சமூக ஆர்வலர்கள்: சோதனையில் தோற்றார் துணைப் பிரதமர்

demiநேற்று  #TangkapNajib(நஜிப்பைக்  கைது செய்) பேரணி  தொடங்குவதற்குமுன்  29 பேர்  கைது  செய்யப்பட்டதானது  பொதுமக்களை  அச்சுறுத்தும்  நடவடிக்கையாகும்  என்று  பேரணி  ஏற்பாட்டாளர்கள்  கூறுகின்றனர்.

“உண்மையில்  #TangkapNajib பேரணியே புதிய  துணைப்  பிரதமரும் போலீசுக்குப்  பொறுப்பாகவுள்ள  உள்துறை  அமைச்சர்  எப்படி  நடந்துகொள்கிறார்  என்பதை அளவிடும் ஒரு  முயற்சிதான்.

“பொதுமக்களைப்  பயமுறுத்தும்  நோக்கத்துடனேயே  போலீஸ்  கடுமையாக  நடந்துகொண்டது  என  நினைக்கிறோம்”, எனப்  பேரணி  ஏற்பாடு  செய்திருந்த  டெமி  மலேசியா  என்னும்  இளைஞர்  அமைப்பு  ஓர்  அறிக்கையில்  கூறியது.

ஊர்வலம்  செல்லக்கூடாது  என்ற  நிபந்தனையுடன்   பேரணி  நடத்த  போலீசார் பேரணிக்கு  முதல்  நாள்  தங்களுக்கு  அனுமதி கொடுத்திருந்தார்கள்  என்றவர்கள்  கூறினர்.

ஆனால், நேற்றைய  பேரணியின்போது  போலீசார்  நிறைய  குவிக்கப்பட்டிருந்தனர்.  பேரணியில்  கலந்துகொள்வதற்காக  வந்தவர்கள்  கைது  செய்யப்பட்டார்கள்.

இதனால் சோகோ  விற்பனை  மையத்துக்கு  வெளியில்  நடைபெறவிருந்த  பேரணி  தொடங்குவதற்கு  முன்பே  பிசிபிசுத்துப்  போனது.

கூட்டரசு  அரசமைப்பு,  அமைதிப்  பேரணி  நடத்தும்  உரிமைக்கு  உத்தரவாதம்  அளிப்பதையும்  அதற்கு  முரணான  சட்டம்  எதுவும்  இயல்பாகவே  செல்லுபடியாகாமல்  போய்விடும்   என்பதையும்  டெமி  மலேசியா  அதிகாரிகளுக்கு  நினைவூட்டியது.

போலீஸ்  அறிவிக்கைகளும்  இதனுள்  அடக்கம்  என்றவர்கள்  கூறினர்.

புதன்கிழமை  இன்ஸ்பெக்டர்  ஜெனரல் அப்  போலீஸ்  காலிட்  அபு  பககார்  மக்களைத்  தூண்டிவிட்டு  அரசாங்கத்தைக்  கவிழ்க்கும்  முயற்சிகளைப்  போலீஸ்  பார்த்துக் கொண்டிருக்காது  என  எச்சரித்திருந்தார்.

‘வாக்குறுதியை மீறிய  போலீசார்’

#TangkapNajib  பேரணி, பிரதமர் நஜிப்  அப்துல்  ரசாக்கை  ஊழலுக்காகவும் அதிகாரமீறல்களுக்காகவும்  கைது  செய்ய  கோரிக்கை  விடுப்பதற்காக  ஏற்பாடு  செய்யப்பட்டிருந்த  பேரணியாகும்.

பேரணிக்கு  முன்னதாக,  பேரணிக்கு  ஏற்பாடு  செய்வதுடன் சம்பந்தப்பட்ட  சமூக  ஆர்வலர்கள்  ஆதம்  அட்லி அப்துல்  ஹலிம், மந்திப்  சிங், சுக்ரி  அப்ட்  ரஜாப் ஆகியோர்  வெள்ளிக்கிழமை  கைது  செய்யப்பட்டனர்.

அவர்களில்  இருவரிடம், அவர்களைப்  போலீஸ்  நிலையத்துக்கு  அழைத்தபோது  கைது  செய்யப்பட  மாட்டார்கள்  என  உத்தரவாதம்  அளிக்கப்பட்டிருந்தது.

ஆனால், போலீசுடன் ஒத்துழைத்து  போலீஸ்  நிலையத்தை  விட்டு  வெளியேறியபோது  அவ்விருவரும்  கைது  செய்யப்பட்டனர்.

இதன்பிறகும்  போலீசைப்  பொதுமக்கள்  நம்ப  முடியுமா  என  டெமி  மலேசியா  கேள்வி  எழுப்பியது.

“இப்படியெல்லாம்  வாக்குறுதிகள்  மீறப்படும்போது இனியும்  மக்கள் போலீசார்  அளிக்கும்  வாக்குறுதிகளை  நம்ப முடியுமா?”, என்றவர்கள்  கேட்டனர்.

“போலீசாரின்  கடமைதான்  என்ன? மக்களைப்  பாதுகாப்பது, திருடர்களையும்  கொள்ளையர்களையும்  குற்றவாளிகளையும் பிடிப்பது. ஆனால்,  அதை  நாம்  காணவில்லையே”, என  டெமி  மலேசியா  தொடர்ந்தது.

“நாட்டின்  பாதுகாப்புக்கு எந்த  வகையிலும்  மிரட்டலாக  இல்லாத ஆர்ப்பாட்டக்காரர்கள், மாணவர்கள்,  சமூக  ஆர்வலர்கள்  கைது  செய்யப்படுகிறார்கள். குற்றவாளிகள்  சுதந்திரமாக  திரிகிறார்கள்”, என்று  அது  கூறிற்று.

சோலிடேரிடி  அனாக்  மூடா  மலேசியாவும்(எஸ்ஏஎம்எம்) நேற்றைய  கைது  நடவடிக்கையைச்  சாடியது.

“குற்றவாளிகள்போல்  அவர்கள்  கைது  செய்யப்பட  அவர்கள்  என்ன  நாட்டின்  பணத்தையா  திருடினார்கள்?”, என்று  வினவிய  அது  கைது  செய்யப்பட்டவர்களை உடனே  விடுவிக்க  வேண்டும்  என்றும்  கோரிக்கை  விடுத்தது.

இதேபோல்  தேர்தல்  சீரமைப்புக்காக  போராடும்  பெர்சேயும்  அறிக்கை  விடுத்திருந்தது. கைது  நடவடிக்கைகளைக்  கண்டு  அஞ்சி  ஆகஸ்ட்  29  பெர்சே பேரணியில்  கலந்துகொள்ளாமல்  இருந்துவிட  வேண்டாம்  என்று  அது  பொதுமக்களைக்  கேட்டுகொண்டது.