பெர்சே 4: “நாம் இந்தத் தலைவரை விட்டொழிக்க வேண்டும், மகாதிர் கூறுகிறார்

 

bersih4-17முன்னாள் பிரதமர் மகாதிர் தாம் மக்களை ஆதரிப்பதாகவும், பிரதமர் நஜிப் பதவி துறக்கக் கோரி தெருப் போராட்டங்கள் நடத்தும் பெர்சேயை அல்ல என்று இன்று பின்னேரத்தில் கூறினார்.

எனினும், பெர்சே மக்களின் ஓர் அங்கமாகும் என்பதைச் சுட்டிக் காட்டிய மகாதிர், அந்த அமைப்புக்கும் கூட உரிமைகள் உண்டு என்றாரவர்.

தாம் பெர்சேக்கு ஆதரவு தெரிவித்ததற்காக சிலர் இப்போது தம்மை குறைகூறுகின்றனர் என்று தெரிவித்த மகாதிர், “பெர்சேயும்கூட மக்கள்தான். அனைவரும் மஞ்சள் (உடை) அணிந்திருக்கவில்லை என்பதை அவர் சுட்டிக் காட்டினார்.

மக்களுடனான தமது ஒருமைப்பாட்டை வெளிப்படுத்துவதற்காக தாம் இங்கு வந்திருப்பதாக மகாதிர் இன்று கோலாலம்பூரில் செய்தியாளர்களிடம் கூறினார்.

நஜுப் பதவி துறக்க வேண்டியதின் அவசியத்தை மகாதிர் மீண்டும் வலியுறுத்தினார். அது பாரிசான் மீட்சிபெற உதவும் என்றார்.

பெர்சே 4 முன்வைத்திருக்கும் கோரிக்கைகளை தாம் பொருட்படுத்தவில்லை என்று கூறிய அவர், பிரதமரின் தலை உருள வேண்டும் என்றார்.

பிரதமரை பற்றி ஏதாகிலும் செய்தாக வேண்டும் என்று நூற்றுக்கணக்காண மலேசியார்கள் தம்மிடம் முறையிட்டுள்ளனர் என்று கூறிய மகாதிர், “இம்மாதிரியான ஊழல் தலைவரை ஒட்டுமொத்த மக்களும் விரும்பவில்லை. இந்தத் தலைவரை நாம் விட்டொழிக்க வேண்டும், முடிந்தால் வழக்கமான வழிகளின் மூலமாக செய்ய வேண்டும்” என்று மகாதிர் தெளிவாக கூறினார்.

நஜிப்புக்கு எதிராக சட்டமுறைப்படி மேற்கொள்ளக் கூடிய வழிமுறைகளை அவர் முறியடித்து விட்டார், சட்டத்துறை தலைவர் அப்துல் கனி பட்டேயல் அகற்றப்பட்டது அதில் அடங்கும் என்றாரவர்.

பெர்சே 4 ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பாரா என்ற கேள்விக்கு அவர் திட்டவட்டமாக “இல்லை” என்று பதில் அளித்தார்.

“எனது உணர்வுகள் உங்கள் அனைவருடனும் இருக்கிறது”, என்று கூறி மகாதிர் விடைபெற்றுக் கொண்டார்.