இலங்கை அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தை – கூட்டமைப்பு மீண்டும் நிபந்தனை

sambanthanஇனப்பிரச்சினைக்கு தீர்வு காண ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் நிபந்தனையுடன் பேச்சு நடத்த தாம் தயார் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் இதனை இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

போர் முடிவடைந்த பின்னர் ஏற்றுக்கொள்ளப்பட்ட மூன்று அறிக்கைகளின் அடிப்படையில் மஹிந்த ராஜபக்சவுடன் பேச்சு நடத்த தயார் என்று அவர் குறிப்பிட்டார்.

ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர் பான் கீ மூனுடன் மஹிந்த ராஜபக்ச வெளியிட்ட அறிக்கையில் 13வது அரசியலமைப்பை நடைமுறைப்படுத்துவது மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட்ட கட்சிகளுடன் பேச்சு நடத்தி இனப்பிரச்சினைக்கான இறுதித்தீர்வை எட்டல் என்ற அம்சம் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தமிழர்களை பொறுத்த வரையில் அவர்கள் பிரிக்கப்படாத இலங்கைக்குள் உரிய தீர்வு எட்டப்பட வேண்டும் என்றே எதிர்ப்பார்க்கின்றனர்.

இலங்கையில் தமிழர்கள் சமமாக மதிக்கப்பட வேண்டும். இந்தநிலையில் இலங்கையில் சிறப்பான தீர்வு ஒன்றுக்காக தமிழர்கள் சிரத்தையுடன் செயற்பட தயாராகவுள்ளனர் என்று சம்பந்தன் கூறினார்.

இதேவேளை 2011 ஆம் ஆண்டு ஜனாதிபதிக்கும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்புக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடல்களின் பின்னணி பத்திரத்தையும் சம்பந்தன் இன்று அவையில் சமர்ப்பித்தார்.

இதற்கிடையில் கூட்டமைப்புக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட இணக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டால் மாத்திரமே இலங்கை அரசாங்கத்தின் நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் கூட்டமைப்பு பங்கேற்கும் என்றும் சம்பந்தன் நிபந்தனை விதித்தார்.

TAGS: