பாஹ்மி: என்னை வெளியேற்றினால் பலர் வீறு கொண்டு எழுவர்

studentபாஹ்மி  சைனல், மலாயாப் பல்கலைக்கழகத்தில்  அதன்  நிர்வாகம்  தடைசெய்தும்கூட மாணவர்  பேரணியைப்  பிடிவாதமாக  நடத்தியபோது  அதன்  விளைவுகளை-  உதவிச்  சம்பளம்  பறிக்கப்படலாம்,  அதையும்விட  மோசமாக  வெளியேற்றப்படலாம்  என்பதையெல்லாம்-  உணர்ந்தே  இருந்தார்.

ஆனாலும் இழப்பைப்  பொருட்படுத்தவில்லை,  கொண்ட   இலட்சியத்தையே  பெரிதாக  நினைத்தார்.

எதிரணித்  தலைவர்  அன்வார்  இப்ராகிமின்  சொற்பொழிவுக்கு  ஏற்பாடு  செய்ததற்காக  கொஞ்சம்கூட  வருத்தமில்லை  என  மலேசியாகினிக்கு  வழங்கிய  நேர்காணலில்  பாஹ்மி  குறிப்பிட்டார்.

பல்கலைக்கழகம்  தன்னை  வெளியேற்றாது  என்றே  அவர்  நம்புகிறார்.

“எனக்கு எதிராக  நடவடிக்கை  எடுக்கப்பட்டால், என்  நண்பர்கள் விட  மாட்டார்கள். ஆர்ப்பாட்டம்  செய்யலாம்”, என்றவர்  சொன்னார்.

ஆனால், ஆர்ப்பாட்டங்கள்  நடைபெறுவது  உறுதி  என்று  கூற  முடியாது  என்பதை  வலியுறுத்திய பாஹ்மி,  பேச்சுரிமையை  நிலைநிறுத்தியதற்காக  மாணவர்களை வெளியேற்றினால்  அது நிச்சயமாக  கவனத்தை  ஈர்க்கும், விழிப்புணர்வை  ஏற்படுத்தும்  என்றார்.

ஆட்சி இயல் மாணவரான  அவர் கல்வியைத்  தொடர்வார். அத்துடன்,  மாணவர் இயக்கத்திலும்  தொடர்ந்து  ஈடுபடுவார்.

மாணவர்  இயக்கத்தின் எதிர்காலத்தை  முன்னிட்டு   சக  மாணவர்களும்  தாமும் திட்டங்கள்  வகுத்து  வைத்திருப்பதாக  பாஹ்மி  சொன்னார்.  அவற்றைத்  தெரிவிக்க  அவர்  தயாராக  இல்லை. ஆனால்,  மாணவர் இயக்கம்  நாட்டில்  வலுவாகக்  காலூன்றிவிட்டது  என்றவர்  திண்ணமாக  நம்புகிறார்.