2015 சனி பெயர்ச்சியில் குழப்பிய சோசியர்..! தமிழர் அறிவியல் என்ன சொல்கிறது ? சோசியர்கள் அறிவார்களா ?

astrology-planets-10301057நேற்று 18/12/ மாலை 6 -7 அஸ்ட்ரோ வானவில்லில் சனி பெயர்ச்சியில் ராசிகளுக்கு என்ன நடக்க போகிறது என்று சோதிடர் பாணியில் ஒரு மணி ஒரு மணி நேரம் பேசினார்.  இலக்கு தமிழர்களை நோக்கியது. என்றும் எதிலும் சோதிடம் என்ற அறியாமையால் தமிழர்கள் நிலை அந்தோ பரிதாபம். உலக அறிவியலை எப்படி வியாபரமாக்கினார்கள் வியப்புதான் மிஞ்சுகிறது !!

கடசியில் ஒரு அதற்சியான குறிப்பை தந்தார். அதாவது ராசிகளின் பலன்கள் அவரவர் பூர்வ ஜென்மம் , முந்திய பாவ புண்ணியங்கள் படி நல்லது  கெட்டது  நடக்கும். சனியை மட்டும் கும்பிடுங்கள் பலன் தரும் மற்ற தெய்வங்கள் , ஆஞ்சேநேயர் போன்ற தெய்வங்களின் பிரார்த்தனைகள்  பரிகாரங்கள் உதவாது என்று போட்டார் ஒரு போடு!?

சனி என்பது ஒரு கிரகம். ஆனால் நம்மவர்கள் சனியன் “தைதரியம்” என்ற ஐயத்தில் ஜோதிட வியாபாரமும் .கோவில் பூஜைகளும் அறியாமையால் வியாபார சூடும் தலை தூக்கி பன்னெடுங்காலமாக ஓடுகிறது. நம்ம சமய பூசகர்கள் ஐயா முனைவர்  நாகப்பன் , தர்மலிங்கம் போன்றோர்ர் ஏழரை சனி சனியன் பற்றி வாய் திறப்பதில்லை ஏன்?

“ஏழரை சனி” ஒரு விஞ்ஞானம். அறிவியல் என்ன சொல்கிறது ?

சோதிடத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் இப்பெயரைக் கேட்டாலே பயந்து நடுங்குகிறார்கள் அல்லது இவர்களை பயமுறுத்துவதற்காக தினசரிகள், வார இதழ்கள், சோதிடத்திற்கு மட்டுமென வெளிவரும் பத்திரிக்கைகள் உள்ளன. இவ்வாண்டு 2014 டிசம்பர் மாதம் 16ஆம் தேதி அதிகாலையில் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு சனி இடம் பெயர இருக்கிறது. இதையொட்டி சனியால் எந்த ராசிக்கு என்ன பலன் என்றும் அதனால் வரும் விளைவுகளுக்கு பரிகாரத்தைத் தேடி காக்கையை தனது வாகனமாகக் கொண்டு திருநள்ளாரில் எழுந்தருளி இருக்கும் சனி பகவானின் நளன் குளத்தில் நீராடவும் மற்ற வகையான பரிகாரங்களை செய்யவும் ஆயத்தமாக இருக்கிறார்கள்.

இனி செய்திக்கு வருவோம் முதலில் இந்த சனிப்பெயர்ச்சி பஞ்சாங்க அடிப்படையில் ஒரே நாளில் நிகழ்கிறதா என்றால் இல்லை, திருக்கணித பஞ்சாங்கத்தின்படி நவம்பர் 2ஆம் தேதி நடந்தது. வாக்கியப் பஞ்சாங்கத்தின் படி டிசம்பர் 16 ஆம் தேதி நடக்க இருக்கிறது, . இதில் என்ன நகைச்சுவை என்றால். பஞ்சாங்கத்திலேயே துல்லியமானது திருக்கணிதப் பஞ்சாங்கம் என கூறப்படுகிறது. ஆனால் சனிப்பெயர்ச்சி மட்டும் வாக்கியப் பஞ்சாங்கத்தின்படியே கணிக்கப்பட்டு 16 ஆம் தேதி திருநள்ளாரில் சனிப்பெயர்ச்சி மிகவும் விமரிசையாக நடத்தப்பட உள்ளது. இவ்வாறு முரண்பட்ட சோதிட நம்பிக்கையின் அடிப்படையில் நடைபெறும் சனிப்பெயர்ச்சியை சற்று அறிவியல் கண்ணோட்டத்துடன் அலசுவோம்.’

ஜாதகமும் ஜோதிடமும் 

ஜாதகம் என்பது ஒருவன் பிறந்த நேரதில் வானில் காணப்பட்ட மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகள், 27 நட்சத்திரங்கள், 9 நவக்கிரகங்கள் ஆகியவற்றைக் கொண்டு பதியும் பதிவு அவ்வளவே. வானவீதியில் கோள்களின் இயக்கம் சீரான காலமுறையை (Uniform Motion) சார்ந்தது என்பதினால் ஜாதகம் என்பது நமது முன்னோர்கள் பயன்படுத்திய பிறப்பு பதிவு எனக் கொள்ளலாம். ஆனால் ஜாதகம் ஜோதிடத்தின் கருவியாக மாறும்போதுதான் சீரழிந்து புனைவுகளுக்கு ஆளாகிறது.

ஜோதிடத்தில் ராசி, நட்சத்திரங்கள் மற்றும் கோள்களுக்கு சில குணங்கள் இருப்பதாக கற்பிதம் செய்யப்படுகிறது. பொதுவாக ஜாதகமும், சோதிடமும் பழமையான பூமிக்கொள்கை (Geo System) எனப்படும் பூமியை மையமாக வைத்து கோள்கள் அனைத்தும் சுற்றி வருவதாகக் கொண்டே இன்றளவும் கணிக்கப்பட்டு வருகின்றது. இன்று அறிவியலால் நிரூபிக்கப்பட்டு உண்மையென எல்லோராலும் குறிப்பாக ஆன்மீகவாதிகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட சூரியனை சுற்றி அனைத்துக் கோள்களும் இயங்குகின்றன (Solar system) என்ற அறிவியல் உண்மைக்கு எதிராக இச்சோதிட தத்துவம் உள்ளது.

கோள்கள் (நவ கிரகங்கள்)
வரிசை எண்.
ஜாதகத்தில்உள்ளவை
சூரிய மண்டலத்தில் இருப்பவை

1. ஞாயிறு

2. சந்திரன், புதன்

3. செவ்வாய், பூமி

4. புதன், செவ்வாய்

5. குரு (வியாழன்), வியாழன்

6. சுக்கிரன்(வெள்ளி), சனி

7.சனி, யுரேனஸ்

8.ராகு, நெப்டியூன்

9. கேது, புளூட்டோ

இதில் நிலையாக பேராற்றல் உள்ள நட்சத்திரமான சூரியனும், ஆற்றல் ஏதும் இல்லாமல் பூமியை சுற்றும் துணைக்கோளான சந்திரனும், கோள்களே அல்லாத ராகுவும் கேதுவும் கிரகங்களாக குறிப்பிடப்பட்டு உள்ளது. மேலும் பூமி, யுரேனஸ், நெப்டியூன் போன்ற கோள்கள் இதில் இடம் பெறவில்லை (அப்போது தொலைநோக்கிகள் இல்லை அதனால் இருந்திருக்கும்). அதைப்போலவே ராசி என்பதும் வானில் உள்ள விண்மீன்களின் வடிவங்களின்     கற்பனையான தராசு (துலாம் ராசி-Libra), வில்(தனுசு ராசி-Sagittarius) போன்ற வடிவங்களேயாகும். இந்த வடிவங்களிலான விண்மீன் கூட்டங்களுக்கென தனித்தனியே குணங்களும் ஆற்றலும் உள்ளது எனவும் சோதிடம் கூறுகிறது. இவற்றையே அடிப்படையாகக் கொண்டு அவரவர்களுக்கான தினம், வாரம், மாதம், வருடம் என வாழ்நாள் முழுதும் நல்லதும் கெட்டதுமான பலன்கள் அவ்வப்போது ஜோதிடர்களால் கணிக்கப்படுகிறது.

மீனம் 12, மேஷம் 1, ரிஷபம் 2, மிதுனம் 3, கும்பம் 11,

சோதிடம் கணிக்கும் ராசிக்கட்டம்
கடகம் 4, மகரம் 10, சிம்மம் 5, தனுசு 9, விருச்சிகம் 8, துலாம் 7, கன்னி 6

வர்ணாசிரம – பாலின பாகுபாடு

மனிதர்களிடையே ஜாதி பார்ப்பது போதாது என்று கோள்களையும் வர்ணப்பாகுபாடு செய்கிறது ஜோதிடம்

வர்ணம்
கிரகங்கள்
பிராமணர்
வியாழன்(குரு), வெள்ளி
சத்திரியர்
ஞாயிறு,செவ்வாய்
வைசியர்
சந்திரன், புதன்
சூத்திரர்
சனி, ராகு, கேது
ஆக ஜோதிடத்தை ஏற்பதன் மூலம் நால்வர்ணக்கொள்கையை ஆதரிப்பதாகவே கொள்ளவேண்டும்.

பாலினம்
ராசிகள்
நட்சத்திரங்கள்
ஆண்
மேஷம்,மிதுனம்,சிம்மம், துலாம்
தனுசு,கும்பம்
8
பெண்
ரிஷபம்,கடகம்,கன்னி,விருச்சிகம்,மகரம், மீனம்
16
அலி

3
இப்படி உயிரற்ற கிரகங்களுக்கும் நட்சதிரங்களுக்கும்கூட ஜோதிடத்தில் பாலின வேறுபாடு கற்பிக்கப்பட்டு உள்ளது.

சனிப்பெயர்ச்சி

இனி பெயர்ச்சி என்றால் என்னவென்று பார்ப்போம். பொதுவாக சோதிடத்தில் குருப்பெயர்ச்சியும், சனிப்பெயர்ச்சியுமே மிகவும் பிரபலமானதாகவும் முக்கியமானதாகவும் எடுத்துக்கொள்ளப்படுகிறது. சனி, குரு மட்டுமல்லாமல் எல்லா கிரகங்களுக்கும் பெயர்ச்சி உள்ளது. அந்தந்த கிரகங்கள் பூமியை/சூரியனை சுற்றி வரும் காலத்திற்கு ஏற்ப அட்டவணையில் உள்ளவாறு ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு இடம் பெயர காலம் எடுத்துக்கொள்ளும்.

மொத்தம் உள்ள 12 ராசிகளில் கோள்கள் இடம் பெயர எடுத்துக் கொள்ளும் காலம்
கோள்களின் பெயர்
சூரியனை சுற்றிவரும் காலம்
இடம் பெயரும் காலம்

சந்திரன்
27 நாட்கள்
2 ¼ நாள்
ராகு, கேது
18 ஆண்டுகள்
1 ½ வருடம்
குரு (வியாழன்)
12 ஆண்டுகள்
ஒரு வருடம்
செவ்வாய்
18 மாதங்கள்
1 ½ மாதம்
சுக்கிரன், புதன்

ஒரு மாதம்
சூரியன்

ஒரு மாதம்

சனிக்கோள் சூரியனை சுற்றிவர 30 ஆண்டுகள் ஆகும். 12 ராசிகள் உள்ள சூரியவீதியில் சனி ஒவ்வொரு ராசியிலும் சுமார் 2½ ஆண்டுகள் காணப்படும். இதனைத்தான் அந்த ராசியை சனி பிடித்துள்ளதாக கூறுகிறார்கள். 2½ ஆண்டுகள் கழித்து சனி அந்த ராசியில் இருந்து விலகி அடுத்த ராசிக்கு இடம் பெயரும். இதனைத்தான் சனிப்பெயர்ச்சி என்று கூறுகிறார்கள்.

