பட்டுப் பாதையை தொட்டுப்பார்… இந்தியாவுக்கு சீனா பகிரங்க எச்சரிக்கை

indchiபீஜிங்: தங்களது கடல்சார் பட்டுப்பாதை திட்டத்திற்கு இந்தியா தடை ஏற்படுத்த முயன்றால் அது மிகப்பெரிய பிரச்னையை உருவாக்கும் என சீனா பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஆதிக்கம்:

இந்திய பெருங்கடல் பகுதியில் தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்துவதற்காக, கடல் சார் பட்டுப்பாதை என்ற பெயரில், சீனா மெகா திட்டம் ஒன்றை செயல்படுத்தி வருகிறது.

இதன்படி, பழங்காலத்தில் சீனாவை ஐரோப்பிய நாடுகளுடன் கடல்வழியாக இணைத்த பாதைகளை மையப்படுத்தி, அங்கு தனது ராணுவ செல்வாக்கை நிலைநிறுத்துவதே சீனாவின் முக்கிய குறிக்கோள். இதற்காக இந்திய பெருங்கடல் நாடுகளான மியான்மர், இலங்கை, மாலத்தீவு உள்ளிட்ட நாடுகளில் பல்வேறு மெகா திட்டங்களை சீனா செயல்படுத்தி வருகிறது. ஆசியாவில் போட்டியாக உள்ள இந்தியாவை சுற்றிவளைத்து கண்காணிக்கவும், மேற்காசியாவிலிருந்து கச்சா எண்ணெய்யை சீனாவுக்கு தங்குதடையின்றி கொண்டு செல்லவும் இந்த திட்டம் உதவி செய்யும்.

சீனாவின் இத்திட்டத்திற்கு ‘செக்’ வைக்கும் முயற்சியாக பிரதமர் நரேந்திர மோடி, பருவப்பாதை என்ற திட்டத்தை கொண்டு வந்தார். பழங்காலத்தில் மேற்கு நாடுகளுடன் இந்தியா கொண்டிருந்த வர்த்தகம் மற்றும் கலாசார உறவை பின்பற்றி அதே பாதையில் வர்த்தகம் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவதே இந்த திட்டத்தின் நோக்கம். இந்திய பெருங்கடலில் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தவும் இத்திட்டம் உதவும். இந்தியாவின் இந்த செயல்பாடு சீனாவை எரிச்சலூட்டியுள்ளது.

எச்சரிக்கை:

இந்நிலையில், பீஜிங்கில் நிருபர்களிடம் பேசிய சீன வெளியுறவுத்துறை அதிகாரியான ஹூ ஸிசெங், ” சீனாவின் கடல் வழி மற்றும் சாலை வழி பட்டுப்பாதை திட்டத்திற்கு இந்தியா ஒரு பாலமாக இருக்கிறது. இந்த திட்டத்தை இந்தியாவுடன் இணைந்து செயல்படுத்த சீனா தீவிரமாக உள்ளது.

இந்த திட்டத்திற்கு இந்தியா எவ்வித இடையூறும் செய்யாமல் இருந்தால் நல்லது. ஏதாவது பிரச்னை செய்தால் அது மிகப்பெரிய விளைவுகளை ஏற்படுத்தும். இருந்தாலும் இந்தியா அவ்வாறு செய்யாது என நான் நம்புகிறேன். சீனாவின் பொருளாதார வளர்ச்சி தற்போது 7.4 சதவீதமாக குறைந்துள்ள நிலையில், அதை மீட்டெக்க பட்டுப்பாதை திட்டம் மிகவும் உதவிகரமாக இருக்கும்.

இது தொடர்பாக அடுத்த மாதம் சீனா வரும் பிரதமர் நரேந்திர மோடியிடம், அதிபர் ஜி ஜிங்பிங் வலியுறுத்துவார். ஆசிய பிராந்தியத்திற்கு இந்தியாவும் சீனாவும் பெரிய பங்காற்ற முடியும். இரு நாடுகளும் மிகப்பெரிய சக்திகள் என்பதால், பட்டுப்பாதை திட்டத்தை செயல்படுத்த வேண்டிய பொறுப்பு இரு நாடுகளுக்குமே உண்டு”. இவ்வாறு ஹூ ஸிசெங் தெரிவித்தார்.

-http://www.dinamalar.com