அன்வார்: ரசாக் பஹிண்டா கடும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும்

 

anwarbagindaமங்கோலியப் பெண் அல்தான்துயாவின் கொலை வழக்கு முடிவுற்ற பின்னர் வெளியில் மீண்டும் காணப்படும் அரசியல் ஆய்வாளர் அப்துல் ரசாக் பஹிண்டா ஆழ்ந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம் கூறுகிறார்.

அல்தான்துயா வழக்கு முடிவுற்ற பின்னர், முதன்முறையாக கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற ஒரு நேர்காணலில் ரசாக் பஹிண்டா மீண்டும் மீண்டும் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கை தற்காத்து பேசினார். நஜிப் மாசற்றவர். அவரின் அரசியல் வாழ்க்கையை முடிவுக்கு கொண்டுவருவதற்காக தீட்டப்பட்ட திட்டம்தான் அல்தான்துயா சம்பவம் என்று அவர் கூறினார்.

“அவருக்கு தமது வழக்கை விளக்குவதற்கான, பிரதமரை தற்காப்பதற்கான முயற்சியை மேற்கொள்வது உட்பட, உரிமை  உண்டு.

“ஆனால், இந்த வழக்கில் கொலை சம்பந்தப்பட்டிருப்பதால், அவர் தாமாகவே மேல்விசாரணைக்கு தம்மை உட்படுத்திக் கொள்வது சரியான முறையாகும் என்று நான் கருதுகிறேன், ஏனென்றால் பதில் கிடைக்காத பல கேள்விகள் இருக்கின்றன. அதற்கு அவர் மட்டுமே உதவ முடியும்”, என்று அன்வார் இன்று அம்பாங்கில் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

ரசாக் பஹிண்டா இக்கொலைக் குற்றச்சாட்டிலிருந்து 2008 ஆம் ஆண்டில் விடுவிக்கப்பட்டார்.

அல்தான்துயாவின் மரணம் இன்னும் ஒரு மர்மமாகவே இருந்து வருகிறது, ஏனென்றால் அக்கொலைக்கான நோக்கம் என்ன என்பதை நீதிமன்றம் இன்னும் தீர்மானிக்கவில்லை.

 

 

 

anwarbaginda