தாய்மொழிப்பள்ளிகள்: சிங்கப்பூரை பார் என்றால் போதாது, அமைச்சரே!

-கீ. சீலதாஸ், வழக்குரைஞர், செப்டெம்பர் 29, 2015.

siladassமலேசிய கல்வி அமைச்சர் மாட்ஸீர் காலிட், மூவினப்பள்ளிகளையும் ஒரே இடத்தில் அமைப்பதைப்   பற்றி சிந்திக்கவேண்டுமெனக் கூறியுள்ளார்.  தேசிய ஒற்றுமைக்கு கல்வி ஒரு முக்கிய காரணமாக இருக்குமானால் அதற்கான முன்நடவடிக்கைகளையும் நிச்சயமாக மேற்கொள்ள வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதில் எந்தச் சிக்கலும் இல்லை என்பதை ஒப்புக்கொள்ளலாம். ஆனால்,  மலேசியாவிலிருந்து சிங்கப்பூர்  9.8.1965 இல்  பிரிந்து சென்ற போது அந்நாட்டிலுள்ள இனவாரி மொழிப்பள்ளிகளை மூடிவிட அன்றைய பிரதமர் லீ குவான் யூ எடுத்த முடிவைச் சுட்டிக்காட்டும் மாட்ஸீர் காலிட், சிங்கப்பூரில் இயங்கிய மலாய், சீன மற்றும்  தமிழ்ப்பள்ளிகளை  மூடிவிடவேண்டுமென்று எடுக்கப்பட்ட முடிவானது எத்தகைய திட்டங்களோடு அவை மூடப்பட்டன என்பதை விளக்கத் தவறிவிட்டார்.

அதோடு,  மேலோட்டமாக மொழிவழிப் பள்ளிக்கூடங்களை  மூடிவிட வேண்டும் என்று கூறும் போது, இந்த  நாட்டில் அது சீன மற்றும் தமிழ்ப்பள்ளிக்கூடங்களை மட்டுமே  குறியாகக் கொண்டிருக்கிறது என்ற சந்தேகத்தைத் தவிர்க்க முடியவில்லை.  ஏனெனில்,  மலாய்  தேசிய மொழி. அது நிச்சயமாகத்  தழைத்தோங்க வேண்டும். அதன் வளர்ச்சிக்கு எந்த ஊறும் நேராதவாறு பார்த்துக் கொள்ள வேண்டியது இன்றியமையாததாகும்.

 

சிங்கப்பூரில் நான்கு அதிகாரத்துவ மொழிகள்

 

சிங்கப்பூர் கல்வி முறையைப் போற்றி அதைப் பின்பற்ற வேண்டும்  என்பவர்கள் அதன் உண்மையான,  பலனளிக்கும் தன்மையையும் madzirkhalidதரத்தையும் உணர்ந்து அதை வெளிப்படுத்தத் தயங்கக்கூடாது. சிங்கப்பூரை பார் என்று சொன்னால் மட்டும் போதாது. அங்கு எது எப்படி செய்யப்படுகிறது என்பதை மூடிமறைக்காமல் கூற வேண்டும்.

சிங்கப்பூரில் நான்கு மொழிகள் அதிகாரத்துவ மொழிகளாகும். மலாய் தேசிய மொழியாகும்.  இந்த நான்கு மொழிகளும் அவற்றின் தகுதியை  நிலைநாட்டிக்கொள்ள வேண்டுமாயின் அதற்கு வலிமையான கல்வித் திட்டம் தேவை.  இந்தக் கல்வித்  திட்டத்தின் வழி நான்கு மொழிகளுக்கும் பாதுகாப்பு இருக்கும்.  இந்தப் பாதுகாப்பை எவ்வாறு வழங்குவது?  இங்குதான் சிங்கப்பூர் அரசின் தூரநோக்குப் பார்வையை உணர வேண்டும்.  மலாய்மொழியும்;  ஆங்கிலமும் கட்டாயப்பாடங்கள்.  அவ்வாறே தாய்மொழியும் கட்டாயமாக்கப்பட்டது.

இந்தத் திட்டத்தின் வழி தமிழ்ப் பெற்றோரின் பிள்ளைகள் அரசினர் பள்ளியில் கற்க தொடங்கும் போது அங்கே தமிழ் கட்டாயமாகக் கற்றுக் கொடுக்கப்படுகிறது.

சீனம், ஆங்கிலம் மற்றும் மலாய் போன்ற மொழிகளுக்கும் இதே நிலைதான்.

இதற்கு நல்ல ஆசிரியர்கள் தேவைப்பட்டது..  மலேசிய மாநில தமிழாசிரியர்கள் சிங்கப்பூருக்கு சென்றது ஆச்சரியமல்லவே!.  புகழ்பெற்ற பாரதிதாசன் தமிழ்ப்பள்ளி,  உமறுப் புலவர் உயர்நிலைப்பள்ளி இந்த சிங்கப்பூர் கல்வித் திட்டத்திற்கு வழிவிட்டன.

 

பள்ளிகளில் சமயப் போதனை இல்லை

 

இவற்றிற்கெல்லாம் முத்தாய்ப்பு வைத்தாற்போல் சிங்கப்பூர் பள்ளிக்கூடங்களில் சமயப் போதனைத் தவிர்க்கப்பட்டது. அதோடு தேசிய ஒருமைப்பாடு மற்றும் தேசிய சேவை போன்றவற்றின் மகத்துவம் கற்பிக்கப்பட்டது.

சிங்கப்பூரின் கல்வித் திட்டத்தைப் பற்றி பேசுவோர் அது நல்கும் பல நல்ல அம்சங்களை ஏற்றுக் கொள்ளதயாராக இருக்கிறார்களா என்பதை வெளிப்படுத்தவேண்டும்.  அதைவிடுத்து,  சிங்கப்பூர்   மலாய்,  சீன, தமிழ்பள்ளிகளை மூடிவிட்டதால் தேசிய  ஒற்றுமையைக் கண்டது என்றால், இந்த நாட்டில் உள்ள தாய்மொழிப்பள்ளிகளை அழிக்க  வகுக்கப்படும்   திட்டங்களில் ஒன்று சர்க்கரைப்பூசிய  செய்தியாக வருவதில் உள்ளே கசப்பு இருப்பதை மறந்துவிட முடியாது.

 

கரைந்து விடுகிற வாக்குறுதிகள்

 

இந்தக் காலக்கட்டத்தில்,    நம்மை துன்புறுத்துகின்ற ஒரு சூழலையும் கவனத்தில் கொள்வது பொருந்தும்.

umnologoஅம்னோவின் தலைமைத்துவத்தால் கொடுக்கப்படும் வாக்குறுதிகள் கால மாற்றத்தால்,  தலைமைத்துவ மாற்றத்தால்  கரைந்துவிடுகிற தரத்தைக் கொண்டது என்பது நாம் அறிந்த உண்மையாகும்.

அம்னோ, நாட்டின் நலனைக் கருத்திற்கொண்டு செயல்படுகிறதா  அல்லது இன,  சமய கொள்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில் சிரத்தைக் கொண்டிருக்கிறதா என்பதை தெளிவுப்படுத்தும் பொறுப்பு அதற்கு உண்டு.

இங்கே மற்றுமொரு   உண்மையை கருத்தில் கொள்ள வேண்டும்.  சுதந்திரத்திற்கு  முன்னரும் பின்னரும்,  கடந்த அறுபது ஆண்டுகளாக,  சீன,  இந்திய சமூகங்கள் அம்னோ அளித்த  வாக்குறுதிகளை நம்பி  செயல்பட்டன.

மலாயா,  மலேசிய    சமுதாயத்தோடு அவர்கள் ஒன்றுபட்டு விட்டனர்.  இதை ஒரு சில அம்னோ தலைவர்களும்,  அவர்களை ஆதரிப்பவர்களும் உணராதது ஒருபுறமிருக்க, உதட்டளவில் இந்தச் சமூகங்களின் தியாகங்களை அங்கீகரித்து  விட்டு  அடுத்தாற்போல் அவர்களை ஒதுக்கும்,  அவமதிக்கும் பழக்கத்தை நிறுத்திக்கொண்டு விட்டார்களா என்பது தெளிவுப்படுத்தப்பட வேண்டும்.