குற்றச்செயல்கள் மீது போலீஸ் புகார்கள் செய்து மக்கள் சலித்து விட்டனர், சேவியர் கூறுகிறார்

 

xavier jayakumar pkrபோலீசார் மக்களின் நண்பர்கள், பாதுகாவலர்கள் என்பதை நிரூபிக்க வேண்டும் என்று பிகேஆர் உதவித் தலைவரும் ஸ்ரீ அண்டலாஸ் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் சேவியர் ஜெயக்குமார் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் போலீசாரை கேட்டுக்கொண்டார்.

மக்கள் தாங்கள் எதிர்கொள்ளும் தொல்லைகள் பற்றி போலீஸ் புகார்கள் செய்து சலித்துப் போய்விட்டனர் என்று மக்களின் ஆதங்கத்தை அவர் வெளிப்படுத்தினார்.

கடந்த 16 ஆம் தேதி கிள்ளான் தாமான் மஸ்னா, தாமான் கிளாங் ஜெயா, தாமான் ஸ்ரீ அண்டலாஸ், செந்தோசா, கம்பம் ஜாவா ஆகிய இடங்களிலிருந்து தமது அலுவலகத்தில் திரண்ட மக்கள் ஆயுதம் ஏந்தி கொள்ளையிடுதல். வீடு புகுந்து மிரட்டிப் பணம் மற்றும் தங்க ஆபரனங்கள் ஆகியவற்றை பறிப்பது, வீட்டை உடைத்துக் வழிப்பறி கொள்ளை என்று எல்லாதவிதக் குற்றச்செயல்களும் இங்கு மிகச் சாதாரணமாக நடைபெறுவதாக கடுமையான புகார் அளித்துள்ளனர் என்றார் சேவியர்.

ஆயுதம் ஏந்திய முரட்டு கொள்ளையர்கள் போதைப் பொருளுக்கு அடிமையானவர்களைப் போன்று சற்றும் சிந்தனையின்றி பெண்களின் கழுத்தில் கத்தியை வைத்து குடும்பத்திரனரை மிரட்டி கிடைப்பதை அபகரித்துச் செல்கின்றனர். அவை குறித்து பல போலீஸ் புகார்களைக் கொடுத்தும் குற்றச்செயல்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் மக்கள் சலிப்படைந்து நிற்கின்றனர் என்றாரவர்.

கடந்த வாரம், காப்பாரில் ஒரு குப்பை லோரியை மடக்கிப் பணம் பறித்த செயல் – ஒரு பொதுச்சேவைக்கான வாகனம் சேதப்படுத்தப்பட்டு பொதுமக்களுக்கான சேவைக்கு தடங்கள் விளைவித்த செயல் – நாட்டில் நிலவும் குற்றச்செயல்களின் அலங்கோலத்திற்கு மகுடம் சூட்டியது போல் அமைந்துள்ளது என்று சேவியர் சுட்டிக் காட்டினர்.

அடுத்து தடுத்து நிறுத்தப்படப் போவது யார்? – தபால்காரரா, நீர், மின்சார இலாகா ஊழியர்களா?, என்றவர் வினவினார்.

 

எச்சரிக்கை

 

கடந்த வாரம் அவரது அலுவலகத்தில் நடந்த சந்திப்பு குறித்து சிலாங்கூர் மாநில போலீஸ் துறைக்கு கடிதம் எழுதியுள்ள சேவியர், அக்கடிதத்திற்கு சரியான பதில் கிடைக்கவில்லை என்றால், கிள்ளான் பகுதியில் கொள்ளை மற்றும் இதர குற்றச்செயல்களால் பாதிக்கப்பட்ட மக்களின் ஆட்சேப பேரணியை போலீஸ் தலைமையகம் எதிர்கொள்ள வேண்டி வரும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நாட்டில் பெருகி வரும் குற்றச்செயல்கள் மற்றும் வன்முறைகளைத் தடுக்க போலீஸ் அதிகமான வீரர்களை கடமையில் ஈடுபடுத்த வேண்டும்1 police என்று வலியுறுத்திய சேவியர், குற்றச்செயல்கள் மக்களின் இயல்பான வாழ்க்கைக்குச் சவால் விடும் அளவுக்கு வளர்ந்து விட்டன என்றார்.

 

போலீசார் மக்களின் பாதுகாப்பில் கவனம் செலுத்த வேண்டும்

 

போலீசார் மக்களுக்கு அளிக்க வேண்டிய பாதுகாப்பு அரணையும், கவனத்தையும், கண்காணிப்பையும் அரசியல் கூட்டங்களைத் தடுக்கவும்

அவர்கள் மீது குற்றச்சாட்டுகளைத் தயாரிப்பதிலும், தண்டிப்பதிலும் பயன்படுத்துவதால் நாட்டில் குற்றச்செயல்கள் எவ்விதத் தடங்களுமின்றி அதிகரித்து வருகின்றன என்று அவர் மேலும் கூறினார்.

சுதந்திர மலேசியாவில் அதன் குடிமக்கள் அச்சமின்றி சுதந்திரமாக வாழ முடியாவிட்டால், இது ஒரு முன்னேறிய நாடாக மட்டுமின்றி ஒரு சுதந்திர நாடாகக் கூட இருக்கத் தகுதியற்றது என்பதை நாம் அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று சேவியர் ஜெயக்குமார் கூறினார்.