அரசாங்கக் கொள்கைகளை டிவி-இல் விளக்க வேண்டும்

sherifபொதுமக்களுக்குக்  கவலை  தரும் விவகாரங்களுக்கு பிரதமரும்  அவரின் அமைச்சரவையும்  தொலைகாட்சி  வழி நேரடியாக  விளக்கமளிப்பது  நல்லது  என்கிறார்  கருவூலத்தின்  முன்னாள்  தலைமைச்  செயலாளர்  ஷெரிப்  முகம்மட்  காசிம்.

டிவி 3-இல் ஏப்ரல் 9-இல்  ஒளியேறிய  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கின்  நேர்காணல்  பற்றிக்  கருத்துரைத்த  ஷெரிப்,  அப்படிப்பட்ட  நேர்காணல்களில்  இருவர்  நேர்முகம்  காண  வேண்டும் என்றார். ஒருவர்  நேர்காணல்  காணப்படுபவருக்கு ஆதரவாகவும்  இன்னொருவர்  எதிர்ப்பாளராகவும்  பேச  வேண்டும்.

நேர்காணல்  முடிந்ததும்  பிரதமர்  சொன்னவை  மீது  குழு விவாதமும்  நடத்தலாம்.

“இப்படி  நேர்காணலை  விறுவிறுப்பாக்கினால்  கம்பத்து  மக்கள்கூட  பாலிவூட்  படங்களை ஒதுக்கிவிட்டு  அறிவூட்டும்  நிகழ்ச்சி ஒன்றைப்  பார்ப்பதில்  மகிழ்ச்சி  அடைவார்கள்”, என்றாரவர்.

மேலைநாட்டு  ஊடகங்கள்  இதைச்  செய்கின்றன.  மலேசியாவும்  அதைப்  பின்பற்றலாம்  என  ஷெரிப்  கூறினார்.

ஷெரிப்,  முன்னாள் அரசு  அதிகாரிகளைக்  கொண்ட  ஜி 25  என்று  அழைக்கப்படும்  ஒரு  குழுவைச்  சேர்ந்தவராவார்.

“மக்கள் தேசிய  கடன், ரிங்கிட்  மதிப்புக்  குறைவு, பொருள், சேவை  வரி,  1மலேசியா  மேம்பாட்டு  நிறுவனம்  ஆகியவை  பற்றி  சமூக வலைத்தளங்களில் வெறுப்பைப்  பரப்புவோரிடமிருந்து தகவல்  பெறுவதைவிட  அந்தந்த  விவகாரங்களுக்குப்  பொறுப்பான  அமைச்சர்களிடமிருந்து  விளக்கம் பெறுவதையே  விரும்புகிறார்கள்”, என்று  ஷெரிப்  தமதுரையில்  கூறினார்.

என்ஜிஓ  ஒன்று  அரச  சிலாங்கூர்  கிளப்பில்  அவரது  உரைக்கு  ஏற்பாடு  செய்திருந்தது.