கிளந்தான் அரசு இயற்கைச் சுற்றுச்சூழல் குறித்து “கவலை கொள்வதில்லை, அக்கறை காட்டுவதில்லை” என பார்டி சோசலிஸ் மலேசியா (பிஎஸ்எம்) சாடியுள்ளது. அதுதான் அம்மாநிலத்தில் வெள்ள நிலைமை மோசமானதற்குக் காரணம்.
“அந்த அரசால் மலைச்சாரல்களில் பொறுப்பற்ற முறையில் மேற்கொள்ளப்பட்ட மேம்பாட்டுப் பணிகளின் கடும் விளைவுகளை 2014 வெள்ளத்தின்போதே கிளந்தான் மக்கள் அனுபவித்தார்கள். அப்போதே மணலால் நிரம்பப்பெற்ற ஆறுகள் பெருக்கெடுத்து ஓடி நகரங்களை மூழ்கடித்தன.
“முன் எப்போதுமில்லாத அளவுக்கு மழை பெய்திருப்பதாக நிபுணர்கள் கூறுகிறார்கள். ஆனால், மழைச்சாரல் மேம்பாடுகள்தான் வெள்ளத்தை மோசமாக்கின”, என பிஎஸ்எம் மத்திய செயல்குழு உறுப்பினர் ராணி ராசையா ஓர் அறிக்கையில் கூறினார்.
“காடுகள் தொடர்பில் பாஸ் மாநில அரசின் கொள்கை என்னவென்பது தெளிவாக தெரியவில்லை. மரங்கள் கண்டபடி வெட்டப்படுகின்றன. மறுநடவும் செய்யப்படுவதில்லை. நீண்ட காலமாகவே இப்படி நடந்து வந்துள்ளது.
“முதிர்ந்த மரங்களைத்தான் வெட்ட வேண்டும். கட்டாயமாக மறுநடவு செய்ய வேண்டும் என்ற சட்டதிட்டங்கள் இருப்பதாக தெரியவில்லை”, என்றாரவர்.
சகோதரி சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை. காடுகள் அழிந்ததே வெள்ளத்திற்கு முக்கிய காரணம். குறிப்பாக, கேமரன் மலையை ஒட்டி கிளந்தானுக்கு சொந்தமான 10,000 ஹெக்டர் காடுகள் அழிக்கப்பட்டுள்ளன. [லோஜிங் 3,000 ஹெக்டர், யாகின் 3,000ஹெக்டர், காடா 2,000 ஹெக்டர், கெசெடார் 2,000 ஹெக்டர்.] அழிக்கப்படுவதற்குமுன், மழை பெய்தால், அந்த நீரை பூமி இழுத்துக் கொள்ளும். ஆனால் இப்பொழுதோ, அந்நீர் நேரடியாக ஆற்றுக்குள் சென்று விடுகிறது. குவா முசாங்கில் ஆரம்பிக்கும் இந்த ஆறு, நேரே கோலக் கிரை சென்றடைகிறது. ஆகவே, இந்த கோலக் கிரை கடலானது. இது ஆரம்பமே. இவ்வருட இறுதியில் மேலுமொரு பேரிடர் காத்திருக்கிறது.