காஷ்மீர்: வாஜ்பாய் கண்ட கனவை நனவாக்குவேன்: நரேந்திர மோடி

  • ஜம்மு - காஷ்மீர் மாநிலம், கிஷ்த்வாரில் சனிக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில், தொண்டர்களை நோக்கி கையசைக்கும் பிரதமர் நரேந்திர மோடி.
  • ஜம்மு – காஷ்மீர் மாநிலம், கிஷ்த்வாரில் சனிக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில், தொண்டர்களை நோக்கி கையசைக்கும் பிரதமர் நரேந்திர மோடி.

ஜம்மு – காஷ்மீரின் வளர்ச்சிக்காக முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கண்ட கனவை, தாம் நனவாக்கப் போவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

ஜம்மு – காஷ்மீரில் சனிக்கிழமை தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கிய நரேந்திர மோடி, கிஷ்த்வார் டவுன் பகுதி, செüஹான் மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், பாஜக வேட்பாளர்களை ஆதரித்துப் பேசியதாவது:

காஷ்மீர் மீதும், இந்த மாநில மக்கள் மீதும் நான் உளப்பூர்வமாக அன்பு வைத்துள்ளேன். கடந்த ஜூலை மாதத்திலிருந்து ஒவ்வொரு மாதமும் நான் உங்களைச் சந்திக்க இங்கு (காஷ்மீர்) வருகிறேன். இது மற்ற கட்சியினருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.

அரசியலையும், மதத்தையும் இணைத்து மேற்கொள்ளப்படும் பிரசாரத்தை நான் எதிர்க்கிறேன். தேசத்தின் வளர்ச்சியை மட்டுமே தாரக மந்திரமாகக் கொண்டு மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.

ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்கு முன்னாள் பிரதமர் வாஜ்பாய் முன்னெடுத்த திட்டங்கள், அவரது கனவுகளை நான் நிறைவேற்றுவேன். ஜனநாயகம், மனிதநேயம், காஷ்மீரியரின் தனித்துவம் என்ற வாஜ்பாயின் மூன்று வார்த்தைகள் காஷ்மீர் மக்களின் மனதில் அழியாமல் இருக்கிறது. அதன் அடிப்படையிலான வளர்ச்சியில், நல்ல எதிர்காலம் கிடைக்கும் என்று காஷ்மீர் இளைஞர்கள் நம்புகின்றனர்.

எனவே அதனை நிறைவேற்றுவதே எனது விருப்பம். அதற்காகவே காஷ்மீருக்கு நான் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறேன். மத்தியில் வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் இருந்த போது, தங்கள் கனவுகள் அனைத்தும் நிறைவேறும் என்று காஷ்மீர் மக்கள் நம்பினர். ஆனால், மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பத்தாண்டுகளில் இங்கு நிலைமை என்னவானது என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

தண்ணீர் வாளியில் ஓட்டை இருந்தால் நீர் எப்படி ஒழுகிச் சென்று விடுமோ, அதுபோல காஷ்மீருக்கு, மத்திய அரசு ஒதுக்கீடு செய்யும் பணம் எங்கே போகிறது என்பதே தெரியவில்லை.

காஷ்மீரின் வளர்ச்சியை, கடந்த 50 ஆண்டுகளாக மாநிலத்தை ஆண்ட அரசுகள் முடக்கி விட்டன. இந்த மாநிலத்தில் ஆட்சியமைக்க இரண்டு குடும்பங்கள் (தேசிய மாநாட்டுக் கட்சி – அப்துல்லா குடும்பம், மக்கள் ஜனநாயகக் கட்சி – முஃப்தி குடும்பம்) மட்டும்தான் உள்ளதா? மற்றவர்கள் யாரும் மாநிலத்தை ஆளும் தலைவராக முடியாதா? காஷ்மீரில் மாறி மாறி ஆட்சி புரிந்த இரு கட்சிகளும் ஊழல் செய்தன. அவர்களை நீங்கள் தண்டிக்காவிடில், புது வேகத்துடன் உங்களை ஏமாற்ற மீண்டும் வந்துவிடுவார்கள்.

வெள்ளத்தால் ஜம்மு-காஷ்மீரில் ஏற்பட்ட சேதாரம், இழப்புகள் குறித்து மாநில அரசுக்குத் தெரியவில்லை. காஷ்மீர் பள்ளத்தாக்கை நான் நேரடியாகப் பார்வையிட்டேன். வெள்ள நிவாரணத்துக்காக மத்திய அரசு சார்பில் ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. நான் உங்கள் வளர்ச்சிக்காகவே இருக்கிறேன். ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் போக்குவரத்து, சுற்றுலாத் துறையில் மேம்பாடு ஏற்படும் என்று உங்களிடம் உறுதியளிக்கிறேன் என்று நரேந்திர மோடி பேசினார். -http://www.dinamani.com

TAGS: