எமது தீர்விற்காக நாமே போராடவேண்டும்! கிளிநொச்சியினில் சுரேஸ் எம்பி!!

புதிதாக வரக்கூடிய ஜனாதிபதி யாராக இருந்தாலும் தமிழ் மக்களுடைய பிரச்சினைகளை முழுமையாக தீர்ந்து, தமிழ் மக்கள் கௌரவமாக இந்த நாட்டில் எல்லோருக்கும் இணையாக வாழக் கூடிய சூழல் உருவாக வேண்டும். அந்த நிலைமை உருவாக நாங்கள் தொடர்ந்தும் உழைக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், த.தே.கூட்டமைப்பின் பேச்சாளருமான சுரேஷ் பிறேமச்சந்திரன் அவர்கள் தெரிவித்துள்ளர்.


கிளிநொச்சி மாவட்டத்தில் போரினால் பாதிக்கப்பட்டு தாய் தந்தையரை இழந்த மாணவர்களுக்கும், வறிய குடும்பத்தைச் சேர்ந்தோருக்குமாக 24 துவிச்சக்கர வண்டிகளை பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிறேமச்சந்திரன் வழங்கி வைத்தார். இந்த நிகழ்விலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவரது உரை வருமாறு…


வடக்கு மாகாணத்தில் மாத்திரம் 40000 தொடக்கம் 50000 விதவைகள் இருப்பதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இதில் யுத்தம் காரணமாக உருவான விதவைகளே மிக அதிகமாக உள்ளார்கள். ஆகவே எங்களுக்கு ஒரு கடமை இருக்கின்றது இந்த மக்கள் இம்மண்ணில் சீரோடும் சிறப்போடும் வாழ வேண்டும். எமது கலாச்சாரம் பண்பாடு ஆகியனவற்றை பாதுகாக்கும் வகையில் வாழ வேண்டும். அவர்களுக்கான வாழ்வாதாரங்களுக்குரிய உதவிகளை நாம் செய்து கொடுக்க வேண்டும். அவர்களும் எமது சமுதாயத்தில் தலைநிமிர்ந்து வாழ வேண்டும் என்ற அடிப்படையில் உதவிகளை செய்து வருகின்றோம்.


இந்த உதவிகள் இன்று உங்களுக்கு வந்து சேர்ந்ததற்கான காரணம் எங்களுடைய பிள்ளைகள் நன்றாக படிக்க வேண்டும் என்பதற்காகத்தான். பெற்றோரை இழந்த பாடசாலைகளில் கல்விகற்கும் மாணவர்களுக்கு, வறுமை கோட்டின் கீழ் வாழும் மிக நீண்ட தூரம் பாடசாலைக்கு பிரயாணிக்கும் மாணவர்களுக்காக இந்த சைக்கிள்களை வழங்குகின்றோம்.


நாங்கள் மிக விரைவில் தேர்தல் ஒன்றை சந்திக்க இருக்கின்றோம். அதற்கான அறிவிப்பு சற்று முன்னர் தான் கிடைத்தது. அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி விரைவில் அறிவிக்கப்படும். மூன்றாவது முறை ஜனாதிபதியாக வருவதற்கு ஜனாதிபதி மகிந்த ஆசைப்பட்டு சட்டத்தை மாற்றி தான் மூன்றாவது முறையாகவும் தேர்தலில் போட்டியிடுவதற்கான சந்தர்ப்பத்தை ஒரு சட்டத்திருந்தத்தை மேற் கொண்டு ஏற்படுத்தியுள்ளார்.

அடுத்த இரண்டு மூன்று மாதங்கள் மிகவும் விறுவிருப்பான சுறுசுறுப்பான ஒரு காலகட்டமாக அமையும். இப்போது இருக்கும் ஜனாதிபதி எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்று பெரும் முனைப்பில் இருக்கின்றார். எங்களுடைய தேவை என்னவென்றால் வன்முறையற்ற தேர்தலாக அது அமைய வேண்டும். மக்கள் மிரட்டப்படக கூடாது. மக்களிடம் வாக்குச் சீட்டுக்கள், அடையாள அட்டைகள் பறிக்கப்படக் கூடாது. இந்த வகையில் மக்களின் வாக்களிக்கும் சுதந்திரம் பறிக்கப்படக் கூடாது. இந்த தேர்தல் காலத்தில் இவ்வாறான செயல்கள் நடக்கலாம் என்ற பயமும் மக்கள் மத்தியில் இருக்கத்தான் செய்கின்றது.

இன்னும் இரண்டு மாதங்கள் வரை உங்களுக்கு காலம் இருக்கின்றது பல பெயர் பல கருத்துக்களை சொல்வார்கள், பத்திரிகையில் பல செய்திகள் வரும் நீங்கள் எல்லாவற்றையும் எடைபோட்டு யாருக்கு வாக்களிக்க வேண்டும். அல்லது வாக்களிக்க கூடாதா என்பதை தீர்மானிக்கும் வல்லமை உங்களிடம் தான் இருக்கின்றது.

ஆனால் மிகவும் வேதனையான விடயம் என்னவென்றால் ஆட்சிகள் மாறுகின்றன. ஜனாதிபதிகள் மாறுகின்றார்கள் எங்களுடைய பிரச்சினை மாறுகின்றதா? அது இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். நாங்கள் ஒரு கூட்டத்திற்கு சென்றாலும் அறிவிக்க வேண்டும். அவர்கள் வந்து படம் எடுக்க வேண்டும் ஆகவே நாங்கள் இவ்வாறான சூழ்நிலையில் இருக்கின்றோம் என்பது வருதப்படக்கூடிய விடயம். -http://www.pathivu.com

TAGS: