கேரளாவில் மாட்டிறைச்சி விவகாரம்… பேராசிரியருக்கு கொலை மிரட்டல்- டி.வி. தொகுப்பாளருக்கு அடி உதை!

kerala-map1-600திருவனந்தபுரம்/ ஆழப்புழா: மாட்டிறைச்சிக்கு தடை விதிப்பதை கேரளாவில் எதிர்த்து குரல் கொடுத்த பேராசிரியைக்கு இந்துத்துவா அமைப்புகள் கொலை மிரட்டல் விடுத்துள்ளன. அதே நேரத்தில் மாட்டிறைச்சி திருவிழா நடத்துவதை எதிர்த்த டி.வி. தொகுப்பாளர் தாக்கப்பட்ட சம்பவமும் கேரளாவில் நடந்துள்ளது.

கேரளாவின் ஸ்ரீகேரள வர்மா கல்லூரியில் மலையாள துறை உதவி பேராசிரியராக பணியாற்றுபவர் தீபா நிஷாந்த். இவர் சமூக வலைதளங்களான ஃபேஸ்புக் உள்ளிட்டவற்றில் “மாட்டிறைச்சி” தடைக்கு எதிராக ‘மாட்டிறைச்சி திருவிழாக்கள்’ நடத்துவதை ஆதரித்து கருத்துகளை வெளியிட்டு வருகிறார்.

உத்தரப்பிரதேசத்தில் மாட்டிறைச்சி சாப்பிட்டதாக கிளம்பிய வதந்தியில் இக்லால் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தைக் கண்டித்து தீபா நிஷாந்த் பணிபுரியும் கல்லூரியில் மாணவர் அமைப்பான எஸ்.எப்.ஐ. மாட்டிறைச்சி திருவிழாவை நடத்தியது.

இதை ஆதரித்தும் கருத்துகளை பதிவிட்டிருந்தார். இதற்கு பா.ஜ.க.வின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி. கடும் எதிர்ப்பு தெரிவித்து கொலை மிரட்டல் விடுத்துள்ளது. டி.வி. தொகுப்பாளருக்கு அடி உதை இதனிடையே மாட்டிறைச்சி திருவிழாக்களை நடத்த எதிர்ப்பு தெரிவித்த டி.வி. தொகுப்பாளர் ராகுல் ஈஸ்வரை கல்லூரி மாணவர்கள் கடுமையாக தாக்கியுள்ளனர்.

சபரிமலையின் முன்னாள் தந்திரி கண்டராரு மகேஸ்வரருவின் பேரன் ராகுல் ஈஸ்வர் டி.வி. தொகுப்பாளராக இருக்கிறார். டி.வி. நிகழ்ச்சிகளில் மாட்டிறைச்சி சாப்பிடுவதற்கு ஆதரவாக நடத்தப்படும் மாட்டிறைச்சி திருவிழாக்களை கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்த நிலையில் காயம்குளத்தில் உள்ள எம்.எஸ்.எம். கல்லூரியில் நிகழ்ச்சி ஒன்றுக்காக ராகுல் சென்றிருந்தார்.

அப்போது மாட்டிறைச்சி திருவிழா ஆதரவாளர்கள் ராகுலின் காரை மறித்து கடுமையாக தாக்கியுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராகுல், எனக்கு அதிர்ச்சியாகவும் இருக்கிறது அச்சமாகவும் இருக்கிறது.. கேரளாவில் மாட்டிறைச்சி திருவிழாவை ஆதரிக்காமல் ஒருவர் உயிர்வாழ முடியாதா? என கொந்தளித்திருக்கிறார்.. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

tamil.oneindia.com

TAGS: