தமிழ் இளைஞர்களை சுதந்திரமாக நடமாடும் சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும்!- பொன்.செல்வராசா எம்.பி.

pon-selvaஇந்த அரசாங்கம் இந்த நாட்டில் இன்னும் உள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்கி தமிழ் இளைஞர்களை சுதந்திரமாக நடமாடச் செய்வதற்கான சூழலை ஏற்படுத்த வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா தெரிவித்தார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா கடந்த சனிக்கிழமை வவுணதீவு பிரதேசத்தில் மக்கள் சந்திப்பு நிகழ்வில் கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில் அப்பிரதேச மக்கள் பலர் கலந்து கொண்டனர். இதன் போது பாராளுமன்ற உறுப்பினர் அவர்களினால் மக்களின் குறைநிறைகள் கேட்டு அறியப்பட்டதுடன் இது தொடர்பில் தன்னால் முடிந்த உதவிகளை வழங்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

நாங்கள் கடந்த 65 வருட காலமாக சோதனைகளையும் வேதனைகளையும் அனுபவித்த மக்களாக இருக்கின்றோம். தந்தை செல்வாவினால் 1949ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி மூலம் தமிழர்களின் அபிலாசைகளை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக பல நடவடிக்கைகளை மேற்கொண்டது முன்னெடுத்து வந்தது.

பிற்காலத்தில் பல தமிழ் கட்சிகளின் கூட்டு சேர்ந்து அது தமிழ் தேசியக் கூட்டமைப்பாக உருவெடுத்து வடக்கு கிழக்கில் வாழும் மக்களின் சுயநிர்ணய உரிமையினைப் பெற்றுக் கொடுப்பதற்கான பல நகர்வுகளை மேற்கொண்டுள்ளது.

தந்தை செல்வாவின் போராட்டம் வெற்றி பெறவில்லை என்பதால் எமது இளைஞர்கள் ஆயுதப் போராட்டத்தினை முன்னெடுக்க வேண்டிய சூழலுக்குள் தள்ளப்பட்டார்கள். இதன் பின்னர் எத்தனையே பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன ஆனால் அவை அனைத்தும் தோல்வியிலே முடிவுற்றன.

பின்னர் 2009ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளினால் மேற்கொள்ளப்ட்டு வந்த விடுதலைப் போராட்டம் இதற்கு முன் இருந்த அரசாங்கத்தினால் மௌனிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் எங்களுடன் இல்லாது விட்டாலும் அவர்களின் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டிருந்தாலும் அவர்கள் எமது நெஞ்சங்களில் இருந்து என்றும் நீங்குவதில்லை.

எமது தமிழ் மக்கள் போர்க்காலத்தில் அனுபவித்த துன்பங்களை வேதனைகளை விட போர் முடிந்ததும் அன்றைய அரசாங்கத்தினால் பல துன்பியல் நிகழ்வுகளுக்கு உள்ளாக்கப்பட்டவர்கள்.

அக்காலத்தில் தான் எத்தனையோ போர் இறந்திருக்கின்றார்கள், எத்தனையோ பேர் காணாமற் போயிருக்கின்றார்கள், எத்தனையோ பேர் கடத்தப்பட்டும் இருக்கின்றார்கள். இவை அனைத்தும் சென்ற அரசாங்கத்தின் தலைமையிலேயே நடாத்தப்பட்டது என்றால் அதனை யாரும் மறுக்க முடியாது.

எனவே இதற்கு தலைமை வகித்த முன்னாள் ஜனாதிபதியை விரட்ட வேண்டும் என மக்கள் சென்ற மாதம் 08ம் திகதி ஆணை பிறப்பித்தார்கள் அதன் படி புதிய ஜனாதிபதியும் நியமிக்கப்பட்டார். அதன் பின்னர் அன்றிலிருந்து ஓரளவு பயங்கரவாதம் இல்லாத சூழலில் நாம் வாழந்து கொண்டிருக்கின்றோம். ஆனால் இது எமது உண்மையான சமாதானம் அல்ல.

எமக்கு என்று அபி;லாசைகள் இருக்கின்றன. அவற்றிற்காக போராடிக் கொண்டும் இருக்கின்றோம். அவை எமக்கு இன்னும் கிடைத்த பாடும் இல்லை. மாறி மாறி வந்த அரசாங்கங்களினால் நாம் ஏமாற்றப்பட்டுக் கொண்டு இருந்தோமே தவிர எமது அபிலாசைகள் தீர்ப்பதற்கு அவர்களால் எவ்வித முன்னெடுப்புகளும் மேற்கொள்ளப்படவில்லை.

இதனாலேயே இந்த நாட்டில் பாரிய கொடிய யுத்தம் தோற்றம் பெற்றது. அது 2009உடன் மௌனிக்கப்பட்டதும் நாம் வெறுங்கையுடன் வீதியில் இருப்பவர்களைப் போல் வழியில்லாது நிற்கவிடப்பட்டோம்.

அதன் பின் 2010ம் ஆண்டு பொதுத் தேர்தலுடன் வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் ஆணையினால் தமிழ் மக்களி;ன் ஏக பிரதிநிதிகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரே என்ற ஆணை இந்த நாட்டிற்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த உலகத்திற்குமே எமது மக்களால் தெரியப்படுத்தப்பட்டது.

அது மட்டுமல்ல வடக்கு மாகாணத்தைவிட கிழக்கு மக்கள் தமிழ் தேசியத்தில் ஊறியவர்கள் தமிழ் தேசியத்தை ஆதரிப்பவர்கள் ஏனெனில் கடந்த 2010ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் வடக்கில் இருந்து மாற்றுக் கட்சிகளில் இருந்து தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்ட போதும் கிழக்கில் அதுவும் மட்டக்களப்பில் தெரிவு செய்யப்பட்ட அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினைச் சார்ந்தவர்களே அந்தளவிற்கு எமது தமிழ் மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பால் நாட்டம் கொண்டுள்ளார்கள். அது போலவே கிழக்கு மாகாணசபைத் தேர்தலிலும் இடம்பெற்றது.

தற்போது இந்த நாட்டில் புதிய அரசாங்கம் மலர்ந்திருக்கின்றது. புதிய தலைவர் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார். இருப்பினும் இன்னும் எமது இனப்பிரச்சினைகள் தொடர்பில் நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை. ஆனால் அதற்கான பச்சைக் கொடி ஜனாதிபதி அவர்களால் காட்டப்பட்டுள்ளது.

ஆனாலும் எமது சில பிரச்சினைகளை தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன இங்கு இல்லாது விட்டாலும் வடக்கில் எமது மக்களின் 6000 ஏக்கருக்கும் மேற்பட்ட காணிகள் அவர்களுக்கு பகுதி பகுதியாக மீள கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அது மட்டுமல்லாது தமிழ் தேசியக் கூட்டமைப்பினை எதிர்த்த ஜாதிக ஹெல உறுமய போன்ற சிங்கள பேரினவாத கட்சிகளும் தற்போது தமிழர்களின் கோரிக்கைகள் நியாயமானது என்று கூறும் அளவிற்கு தமிழ் மக்களுக்காக அவர்களும் வாதிடும் அளவிற்கு மாற்றம் வந்திருக்கின்றது.

இருப்பினும் பழைய நிலைமைகள் இன்னும் சிறுசிறு விடயங்களில் மாறாமல் இருப்பதை நாம் காண்கின்றோம் எமது இளைஞர்கள் கிழக்கு ஆசிய நாடுகளில் பணிபுரிந்து விட்டு மீண்டும் இலங்கைக்கு வரும் போது அவர்கள் விமான நிலையத்தில் கைது செய்யப்படுவது எம்மால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாகவே இருக்கின்றது.

இதற்கு காரணம் பயங்கரவாதத் தடைச்சட்டம் இதனை இந்த அரசாங்கம் நீக்க வேண்டும் என்பதில் நாம் தீவிரமாக இருக்கின்றோம். அதுபோல் இதனை பல நாடுகளும் சர்வதேச அமைப்புகளும் நீக்க வேண்டும் என்று அக்கறை செலுத்துகின்றன.

எனவே இந்த அரசாங்கம் இதனை நீக்கி எமது இளைஞர்களை சுதந்திரமாக நடமாட விட வேண்டும். அதற்கு நாம் பல முன்னெடுப்புகளை மேற்கொண்டும் வருகின்றோம்.

தற்போதைய நிலையில் எமது சில இலக்குகள் எட்டப்பட்டதன் பின்னர் எமது இனப்பிரச்சினை தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளோம் தற்போது அதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பழைய அரசாங்கத்திடமும் இது சம்பந்தமாக தெரிவித்தோம் தற்போதுள்ள அரசாங்கத்திடமும் தெரிவித்திருக்கின்றோம். இந்த அரசாங்கம் இதற்கான விடயங்களை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கின்றோம்.

இந்த நாட்டில் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் போராடுவதற்கும் எந்நேரமும் மக்களுடன் உறவாடிக் கொண்டிருக்கும் மக்களை அண்டிப் பழகுகின்ற தண்மை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற மாகாணசபை உறுப்பினர்களுக்கு மாத்திரமே இருக்கின்றது என்பதில் எவ்வித ஐயப்பாடும் இல்லை.

அது போல் பல வேதனைகளிலும் சோதனைகளிலும் எமது மக்களுக்கா உழைக்கின்ற கட்சியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு மாத்திரமே இருக்கின்றது ஏனைய கட்சிகள் அனைத்தும் சந்தர்ப்பவாத கட்சிகளாகவே இருக்கின்றன. அத்துடன் எமது மக்கள் முன்பிருந்த மாற்றுக் கட்சி தமிழ் உறுப்பினர்களுக்கு கடந்த ஜனாதிபதித் தேர்தலில் சிறந்த பதிலடி கொடுத்து அவர்களை முடக்கி வைத்திருக்கின்றனர்.

எனவே எமது மக்கள் ஒன்றை மட்டும் சிந்திக்க வேண்டும் கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது எவ்வாறு நாம் செயற்பட்டோமோ அது போல் ஏனைய வருகின்ற தேர்தல்களில் எல்லாம் எமது தமிழ் மக்களின் ஆதரவு தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கே இருக்கும் என்பதில் பூரண நம்பிக்கை இருக்கின்றது என்று தெரிவித்தார்.

-http://www.tamilwin.com

TAGS: