இந்தியப் பிரதமர் மோடிக்கு எதிராக அவரது சகோதரர் போராட்டம்: அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு

பிரதமர் மோடியின் மூத்த சகோதரர் பிரகலாத் மோடி. இவர் அகில இந்திய நியாய விலைக்கடை விநியோகஸ்தர்கள் சங்க துணைத் தலைவராக இருக்கிறார். இவர் நியாய விலைக் கடைக்காரர்களின் கோரிக்கைக்காக வியாபாரிகளை திரட்டி மும்பையில் மிகப்பெரிய போராட்டம் நடத்தினார்.
மும்பை ஆசாத் மைதானத்தில் ஏராளமான வியாபாரிகள் திரண்டனர். அவர்கள் மத்தியில் பேசிய பிரகலாத் மோடி, தனது சகோதரர் என்றும் பாராமல் பிரதமர் மோடி அரசை கடுமையாக குறை கூறினார்.

modi-brother

பிரகலாத் மோடி பேசியபோது, ‘’நியாய விலை கடை விநியோகஸ்தர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 1,000 கார்டுதாரர்களை ஒதுக்க வேண்டும் என்றும், கமிஷன் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தோம். அரசும் எங்கள் கோரிக்கையை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்தது. ஆனால், இதுவரை நிறைவேற்றப்படவில்லை.

பாராளுமன்ற தேர்தலின் போது 75,000 நியாயவிலை கடை விநியோகஸ்தர்கள் உத்தரப் பிரதேச மாநிலத்தில் பா.ஜனதா வெற்றிக்காக பணிபுரிந்தோம். இதனால் மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் 73 இடங்களை கைப்பற்றியது.

ஆனால், டெல்லி சட்ட சபை தேர்தலில் பா.ஜனதாவை எதிர்த்து நாங்கள் வேலை செய்ததால் அந்த கட்சி படுதோல்வி அடைந்தது. 70 தொகுதிகளில் பா.ஜனதாவால் 3 இடங்களை மட்டுமே கைப்பற்ற முடிந்தது.

இனியும் மத்திய அரசு எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற தவறினால் வர இருக்கும் உத்தரப்பிரதேசம், பீகார் மாநில சட்டசபை தேர்தல்களில் பா.ஜனதா தோல்வியை தழுவும்’’என்று தெரிவித்தார்.

மோடியை எதிர்த்து சகோதரரே போராட்டம் நடத்தியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

-http://sankathi.com

TAGS: