அவர்கள்தான் இவர்கள் இவர்கள்தான் அவர்கள் – புகழேந்தி தங்கராஜ்

pugalenthi_tangaraj2009க்குப் பிறகு, தொடர்ந்து ஒரு நயவஞ்சக நகர்வை வேதனையுடன் கவனித்து வருகிறேன்….

‘பிரபாகரன் மாதிரி ஒரு வலுவான தலைமை தமிழினத்துக்கு இனிமேல் கிடைக்கப் போவதில்லை…
பிரபாகரன் மனிதனில்லை…. கடவுள்…….
ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் பிரபாகரன்கள் பிறக்கிறார்கள்….’
என்றெல்லாம் சொல்லித் திரிகிறவர்கள் தான் மிகமிக  ஆபத்தானவர்களாக இருக்கிறார்கள். ஆட்டின் கழுத்தில் கத்தி வைப்பதற்கு முன், அதற்கு மஞ்சள் தண்ணீர் தெளிக்கிற மகானுபாவர்கள் இவர்கள்.

அவ்வளவும் எழுதிவிட்டு, அடுத்த வரியிலேயே, ‘பிரபாகரனுக்கு ராஜந்திரம்தான் கொஞ்சம் குறைச்சல்’ என்று தொடங்கி ஒருபாட்டம் ஒப்பாரி வைப்பது இந்த நயவஞ்சக  சாநக்கியர்களின் வழக்கமாக இருக்கிறது.  ‘கேள்போல் பகைவர் தொடர்பு’ என்று வள்ளுவன் குறிப்பிடுவது, இவர்களைப் பற்றித்தான்!

நம்மைப் பொறுத்தவரை, பிரபாகரன் கடவுளில்லை…. மனிதன்.
காவியங்களிலும் கதைகளிலும் கற்பனையாக உருவாக்கப்பட்டிருக்கும் கதாநாயகர்களுக்கு வல்வெட்டித்துறை  கொடுத்திருக்கும் வரலாற்று வடிவம்…..

‘தாய்த்திரு நாட்டைத் தகர்த்திடும் மிலேச்சரை
மாய்த்திட விரும்பார் வாழ்வுமோர் வாழ்வுகொல்?’……
என்று உறுமிய எங்கள் பாட்டுப் பாட்டன் பாரதியின் வார்த்தைகள் தான், புலியென நிமிர்ந்த பிரபாகரனின் வாழ்க்கையாக இருந்தது.

பிரபாகரனின் விடுதலை இயக்கம் வீழ்த்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டது, 2009ல்! அப்படி ஓர்  அறிவிப்பை வெளியிடுவதற்கே,  20 நாடுகளின் இடுப்பு தேவைப்பட்டது இலங்கைக்கு! ஆயுதங்களெல்லாம் பறிக்கப்பட்ட நிலையிலும், அந்த அளவுக்கு வலுவானவர்களாகத் திகழ்ந்தார்கள், பிரபாகரனின் தோழர்கள்.

விடுதலைப் புலிகளை முற்றிலுமாக அழித்து விட்டதாக அறிவித்தவர்களே, அவர்கள் வந்து கொண்டிருக்கிறார்களோ என்று அஞ்சி நடுங்குகிற அளவுக்கு, இன்றுவரை நின்று நிலைக்கிறது புலிகளின் ராஜதந்திரம். உறங்குவதைப் போல்   அமைதியாகக் கிடக்கிற நதிதான் ஆழமானது என்பது இலங்கைக்கு மட்டும் புரியாதா என்ன!

விஷமம் செய்வதற்காகவே விமர்சனம் செய்பவர்களுக்கு, புலிகளின் எதிரிகள்தான்  தமிழின எதிரிகள் என்பது தெரியாதா என்ன? ஒன்றரை லட்சம் தமிழர்களைக் கொல்ல ஒத்தாசையாக இருந்த எவருடனாவது  தமிழினம் ஒன்றுபட்டு நிற்க முடியுமா? இதைப் புரிந்துகொள்ள மிகப்பெரிய ராஜதந்திரமெல்லாம் தேவையா என்ன?

இந்த நொடியில் நாம் உடனடியாகக் கேட்பது ஈழமில்லை…. கொல்லப்பட்ட ஒன்றரை லட்சம் உயிர்களுக்கான நீதி….. சீரழிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான சகோதரிகளுக்கான நீதி. இதைக் கேட்கத் தயங்குகிறவர்கள் – ஒன்று, துரோகிகளாக இருக்க வேண்டும், அல்லது கோழைகளாக இருக்க வேண்டும்.

‘2012ல், ஜெனிவாவில், இலங்கை அரசின் கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது….
2013ல் அந்தப் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த கால அவகாசம் தருவது என்று தீர்மானிக்கப்பட்டது….
2014ல் – இலங்கையின் பொறுப்புக்கூறலையும் நல்லிணக்கத்தையும் ஊக்குவித்தல் – என்கிற பெயரிலான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது….’ –
இதெல்லாம் சுமந்திரன்களின் மழுப்பல் வாக்குமூலங்கள். இதன்மூலம் என்ன சொல்லவருகிறார்கள் அவர்கள்?

நடந்த இன அழிப்புக்கு நீதி மறுக்கப்படுவதை மூடிமறைக்கத்தான், ஐ.நா. பல் விளக்கியது, ஐ.நா. வாய் கொப்பளித்தது, ஐ.நா. நாக்கு வழித்தது என்றெல்லாம்  வாய்வலிக்க விவரிக்கிறார்கள் அவர்கள். இது, அவர்களுக்குப் பிடித்தமான  பொழுதுபோக்காக இருக்கலாம். நமக்குத்தான்,  காதுவலி தாங்க முடியவில்லை.

‘ஒரு நாடு இன்னொரு நாட்டுக்குத் தீங்கு செய்கிற அமைப்பாக ஐ.நா.மனித உரிமைகள் பேரவை அமைக்கப்படவில்லை. ஒவ்வொரு நாடும் தனது சுயாதீனத்தையும் இறைமையையும் இழந்துவிடக் கூடாது என்பதே அந்தப் பேரவையின் எண்ணம்….’ – என்று மனிதநேயம் பொங்க விளக்குகிறார் சுமந்திரன். (சட்டத் தரணின்னா சும்மாவா?) சொந்த மண்ணில் ஒரு இனம் இன்னொரு இனத்துக்குத் தீங்கு விளைவிப்பதை மட்டும்  அனுமதித்தே ஆகவேண்டும் என்கிறாரா?

நீங்களும் நாங்களும் ஒரே நாடு – என்று சொல்லிச் சொல்லியே  தமிழர்களைக் கொன்று குவித்தார்கள்  சிங்கள ஆட்சியாளர்கள்.  அந்தக் கொலைகாரர்களைக் கூண்டில் நிறுத்து – என்பதுதான் நமது கோரிக்கை. குற்றவாளியைத்தான் கூண்டில் நிறுத்தச் சொல்கிறோம்…. ஒரு தேசத்தை அல்ல! கொலைக்   குற்றவாளிகளைக் கூண்டில் நிறுத்தினால், இலங்கை தனது  இறைமையை இழந்துவிடுமென்றால், அப்படியொரு இழிவான தேசத்துக்கு இறையாண்மை என்கிற எழவெல்லாம் எதற்கு?

சிங்கள மக்களை மனப்பூர்வமாக நேசிக்க சுமந்திரன்களுக்கு  சகல உரிமையும் இருக்கிறது. அது அவர்களது தனிமனித உரிமை. அதற்காக, எம் சகோதரிகளைச் சீரழித்த மிருகங்களுடன் அட்ஜஸ்ட் செய்துகொண்டு வாழப் பழகிக்கொள்ள வேண்டுமென்றும், குற்றவாளிகளுடன் சேர்ந்து கூட்டாஞ்சோறு சாப்பிட்டால்தான் இலங்கையின் ஒருமைப்பாட்டை உயர்த்திப் பிடிக்க முடியுமென்றும், மற்றவர்களுக்குப் போதிக்க என்ன உரிமை இருக்கிறது அவர்களுக்கு?

மானுடத்தை உயர்த்திப் பிடிக்கிற மனிதர்களை, அவர்கள் சிங்களவரா தமிழரா என்றெல்லாம் பார்க்காமல், மதிப்பவர்கள் தான் நாமும்! தமிழினப் படுகொலையைக் கண்டித்த லசந்த முதல் பிரகீத் வரை, இனப்படுகொலைக்கு நீதி கேட்கும் பாஷன அபயவர்தனவிலிருந்து  பிரையன் சேனவிரத்ன வரை எண்ணற்ற சிங்களவர்களை இதயத்தில் சுமக்கிறோம் நாம். அதற்காக, ‘மகிந்தனைக் காப்போம், ஒருமைப்பாட்டைக் காப்போம்’ என்று முழங்குகிற மைத்திரியையும் ரணிலையும் சமந்தகர்களையும்  எம் முதுகில் தூக்கிச் சுமக்க முடியாது.

ராஜபக்சவின் ராணுவத்தால் கொல்லப்பட்டவர்கள், ஒன்றரை லட்சம் உறவுகள். விரட்டி விரட்டிக் கொல்லப்பட்ட அவர்களைப் பற்றி மட்டும்தான் நாம் கவலைப்பட முடியும். தற்கொலை செய்துகொண்ட  இலங்கையின் ஒருமைப்பாடு குறித்தெல்லாம்   கவலைப்பட்டுக் கொண்டிருக்க முடியாது. அல்லும்பகலும் அதைப்பற்றியே சிந்திக்கும் சமந்தகர்களை, அந்த விசுவாச ஊழியத்துக்கு  அர்ப்பணித்துவிடுவோம்!

பாஞ்சாலியின் மானம் காக்க ஜவுளிக்கடைகளோடு ஓடோடிவந்த  கிருஷ்ண பரமாத்மாவுக்கும், ‘துச்சாதனனுக்கு என்ன தண்டனை என்பதை துரியோதனன் முடிவுக்கே விட்டுவிடுவோம்’ என்று தீர்ப்பு எழுதுகிற  அமெரிக்காவுக்கும் வித்தியாசமே  இல்லையென்றா நினைக்கிறார்கள் சமந்தகர்கள்!

குற்றவாளி மகிந்தனைக் காப்பாற்றத்தான், ‘இலங்கையில் நல்லிணக்கத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்கிற சூழ்நிலை உருவாகியிருக்கிறது’ என்று அமெரிக்கா கூசாமல் பேசுகிறது என்பது அவர்களுக்குப் புரியவில்லையா?

மகிந்தனின் இலங்கை, சீனாவின் மடியிலிருந்தது. மைத்திரியின் இலங்கை, அமெரிக்காவின் இடுப்பில் இருக்கிறது.  அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையே நல்லிணக்கம் ஏற்பட்டிருப்பதை நேரடியாகச் சொல்லித் தொலைக்க வேண்டியது தானே! ‘இலங்கையில் நல்லிணக்கம்’ என்று பூசி மெழுகிப் பேசி, நீதி கேட்டுப் போராடுகிற இனத்துக்கு மொட்டையடித்துச் சந்தனம் பூசுகிற வேலை சாம் அங்கிளுக்கும் சமந்தகர்களுக்கும் எதற்கு?

அமெரிக்காவிடமும் இந்தியாவிடமும் சமந்தகர்களிடமும்  மட்டுமே கேட்கவில்லை இதை!  துரோகம் செய்த ஒவ்வொருவரையும் பார்த்துக் கேட்கிறேன்! ‘இனப்படுகொலை என்று யாரைக் கேட்டுத் தீர்மானம் நிறைவேற்றினீர்’ என்று விக்னேஸ்வரனிடம் கடுப்படித்தவர்களைப் பார்த்துக் கேட்கிறேன்!

(‘நீங்கள் சட்டத்தரணி மாதிரி கேள்வி கேட்கிறீர்கள்… நான் நீதிபதி மாதிரி செயல்பட்டிருக்கிறேன்’ என்று விக்னேஸ்வரன் என்கிற அந்த மனிதர் பொறுமையுடன் பதிலளித்ததை இந்த இடத்தில் மறக்காமல் குறிப்பிட்டாக வேண்டும்!)

ஒரு நயவஞ்சக நகர்வை வேதனையுடன் கவனித்து வருகிறேன் – என்று நான் சொன்னதற்கு எக்கச்சக்கமான ஆதாரங்கள். அவை ஒன்றோடொன்று தொடர்புடையவை வேறு.
பிரபாகரன் மீது புழுதி வாரித் தூற்றுவதன் மூலம், உண்மையான  குற்றவாளியின் மீது பதியும் சர்வதேசப் பார்வையைத் திசை திருப்புவது…
போர்க்குற்றம் – என்கிற வார்த்தையின் மூலம், நடந்தது  இனப்படுகொலை என்கிற அப்பட்டமான உண்மையை மூடிமறைப்பது….
ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் பிரபாகரன் பிறப்பான் – என்று பிரச்சாரம் செய்வதன் மூலம், கொதித்தெழுந்து நியாயம் கேட்கும் தமிழினத்தின் மனோதிடத்தைச் சிதைப்பது…
வெளியில் சொல்ல இயலாத வேதனையோடுதான் இதையெல்லாம்  கவனித்து வருகிறேன்.

இன்னொன்றையும் கவனிக்கிறேன்….. ஏற்றிப் போற்றுகிற போர்வையில் பிரபாகரனை ஏறிமிதிப்பதையும், ஒன்றரை லட்சம் உயிர்களுக்கு நீதி கிடைப்பதைத் தடுப்பதையும் நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறவர்கள் யாரோ – அவர்கள்தான் குழப்பத் திலகம் சுமந்திரனைத் தூக்கிப்பிடித்து நிறுத்தப் பார்க்கிறார்கள். சந்தேகமே இல்லை, அவர்கள்தான் இவர்கள். இவர்கள்தான் அவர்கள்.

‘சுமந்திரன்தான் சர்வதேச விசாரணை கோரினார்’ என்று கூசாமல் பேசுகிற இந்த  மரப்பாச்சிகள், ‘ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் பிரபாகரன் பிறப்பான்’ – என்று உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசக் கூசுவதேயில்லை. நசுக்கப்படுகிற ஓர் இனத்தில், நடந்த இனப்படுகொலைக்கு நீதி மறுக்கப்படுகிற ஓர் இனத்தில் ஆயிரம் நிமிடத்துக்கு  ஒருமுறை…… ஏன்…. ஆயிரம் நொடிக்கு ஒரு முறை கூட  பிரபாகரன்கள் பிறக்க நேரலாம். மரப்பாச்சி பொம்மைகள் இதை உணர்ந்துகொள்ள வேண்டும்.

எனக்கென்னவோ, தமிழ் மரப்பாச்சி பொம்மைகளைக் காட்டிலும், சிங்கள இனத்தில் பிறந்தும் விதிவிலக்காக இருக்கிற மனிதர்கள் எவ்வளவோ தேவலை என்று தோன்றுகிறது. அதற்கு உதாரணமாகத் திகழ்கிறார், ‘கொழும்பு டெலிகிராப்’ வாசகர் ஒருவர். அவரது கருத்துக்களை, செய்திகளின் பின்னூட்டத்தில் தொடர்ந்து கவனித்து வருகிறேன் நான்.

சென்றவாரம், அதிர்ச்சியூட்டும் செய்தி ஒன்றை  வெளியிட்டிருந்தது, கொழும்பு டெலிகிராப். மகிந்தனின் 2015 சதித் திட்டத்தை அம்பலப்படுத்தியிருந்தது, அது.

ஜனவரி 8ம் தேதி ஜனாதிபதி தேர்தலில் தோற்றபிறகு, பௌத்த ஆலயங்களுக்குப் போக ஆரம்பித்தான் மகிந்தன். பௌத்த பிக்குகளைச் சந்தித்துப் பேசினான். வெளிப்பார்வைக்கு, அது மதம்  தொடர்பான விஜயம் போல்தான் தெரிந்தது. உண்மையில்,  பௌத்த ஆலயங்களின் பின்னணியில் புதிய பாசிஸ்ட் இயக்கம் ஒன்றை உருவாக்குவதுதான் அந்தச் சந்திப்புகளின் நோக்கமாக இருந்திருக்கிறது. அந்தச் சதிதான், கொழும்பு டெலிகிராப் செய்தி மூலம் அம்பலமாகியிருக்கிறது.

மகிந்தன் குடும்பத்தின் மீது ஒரு துரும்பு பட்டாலோ, மகிந்தன் கைது செய்யப்பட்டாலோ, வீதிக்கு வந்து போராடும் அளவுக்கு அந்த இயக்கம் வலுவாகக் கட்டமைக்கப்பட இருந்ததாகவும், இது தொடர்பான விரிவான  விசாரணை அறிக்கை ஜனாதிபதிக்குப் போயிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது கொழும்பு டெலிகிராப்.

கதிர்காமத்துக்குப் போய் முருகப் பெருமானுக்கு மகிந்தன் வேல் கொடுத்தது உங்களுக்கு நினைவிருக்கும். பௌத்தப் பள்ளிகளுக்கு மட்டும் சென்றால் சந்தேகம் எழலாம் என்பதால், இப்படியொரு பௌத்தத் தீவிரவாதச் சதியை மறைப்பதற்காக, அனைத்துமதக்  கோயில்களுக்கும் போவது போன்ற ஒரு தோற்றத்தை மகிந்தன் உருவாக்கியிருக்கக் கூடும் என்று இப்போது தோன்றுகிறது.

இந்தச் சதிச் செய்தி தொடர்பாக கருத்துத் தெரிவித்த கொழும்பு டெலிகிராப் வாசகர்களில், முதலில் நான் குறிப்பிட்ட அந்த வாசகரும் ஒருவர்.  ‘தலிபன் கலாச்சாரத்துக்கும் பௌத்தக் கலாச்சாரத்துக்கும் எந்த வித்தியாசமும் இல்லை… ராஜபக்ச போன்றவர்கள் இதைப் புரிந்துகொண்டுதான் பௌத்தப் பள்ளிகளுக்குப் போகிறார்கள்….  இது நாட்டுக்கு நல்லதில்லை… பண்டாரநாயகவைக் கொன்றது ஒரு பௌத்த பிக்குதான் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது’ என்றெல்லாம் எச்சரிக்கை மணி அடித்திருக்கிறார் அவர்.

‘மகிந்த கும்பலின் போர்க்குற்றங்கள், பாலியல் வன்முறைகள், அப்பாவிப் பொதுமக்கள் மற்றும் பத்திரிகையாளர்கள்  படுகொலை ஆகியவை தொடர்பாக உடனடியாக விசாரிக்க வேண்டும்’ என்கிறார் இன்னொரு வாசகர்.

‘மகிந்தனைக் கூண்டில் அடைக்காவிட்டால், இலங்கையை நிம்மதியாக உறங்கவிடமாட்டான்’ என்பது வேறொரு வாசகரின் கருத்து.

சிங்கள மக்களின் மனநிலையே இப்படியிருக்கையில், அமெரிக்காவும் இந்தியாவும்  சுமந்திரன்களும் மனசாட்சியே இல்லாமல் மகிந்த சேவையில் தங்களை அர்ப்பணித்துக் கொள்ள முயல்வது ஏன்?

இந்த வஞ்சகங்களைப் பற்றியும் நயவஞ்சகங்களைப் பற்றியும்  ஐயம் திரிபற எழுதுவதற்கான தரவுகளைத் தேடுவதுதான், என் திரைப்படப் பணிகளுக்கு இடையில் ஆகப் பெரிய வேலையாக இருக்கிறது எனக்கு! ‘நாய்க்கு எங்கு கல் பட்டாலும், காலைத்தான் தூக்கும்’ என்கிற மின்னஞ்சல் நண்பரின் தகவலை  உறுதிசெய்துகொள்ள நிஜமாகவே எனக்கு நேரமில்லை.

மின்னஞ்சலில் இவ்வளவு நாகரிகமாக என்னைக் கண்டிக்கிற அந்த முதிய நண்பர், நீண்ட நாட்களாக நாய்களைத் தொடர்ந்து சென்று பார்த்துப் பார்த்து, அந்த அனுபவத்தால் தான் இவ்வளவு அழுத்தந் திருத்தமாக எழுதுகிறார் என்று உறுதியாக  நம்புகிறேன். நேரடி  அனுபவத்தின் மூலம் விலங்கியல் அறிவை விருத்தி செய்து கொண்டிருக்கும் அந்த மின்னஞ்சல் நண்பருக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள்!

-http://www.pathivu.com

TAGS: