் மதுரையிலிருந்து இராமேஸ்வரம் வரும் ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

மேலும், பாம்பனில் இருந்து இராமேஸ்வரத்திற்கு சென்று கொண்டிருந்த அரசு பேருந்து தங்கச்சிமடம் தேசிய நெடுஞ்சாலையில் வைத்து தீயிட்டுக் கொளுத்தப்பட்டுள்ளது.

இதனால் ஏற்பட்ட பதற்றம் காரணமாக, அப்பகுதியில் பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

எனினும் அங்கு பதற்ற நிலை தொடர்வதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் இந்திய மீனவர்கள் ஐவர் உட்பட எட்டு பேருக்கு தூக்குத் தண்டனை

கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் இந்திய இலங்கை கடல் எல்லையில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் ஐந்து பேர் மற்றும் இலங்கை மீனவர்கள் மூவருக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதவான் பத்மா சூரசேன தூக்குத் தண்டனை வழங்கித் தீர்ப்பு அளித்தார்.

கடலில் போதைவஸ்து கடத்தலின் போது, போதைப்பொருள் பரிமாறியதாக சந்தேகத்தின் பெயரில் இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்ட நிலையில் கொழும்பு மேல் நீதமன்றில் வழக்கு தொடரப்பட்டடிருந்தது.

இன்றைய தினம் 7ம் இலக்க கொழும்பு மேல் நீதிமன்றில் நீதிபதி பத்மா சூரசேன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்தக் கொள்ளப்பட்டவேளை இவர்களுக்கு தூக்குத் தண்டனை வழங்கித் தீர்ப்பு வழங்கினார்.

இந்திய மீனவர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி இத் தீர்ப்பு இலங்கை இந்திய உறவில் விரிசலை ஏற்படுத்தும் எனவு வாதிட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இராமநாதபுரம் மாவட்டம், தங்கச்சிமடத்தைச் சேர்ந்த பிலாடுதீன் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் கடந்த 2011ஆம் ஆண்டு நவம்பர் 28ஆம் தேதி மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் 5 பேரை போதை பொருள் கடத்தியதாக இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

இது தொடர்பான வழக்கு, கடந்த மூன்று ஆண்டுகளாக கொழும்பு உயர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் நீதிபதி பத்மா சூரசேன இன்று தீர்ப்பு வழங்கினார்.

இதில், தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மீனவர்கள் எமர்சன், வில்சன், அகஸ்டன், லாங்லெட், பிரசாந்த் ஆகிய 5 பேர் உள்பட இலங்கையைச் சேர்ந்த மூன்று மீனவர்களுக்கும் தூக்குத் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

இதனிடையே தமிழக மீனவர்கள் மீது தொடரப்பட்ட போதை பொருள் கடத்தல் வழக்கு பொய்யான குற்றச்சாட்டின் பேரில் தொடரப்பட்ட வழக்கு என மீனவர்கள் சங்க பிரதிநிதி பாரதி தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த விவகாரத்தை மத்திய அரசு துளியும் கண்டுகொள்ளவில்லை என்று குற்றம் சாட்டிய அவர், இனிமேலாவது மத்திய அரசு தலையிட்டு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 5 பேரையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாரதி வலியுறுத்தி உள்ளார்.

இதனிடையே, தூக்குத் தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்ய தமிழக மீனவர்களுக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

நவம்பர் 14ஆம் திகதிக்குள் இலங்கை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து கொள்ளலாம் என்று உயர் நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார்.

மீனவர்களுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையால், தமிழக மீனவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. அவர்களது குடும்பத்தினரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

மத்திய அரசு உடனடியாக தலையிட்டு அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

TAGS: