பாரத தேசம் போற்றும் உயிர் மூச்சு இன்று அடங்கியது! (வீடியோ இணைப்பு)

abdul_kalam_001முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் இன்று மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

இரண்டாம் இணைப்பு:

அப்துல் கலாம் மறைவிற்கு 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும் நாளை தமிழகத்தில் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என தமிழக அரசு அறிவித்துள்ளது.

முதலாம் இணைப்பு:

முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் (83), நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க மேகாலயா மாநிலம் சென்றிருந்தார்.

அங்கு ஐ.ஐ.ஐ.எம். மையத்தில் நடந்த கருத்தரங்கில் மாணவர்கள் மத்தியில் உரையாடிக்கொண்டிருந்தபோது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.

இதையடுத்து ஷில்லாங் நகரில் உள்ள பெதானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவரது நிலைமை கவலைக்கிடமாக இருந்ததையடுத்து ராணுவ மருத்துவர்கள் விரைந்து வந்து தீவிர சிகிச்சை அளித்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று இரவு காலமானார்.

அப்துல் கலாம்:

தனி மனிதனாக, தன் நம்பிக்கையின் ஊற்றாக, பாரதத்தின் அடையாளத்தை உலகுக்கு காட்டிய, இன, மத, பேதங்கள் கடந்து அனைத்து இனத்தவர்களையும், இந்தியன் என்று சொல்ல வைத்த ஒரு உன்னத அடையாளம் இன்று நம்மை விட்டு பிரிந்துவிட்டது.

இவரின் தன்னம்பிக்கையை யாராலும் அடைய முடியாது. இளைஞர்களின் உணர்வுகளை மதிக்கும் பெரும் தலைவன். இளைஞர்களால் தான் நாளை இந்தியா வல்லரசாகும் என்று அசையாத நம்பிக்கையை ஏற்படுத்திய ஒப்பற்ற தலைவன்.

தன் வாழ்க்கை காலத்தில் பல இளம் தலைமுறையினரையும், பாடசாலை மாணவர்களையும் நேரில் சந்தித்து அவர்களோடு உரையாடிய முதல் பெரும் தலைவனாக திகழும் அப்துல்கலாம் அவர்கள், அக்டோபர் 15, 1931 அன்று ராமேஸ்வரத்தில் பிறந்தவர்.

திருக்குறளை தனது வழிகாட்டி நூலாக ஏற்று, அதற்கு ஏற்றால் போல ஒழுகி, அறத்தினூடான வாழ்க்கை, அவ்வறத்தின் பயனாக அறவாட்சியை பாரத நாட்டில் நிலைநாட்ட தேசத்தின் 11வது குடியரசுத் தலைவரானார்.

அரசாங்கப்பள்ளியில் படித்து, அரசாங்கத்தின் தலைவனானவன்.

இந்தியாவை சர்வதேச அளவில் தலைநிமிர வைத்த பொக்ரான் அணு ஆயுத சோதனை முதல், கால்கள் பழுது பட்டவர்களுக்கான எடை குறைந்த மாற்றுக் கால்கள் வரை இவரது தலைமையில் விளைந்தவை.

இந்தியா அணு ஆயுத சாதனத் திறனில் ஐந்தாம் இடத்திலும், செயற்கைக் கோள் ஏவு திறனில் ஆறாம் இடத்திலும் முன்னேறி அமரக் காரணமானவர்.

பல விருதுகளையும் டாக்டர் உள்ளிட்ட பல பட்டங்களையும் மறுத்தவர்.

எந்த நாடு சென்றாலும் சென்ற நாட்டில் அரச தலைவர்களுக்கு பின்னர் அவர் சந்திப்பது பல்கலைகக்கழக மாணவர்களையும் பாடசாலை சிறுவர்களையுமே.

இளைஞர்களே கனவுகாணுங்கள் என்று இளைய தலைமுறையினரை தட்டியெழுப்பிய அந்த ஒப்பற்ற மனிதன் நீண்ட உறக்கத்தில் இன்று சஞ்சரித்துவிட்டான். நிச்சையம், நிச்சையம், அந்த நீண்ட உறக்கத்தில் அவர் பெரியதொரு கனவு காண்பார்.

நாளை பாரத தேசம் இந்த இளைஞர்களால் வல்லரசு ஆகும் என்று தனது வரலாற்றை வேறு யாரையும் எழுதவிடாமல் தான் உயிரோடு இருக்கும் பொழுதே தனது வாழ்க்கை வரலாற்றை ‘அக்னிச் சிறகுகள்’ என்ற பெயரில் எழுதி அடுத்தடுத்த தலைமுறைக்கு தன் கைபட பதிவு செய்து கொடுத்துவிட்டு சென்றுவிட்டார்.

-http://world.lankasri.com

TAGS: