தேசிய அரசாங்கம் என்ற கவர்ச்சியில் மயங்கி தேடிக் கொள்ள போவது பெரிய தலைவலி ஒன்றையே !

001ஒரே கட்சியைச் சேர்ந்த ஒரு தொகை பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தை உருவாக்கி அமைச்சுப் பதவிகளை அனுபவித்துக் கொண்டும், எஞ்சிய தொகையினர் எதிர்க்கட்சித் தலைமைப்பதவியை அனுபவிப்பதற்குமாக செய்யப்படும் ஏற்பாடுகள் பாராளுமன்ற விழுமியங்களைப் பலிக்கடாவாக்கும் பாரம்பரியத்தை உருவாக்க இடமிருப்பதனால், எதிர்க்கட்சித் தலைமைக்கு இரட்டைத்தலை சுதந்திரக்கட்சிக்கு இடமளிக்காமல், மூன்றாமிடத்தில் இருக்கும் தமிழர் கூட்டமைப்புக்கு எதிர்க் கட்சித் தலைமையை வழங்க முஸ்லிம் கட்சிகள் அழுத்தம் கொடுப்பதுடன், அது முடியாமல் போகும் பட்சத்தில் ஆட்சிக்கு வரமுன்பே ஜனநாயகத்தைக் கேலிக் கூத்தாக்கத் தயாராகும் ஐ.தே.முன்னணி ஆட்சியிலிருந்து முஸ்லிம் கட்சிகள் ஜனநாயகத்தின் பெயரால் வெளியேற வேண்டும் என்று முஸ்லிம் தேசிய வாதிகள் இயக்க செயலாளர் நாயகமும் முன்னாள் ஏற்றுமதி அபிவிருத்தி அமைச்சருமான சட்டத்தரணி எம்.எச்.சேகு இஸ்ஸதீன் முஸ்லிம் கட்சிகளை அறிவுறுத்தியுள்ளார்.

தென் கிழக்கு முஸ்லிம் தேசியவாதிகள் இயக்கம் (செம்னோ) விடுத்துள்ள அறிக்கையில் அவர் மேலும் கூறியதாவது, பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான கையோடு ஐ.தே.முன்னணியுடன் சேர்த்து கூட்டாட்சி ஒன்றை அமைக்க தமிழர் கூட்டமைப்பு தயாராக இருக்காமல் போனது மிகவும் துரதிர்ஷ்டவசமான அரசியல் நிகழ்வாகும். ஐ.தே.முன்னணி ஆட்சியைக் காலூன்றவைத்து, பலப்படுத்தி ஆரம்ப காலகட்டத்தில் இந்த நாட்டின் மொத்த நன்மைக்கான அபிவிருத்திகளைச் செய்து காட்டி, மக்களைத் திருப்திப்படுத்தி, அவர்களின் நல்லெண்ணத்தையும், நம்பிக்கையையும் பெற்றுக்கொண்டு தமிழர் தரப்பு உரிமைகளையும், நியாயங்களையும் படிப்படியாக இலகுவான முறையில் வென்றெடுக்க தமிழர் கூட்டமைப்பு தாராள மனத்துடனும், தளராத நம்பிக்கையுடனும் முயற்சி செய்து பார்த்திருக்க முடியும். ஆனால் அது உள், வெளிக்காரணங்களால் நடைபெறாமல் போயிற்று அதன் விளைவாக இன்று ஐ.தே.முன்னணி இரட்டைத் தலை சுதந்திரக்கட்சியின் காலில் விழுந்து கிடக்க வேண்டியதாயுள்ளது.

தேசிய அரசாங்கம் என்ற பெயரின் கவர்ச்சியில் தேடிக்கொள்ளப்போவது தீராத தலைவலியைத்தான் என்பதைத் தெரிந்து கொள்ள பிரதமர் ரணிலுக்கு அதிக காலம் தேவைப்படாது. ஆட்சியிலமர்ந்து கொண்டும், எதிர்க்கட்சியில் இருந்து கொண்டும் சுதங்திரக் கட்சி ஆடப் போகின்ற நாடகம் ஜனாதிபதி மைத்திரியின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கக் கூடியதாகவே அமையும் சாத்தியம் அதிகம் உண்டு.இதைவிட தமிழர் கூட்டமைப்போடு தேசிய அரசாங்கம் என்றில்லாமல் ஐ.தே.முன்னணி ஒரு கூட்டாட்சியை ஜனாதிபதி மைத்திரியின் துணையோடு நடாத்தவும், அந்தக் கூட்டாட்சியை எதிக்க்கட்சியிலிருந்து சுதந்திரக் கட்சி வழி நடாத்தவும் முடியுமாக இருந்தால், நாடு முன்னேற்றத்தை நோக்கி வீறுநடைபோட முடியும்.

ஜனாதிபதி மைத்திரியின் நற்பெயர் இலங்கை இதிகாசத்தில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டு சாகாவரம் பெறப்போவதை அமைக்கப்படப்போகும் பாராளுமன்ற ஆட்சிதான் தீர்மானிக்கப்போகிறது என்பதை ஜனாதிபதி உதாசீனம் செய்வதற்கில்லை.நிறைவேற்ற அதிகாரம் குறைக்கப்பட்டுள்ள நிலையில் பாராளுமன்ற ஆட்சி அதிகாரத்தில் தனது செல்வாக்கைத் தக்கவைத்துக் கொள்வதற்காக, மஹிந்தவின் பாலருந்தி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணித் தொட்டிலில் இனவாதிகளின் தாலாட்டில் ஆடிக் கொண்டிருந்த சுதந்திரக்கட்சிக்கு ஞானஸ்ஞானம் செய்த ஐ.தே.முன்னணி ஆட்சியில் அங்கம் வகிக்க அனுப்புவதை ஆப்படிக்க அனுப்புவதாக மக்கள் புரிந்து கொள்ளப் போகிறார்கள்.

இந்த இழுபறி இன்னும் தொடருமானால் அறுதிப் பெரும்பான்மை அளிக்கும்படி மக்களிடம் வேண்டிக் கொண்டு பாராளுமன்றத்தைக் கலைப்பது பற்றிப் பிரதமர் ரணில் யோசித்தால் அது தவறாக முடியாது.இந்த நிலைமையை நீடிக்க விடாமல் எதிர்க்கட்சித் தலைமையை தமிழர் கூட்டமைப்புக்கு வழங்குமாறு முஸ்லிம் கட்சிகள் பிரதமரையும், ஜனாதிபதியையும் காரணங்களை விளக்கி அழுத்தம் கொடுக்க வேண்டும். அவர்கள் அதற்கு இணங்காத பட்சத்தில் முஸ்லிம் கட்சிகள் அரசாங்கத்தைவிட்டு வெளியேறி சிறுபான்மை கூட்டமைப்பை உருவாக்கி செயற்படுவது பற்றி தீவிரமாக ஆலோசிக்க வேண்டும்.

-http://www.athirvu.com

TAGS: