காடிர்: அச்ச உணர்வுதான் அம்னோவின் கடைசி ஆயுதம்

kadirஅம்னோ,  மலாய்க்காரர்களைத்  தன்  பிடிக்குள் வைத்துக்கொள்ள  விரும்பினால்  அச்ச உணர்வுதான்  அதற்குப்  பயன்படக்கூடிய  கடைசி  ஆயுதமாகும்.

கடந்த  பொதுத்  தேர்தலில்  மலாய்க்காரர்கள்  அம்னோவுக்குத்  திரும்பி  வந்தார்களென்றால்  அதற்கான  முக்கிய  காரணங்களில்  சீனர்கள்மீது  அவர்களுக்குள்ள  பயமும்  ஒன்று  என்கிறார் ஏ.காடிர்  ஜாசின்.

“ஜோகூரில்  சீன, இந்திய  ஆதரவாளர்கள்  ஆயிரக்கணக்கில்  தேர்தல்  கூட்டங்களில்  மகிழ்ச்சி  ஆரவாரத்துடன்  கலந்துகொள்வதைக்  கண்டு கதிகலங்கிய  மலாய்க்காரர்கள்  அம்னோவுக்கு  ஆதரவாக  திரண்டனர்”, என்றார்.

பொருளாதாரத்தில்  மேலோங்கி  நிற்கும்  சீனர்கள்  அரசியலிலும்  மேலாதிக்கம்  பெற்றார்களென்றால்  தங்களின்  உரிமைகளும்  சலுகைகளும்  பறிபோகும்  என  மலாய்க்காரர்கள்-குறிப்பாக பிஎன்-ஆதரவாளர்கள்  பயந்தார்கள்.

அந்த  வகையில்  பக்கத்தான்  ரக்யாட்  மட்டும்  அது  மலாய்க்காரர்களுக்கு  நியாயமாகவே  நடந்து  கொள்ளும்  என்று  நம்பிக்கையை  உருவாக்குமானால்  பிஎன் பாடு  திண்டாட்டம்தான்.

“பக்கத்தான் -ஆளும்  சிலாங்கூர், பினாங்கு  ஆகியவை நல்ல  எடுத்துக்காட்டுகள். 2008-இல்,  அதிகாரத்தைக் கைப்பற்றிய  பக்கத்தானைப்  புரட்டிப்போட  மலாய்க்காரர்கள்   கிளர்ந்து  எழுந்தார்களா, என்ன?”, என  நியு  ஸ்ரேய்ட்ஸ்  டைம்சின்  முன்னாள்  தலைமை  செய்தியாசிரியரான  காடிர்  வினவினார்.

பக்கத்தானால்  மட்டும் மலாய்க்காரர்களிடம்  நம்பிக்கையை  ஊட்டி  அவர்களைத்  தன்  பக்கம்  இழுக்க  முடிந்தால்  அதனால்  புத்ரா  ஜெயாவைக் கைப்பற்ற  முடியும்  என்றாரவர்.

பிஎன்னைப்  பொருத்தவரை  ஒரு  நம்பத்தக்க  உருமாற்றம்  நிகழ்ந்து  அம்னோ  மீண்டும்  மலாய்க்காரரிடையே  ஆதரவைப்  பெறுவதில்  குறிப்பாக  இளம்  தலைமுறையினரைத்  தன்  பக்கம்  ஈர்க்க  வேண்டும். அது  நிகழாதவரை புத்ரா ஜெயாவை  வெற்றிகொள்ளும்  வாய்ப்பு  பக்கத்தானுக்கே  பிரகாசமாக  உள்ளது  என்று  அந்த மூத்த  செய்தியாளர்  கூறினார்.