ஏழரை சனி

ஏழரை நாட்டுச் சனி என்பது சனிக்கோளானது ராசிக்கும் அந்த ராசியின் முன் வீடு ராசியின் அடுத்த வீடு ஆகிய மூன்றிலும் உள்ளதைக் குறிக்கும். சனி கிரகமானது ஒரு ராசியில் இருந்து அடுத்த ராசிக்கு செல்வதற்கு 2½ ஆண்டுகள் ஆகும் என்பதை முன்னரே கண்டோம். ராசிக்கு முன் ராசியில் 2½ ஆண்டுகள், பிறந்த ராசியில் 2½ ஆண்டுகள், அடுத்த ராசியில் 2½ ஆண்டுகள் ஆக 7½ ஆண்டுகளைத்தான் ஏழரை நாட்டுச் சனி என்பர். உதாரணமாக தற்போது சனி கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு இடம் பெயர உள்ளது அடுத்து 2½ ஆண்டுகள் கழித்து விருச்சிக ராசிக்கு செல்லவிருக்கிறது. சோதிடத்தின்படி துலாம் ராசிக்காரருக்கு 2½ ஆண்டுகளுக்கு முன்னரே ஏழரை சனி ஆரம்பித்துவிட்டது இன்னும் ஐந்து ஆண்டுகள் கழித்தே அவரை அது விடும். ஒருவரின் முப்பது ஆண்டுகால வழ்க்கையில் ஏழரை ஆண்டுகள் சனியின் தொல்லையில் கொடுமைக்கு ஆளாகவேண்டும் என்பது அவரின் விதி என்பதே ஜோதிடத்தின் நியதி ஆகும்.

சனிப்பலன்

நீண்ட கால வாழ்விற்கும், மரணத்திற்கும் காரணமாக இருப்பது சனி என்று சோதிடம் கூறுகிறது. வறுமை, கலகம், நோய், அவமரியாதை ஆகியவற்றின் காரணி சனியாகவே வருணிக்கப்படுகிறது. லக்னத்திற்கு 3.6,9,10,11 இடங்களில் சனி இருந்தால் குவியல் குவியலாக பணமும் பொருளும், வேலையாட்களுடன் கூடிய வாழ்வு அமையுமாம். லக்னத்திற்கு 2,4,8,12 இடத்தில் இருந்தால் துன்பமும், துயரமும், கஷ்ட நஷ்டங்களும் தொடர்கதையாய்த் தொடரும் எனக் கதை விடுகிறார்கள். இந்தியாவில் வறுமைக் கோட்டின் கீழ் 40 சதவீதத்திற்கு மேல் இருக்கிறார்கள் இவர்களின் வாழ்க்கை லக்னத்திற்கு 3,6,9,10,11 இடங்களில் சனி வராமல் இல்லை, ஆனால் நாளுக்கு நாள் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்பவர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டுதான் இருக்கிறது மறுபுறம் பெருமுதலாளிகளின் சொத்தும் பெருகிக்கொண்டுதான் இருக்கிறது. இதற்கு காரணம் சனிதான் என்று சொல்லி அதுதான் விதி விதிப்படிதான் நடக்கும் எனக்கூறி மக்களை ஏமாற்றி அவர்களின் போராட்டக் குணங்களை மழுங்கடிக்கச்செய்கிறது ஒரு கூட்டம் அதற்கு தூபம் போட ஏற்பட்டதே ஜோதிட குவியல்கள்.

சூரிய குடும்பத்தில் சனி

சனிக்கோள்
பூமியிலிருந்து தூரம்
127 கோடி கி.மீ
சூரியனிலிருந்து தூரம்
142 கோடி கி.மீ
சுற்றளவு
1,21,000 கி.மீ (பூமியைப் போல் 9 மடங்கு)
சுற்றிக்கொள்ளும் நேரம்
10½ மணி (பூமி 24 மணி)
சூரியனை சுற்றி வர காலம்
30 ஆண்டுகள் (பூமி ஒரு ஆண்டு)
குளிர் நிலை
-185oC
அடர்த்தி
தண்ணீரை விட குறைவு (தண்ணீரில் மிதக்கும்)
துணைக்கோள்கள்
31 (பூமிக்கு ஒரே ஒரு சந்திரன் மட்டும்)
சூரியனில் இருந்து உள்ள இடம்
6 (பூமி 3 ஆவது இடம்)
வடிவம்
இரண்டாவது பெரிய கிரகம் (பூமியைவிட 1000 மடங்கு பெரியது)
தன்மை
பெரும்பகுதி காற்றால் ஆனது (பூமி- நிலம், நீர், காற்றால் ஆகிய மூன்றால் ஆனது)
சனிக்கோளில் இருந்து வரும் ஒளி பூமியை வந்தடைய எடுத்துக் கொள்ளும் நேரம்
1 மணி 28 நிமிடம் (விநாடிக்கு 3,30,000 கி.மீ வேகம்)
வாயுக்கிரகமாக உள்ளதால் இதன் அடர்த்தி தண்ணீரைவிட மிகக்குறைவானது. சனியைவிட மிகப்பெரிய கடல் நம்மிடம் இருந்து அதில் சனியை தூக்கி போட்டால் சனி மூழ்காமல் மிதக்கும் என்பது ஆச்சரியமான உண்மை. இதன் காரணமாக மனிதன் அனுப்பும் செயற்கை கோள்கள் செவ்வாயிலும் சந்திரனிலும் தரை இறங்குவதைப்போல சனியில் தரை இறங்கமுடியாது. ஏனென்றால் இதற்கு உறுதியான தரைப்பரப்பு இல்லை குளிரால் ஆண்டு முழுவதும் வறண்டு கிடக்கும் இக்கோளை மிகவும் சக்தி வாய்ந்தது என்று கூசாமல் எப்படித்தான் பொய் சொல்கிறார்களோ?.

கோள்களிடம் உள்ள சக்தி

சோதிடத்தில் கிரகங்களுக்கு அளப்பறிய சக்தி உள்ளதாக சித்தரிக்கப்பட்டு உள்ளது. சனி, செவ்வாய், குரு போன்ற கிரகங்கள் மிகவும் சக்தி வாய்ந்ததாக காட்டப்பட்டுள்ளது. உண்மையில் சூரிய குடும்பத்தில் சக்தி உள்ள ஒன்று உள்ளதென்றால் அது சூரியனே ஆகும். சூரியன் மிகப்பெரிய அணுவுலையாகும். இதன் அளப்பரிய வெப்ப ஆற்றல், ஒளி ஆற்றல், காந்த ஆற்றல், ஈர்ப்பு விசை, புற ஊதாக்க்கதிவீச்சு போன்றவை மற்ற எந்த கிரகங்களுக்கும் இல்லை. உண்மையில் சூரியனுக்கு அடுத்த நிலையில் உள்ள கிரகம் பூமியே ஆகும். இதில் மனித உயிர்வாழ்க்கைக்குத் தேவையான தண்ணீரில் இருந்து, காற்று மண்டலமும் உள்ளது. வேறு எந்த கிரகமும் எவ்வளவு பெரியதாக இருந்தாலும் ஈர்ப்பு விசையைத்தவிர (அதுவும் குறிப்பிட்ட தூரத்திற்கு மட்டும்) வேறு சக்தி இல்லை. அவ்வளவு ஏன் சொந்தமாக ஓளி ஆற்றால்கூட இல்லை சூரியனிடம் இருந்து ஒளியை கடன்வாங்கி பிரதிபளிக்கக்கூடிய அளவிலேயே இவை உள்ளன. வெறும் வெற்று கிரகங்களான இவை அறிவியல் விதியான ஈர்ப்புவிசையின்படி சூரிய மண்டலத்தில் உள்ளனவே தவிர இவற்றிற்கு என எந்த சொந்த ஆற்றலும் இல்லை. இக்கிரகங்கள் பூமியில் இருந்து கோடிக்கணக்கான கி.மீ தூரத்தில் உள்ளதால் இந்த ஈர்ப்பு விசையும் பூமியை எட்டவே எட்டாது. ஆனால் சோதிடத்தில் பேராற்றல் உள்ள சூரியனும் டம்மி பீஸ்களாக செத்துப்போன எரிமலையும், வறண்டு போன ஆறுகளும், கடுங்குளிரும் கொண்ட மற்ற கிரகங்களும் சக்தி உள்ளவைப் போல் சித்தரிக்கப்பட்டு உள்ளது வேடிக்கையான ஒன்று.

கிரக நிலை மனிதனின் வாழ்க்கையை பாதிக்குமா?

1993 ஆம் ஆண்டுகளில் டெல்லியில் உள்ள சனிபகவானின் கோவிலுக்கு சனிக்கிழமைகளில் 100 முதல் 200 பேர் வந்து கொண்டிருந்தனர். ஆனால் தற்போது 1000 பேருக்கு மேல் வருவதாகக் கணக்கிட்டுள்ளனர். வந்தவர்களின் பிரச்சினைகள் தீர்ந்துள்ளதா எனக்கேட்டால், அப்படி ஒன்றும் இல்லை என்கின்றனர். பிரபலமான வானவியல் அறிவியலாளர் ஜெயாண்டி வி.நார்லிக்கர் கூறும்போது சனியைப் பற்றி பேசப்படும், சொல்லப்படும் கருத்துக்கள் அனைத்தும் தவறானது ஆகும். இதில் எந்தவித அறிவியல் உண்மையோ, செயல்பாடோ கிடையாது என்கிறார்.

உலகில் உள்ள மனிதர்களையும் ஜீவராசிகளையும் தங்களுடைய அதிகார பலத்தினால் ஆட்டிப்படைப்பவர்கள் இந்த ஒன்பது கிரகங்கள்தான் என்கிறது ஜோதிடம். இந்தியாவில் தற்போதைய மக்கள் தொகை 120 கோடி ஆகும். இவர்கள் அனைவரும் 12 ராசிக்குள்தான் வருவார்கள். அப்படி என்றால் ஒரு ராசியில் 10 கோடி பேர் உள்ளனர். இவர்களின் வாழ்க்கை நிலை ஒன்றுபோல் உள்ளதா? என்றால் இல்லை

சமுதாயத்தில் உள்ள சாதி, தீண்டாமை, ஏற்றத்தாழ்வு, வேலையின்மை, உலகமயம், தனியார் மயம், தாராள மயம் மற்றும் அரசு கடைபிடிக்கும் தவறான பொருளாதாரக் கொள்கைகள்தான் மனிதனின் வாழ்க்கையைப் பாதிக்கிறது. வறுமைக்கும் கூட இவைகள்தான் இன்றளவும் காரணமாகவுள்ளது.

அறிவியல் பார்வை

பழக்கத்தின் காரணமாக பிடிவாதமாக நமது முன்னோர்கள் நம்பி வந்த நம்பிக்கை இதுவரை தொடர்ந்து வந்துள்ளது. நம்மீது விடாப்பிடியாக உள்ள அந்த நம்பிக்கை மீது நாம் சந்தேகிக்க மறுக்கிறோம். வானவியலை நன்கு அறிந்துகொள்வதின் மூலம் நமக்கு உண்மை புலப்படும்.

உண்மையில் சனிக்கிரகத்தின் வளையமானது அதற்கு அழகைக் கூட்டுகிறது. சிறந்த ஓவியரால்கூட தீட்ட முடியாத வண்ணங்கள் அதில் உள்ளன. வேறு எந்த கிரகத்திற்கும் இல்லாத அழகும், அதிசயமும் சனிக்கிரகத்திற்கு மட்டும்தான் உண்டு.

இனி சனியன் என யாரும் திட்டினால் அதற்குக் கோபமோ, வருத்தப்படவோ வேண்டியதில்லை. சனியைப் பற்றிய முழு உண்மைத் தெரிந்தவர்கள் சனியன் என்றால் மிகவும் மகிழ்ச்சியடையலாம்.

-பொன்.ரங்கன்