ஜனாதிபதியின் யாழ்.விஜயம் மகிந்தவுக்கு வீழ்ந்த உச்சி அடி

mai_mahin-100x80ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். மைத்திரியின் யாழ்ப்பாண விஜயம் மிகவும் இரகசியமாக வைக்கப்பட்டிருந்தது.

ஜனாதிபதியின் யாழ்ப்பாண விஜயத்தில் இரகசியம் பேணப்பட்டதற்கான காரணம் என்ன? என்பதற்கு அப்பால், தனது ஆட்சிக்குட்பட்ட ஓரிடத்திற்கு விஜயம் செய்வதாயின் அதற்குப் பெரும் எடுப்புத் தேவையில்லை.

சர்வ சாதாரணமாக, எளிமையாக போய் வர வேண்டும் என்ற அடிப்படையில் ஜனாதிபதி மைத்திரி செயற்பட்டார் என்பதே உண்மை.

முன்பெல்லாம் ஜனாதிபதி மகிந்த யாழ்ப்பாணத்திற்கு வருவதாயின் யாழ்ப்பாணத்தின் பிரபல பாடசாலை மாணவிகளுக்கும் அங்கு கற்பிக்கின்ற நடன, சங்கீத ஆசிரியர்களுக்கும் வேலைப்பளு போதும் என்றாகிவிடும்.

மகிந்தவை புகழ்ந்து போற்றிப்பாடும் வரவேற்புப் பாடல், தாம்… தீம்… தோம்… தாளத்தோடு வரவேற்பு நடனம் என ஏகப்பட்ட ஏற்பாடுகள் செய்யப்படும்.

ஆனால் ஜனாதிபதி மைத்திரி யாருக்குமே தெரியாமல், படைத்தரப்பின் எந்தப் பங்களிப்பையும் பெறாமல் யாழ்ப்பாணத்திற்கு வந்து போனார்.

அவரின் யாழ்ப்பாண விஜயம், புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலைக்கு தனது ஆழ்ந்த கவலையை தெரிவிப்பது, வித்தியாவின் குடும்பத்திற்கும் பாடசாலை மாணவிகளுக்கும் ஆறுதல் கூறுவது, குற்றவாளிகளுக்கு உரிய தண்டனையை விரைவாக வழங்குவதற்கான ஏற்பாடுகளை ஆராய்வது என்பதாகவே இருந்தது.

எதுவாயினும் மாணவி வித்தியாவின் படுகொலைக்கெதிராக வடக்கு – கிழக்கு மாகாணங்களில் ஆர்ப்பாட்டப் பேரணிகளும் கடையடைப்புகளும் இடம்பெற்று வருகின்ற வேளையில், சமூக நீதிக்கான மக்களின் எழுச்சிக்கு மதிப்புக் கொடுக்கும் வகையில் ஜனாதிபதி மைத்திரியின் யாழ்ப்பாண விஜயம் அமைந்ததென்று இங்கு கூறிக்கொள்வது பொருத்தமானது.

மகிந்த ராஜபக்ச� ஜனாதிபதியாக இருந்திருந்தால்; ஆர்ப்பாட்டம், ஹர்த்தால் என்ற பேச்சுக்கே இடம் இருந்திருக்காது. ஆனால் ஜனாதிபதி மைத்திரியின் ஆட்சியில் மக்களின் நீதியான போராட்டத்திற்கு இடம் கொடுக்கப்பட்டதுடன் அதற்கு மதிப்பளிக்கப்பட்டது. இதுவே மைத்திரியின் யாழ்ப்பாண விஜயம் என்று கூறுவதில் எந்தத் தவறும் இருக்காது.

அதேநேரம் மாணவி வித்தியாவின் படுகொலை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரி தனது பிரதிநிதி ஒருவரை யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி தனது ஆறுதலை தெரிவித்திருக்கலாம். ஆனால் அவர் அவ்வாறு செய்யாமல் தானே நேரில் வந்து மாணவர் சமூகத்திற்கு ஆறுதலை, நம்பிக்கையை தந்துள்ளார்.

இவையாவற்றுக்கும் மேலாக, மாணவி வித்தியாவின் கொலைக்கு எதிராக மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டங்களிற்கு வேறு விதமான வியாக்கியானம் செய்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்�சவின் போக்கிரித்தனமான பிரசாரங்களுக்கு முடிவு கட்டி, உண்மை நிலைமையை நாட்டு மக்களுக்குத் தெளிவுபடுத்துவதாகவும் ஜனாதிபதி மைத்திரியின் யாழ்ப்பாண விஜயம் அமைந்தது எனலாம்.

எது எப்படியிருப்பினும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் யாழ்ப்பாண விஜயம் மகிந்தவுக்கு வீழ்ந்த உச்சி அடி என்றே கூறவேண்டும்.

-http://www.puthinamnews.com

TAGS: