நஸ்ரியும் இளவரசரும் சமாதானம் ஆனார்கள்

sorryசுற்றுலா, பண்பாட்டு  அமைச்சர்  நஸ்ரி  அப்துல்  அசீஸ், ஜோகூர்  பட்டத்திளவரசர்  துங்கு  இஸ்மாயில்  சுல்தான்  இப்ராகிம்  முன்வைத்த  சமாதானக்  கோரிக்கையை  ஏற்றுக்கொண்டார்.

அமைச்சர், செவ்வாய்க்கிழமை  31-வயதை எட்டிய  இளவசரருக்குப்  பிறந்த  நாள்  வாழ்த்தையும்  தெரிவித்துக்கொண்டார்.

“அவரைப்  போலவே  நானும்  மனதில்  பட்டதைச்  சொன்னேன். வருத்தப்படும்படியாக  எதுவும்  சொல்லியிருந்தால் மன்னிப்பு  கேட்டுக்கொள்கிறேன். தனிப்பட்ட  முறையில்  அவரிடம் பகை  எதுவும்  இல்லை.

“இது  ரமலான்  மாதம்.  நல்ல  மாதம். அண்மையில்தான்  அவர்  பிறந்த  நாள்  கொண்டாடினார். நோன்பு  வாழ்த்துகள். அவர் குடும்பத்துடன்  நலமே  வாழ  வாழ்த்துகிறேன். Maaf zahir dan batin”, என  நஸ்ரி  மலேசியாகினியிடம்  தெரிவித்தார்.

நேற்று, துங்கு  இஸ்மாயில் தம்மையும்  நஸ்ரியையும்  மோதவிட்டு  வேடிக்கை  பார்ப்பதைப்  பத்திரிகைகள்  நிறுத்திக்  கொள்ள  வேண்டும்  என  வலியுறுத்தி  இருந்தார்.

பிரச்னையை  மேலும்  வளர விடக்  கூடாது. அதனால்  ஆகப்  போவது  எதுவுமில்லை  என்று  குறிப்பிட்ட  இளவரசர்,   ரமலான்  மாதத்துக்கு  மரியாதை  தெரிவிக்கும்  வகையில் சச்சரவிடுவதை  நிறுத்திக்  கொள்ள  விரும்புவதாகச்  சொன்னார்.